தி.நகரில் நலிவடையும் பொக்கிஷக்கடல்

2009 December 21
vizhiyan ஆல்

தியாகராய நகர் செல்வதென்றாலே கொஞ்சம் எரிச்சல் தான். அந்த வெயிலும், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும் கொஞ்சம் எரிச்சலுற செய்தாலும், அங்கே கிடைக்கும் சமோசாவிற்காகவும், கரும்பு பானத்திற்காகவும் தலையசைத்து கிளம்பிவிடுவேன். சென்ற சனிக்கிழமை பொங்கலுக்கு புத்தாடை எடுக்கலாம் வாங்க என வீட்டில் எல்லோரும் கிளம்பினோம். எல்லோரையும் சென்னை சில்க்ஸில் தள்ளிவிட்டு நடை கட்டினேன்.

எதிர் புறத்தில் பாரதி பதிப்பகம் என்று இருந்தது. என் முதல் புத்தகத்தை அச்சடித்தது பாரதி புத்தகலாயத்தில், அதுவா என்கின்ற சந்தேகம். அது வேறு இது வேறு என்பது அருகே சென்றபோது தெரிந்தது. புத்தகம் ஏதேனும் கிடைக்குமாவென பார்த்தால், கடை மூடி இருந்தது. இரண்டு கடைகள் தள்ளி ஒரு பழைய புத்தக கடை. பல முறை இதே சாலையில் கடந்து சென்றுள்ள போதும் இந்த கடை கண்ணில் சிக்கியது கிடையாது. பழைய புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம்.

ஐய்யப்ப மாலை போட்ட ஒரு பெரியவர் அங்கும் இங்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு பரபரப்பாக இருந்தார். புத்தகம் வாடகைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. எதை நம்பி புத்தகம் கொடுப்பார்? சின்ன வயதில் பள்ளிக்கு பக்கத்தில் ஜீ.கே லைப்ரரி என்று ஒரு நூலகம் இருக்கும். நண்பன் ஒருத்தன் மட்டும் அதில் உறுப்பினர், நாங்க எல்லோரும் புத்தகம் எடுத்துக்கொள்வோம். “ஐயா, புத்தகம் வாடகைக்கு தருவீங்களா?” என்று கேட்டேன். “வாடகைக்கு என்ன சார், விலைக்கே எடுத்துக்கோங்க..” என்று உள்ளே வரவேற்றார். நுழைந்தவுடன் சேதன் பகத்தில் சில புத்தகங்கள் தரையில் இருந்தது. மேலும் சில சமீபத்திய வார/மாத இதழ்கள் இருந்தது.

ஏன் சார் ஏன் புத்தகங்களை விக்கறீங்க..

எவன் சார் படிக்கிறான் இந்த காலத்தில. படிக்கிற பழக்கமே போயிடுச்சு. எவ்வளவு அருமையான புத்தகங்கள் எல்லாம் வருது வந்திருக்கு, அதெல்லாம் இப்ப இருக்கறவங்க படிக்க்கறதே இல்லை.”

அவர் பாட்டுக்கு தன் வேலையில் மூழ்கினார். என்னைப்போல எத்தனைபேரை பார்க்கின்றாரோ தெரியவில்லை. உள்ளே பழைய புத்தக வாசம் சுண்டி இழுத்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள். கல்லூரி முடித்த காலத்தில் புவனபாரதி என்றொரு நூலகம் எங்கள் பள்ளிக்கு முன்பாக இருந்தது. அதன் நூலகர் என் வகுப்பு தோழியின் தந்தை. என்ன வகையான வாசகர் இவர் என புரிந்து வைத்து, சரியாக புத்தகம் எடுத்து தருவார் பரிந்துரைப்பார். அதே சமயம் மெல்ல மெல்ல தீவிர வாசகராக மாற்றி விடுவார். அவர் எனக்கு பரிந்துரைத்த ஆசிரியர்களின் பெயர்களை கண்டவுடன் கொஞ்சம் பரவசம் அடைந்தேன். ஆனாலும் அவர்களை நான் அனுகியதே இல்லை.

குழந்தைகள் புத்தகத்தில் முதலில் துவங்கினேன். அம்மா சொன்ன கதைகளில் ஆரம்பித்து, சாச்சா செளதிரி, நடு இரவு திகில் கதைகள்,காகமும் அன்னமும், என்று தலைப்பிட்ட புத்தகங்களை சேகரித்தேன். அள்ள அள்ள ஆனந்தம் தான் போங்க. வரிசையாக டிங்கிள் புத்தகங்கள். பல காமிக்ஸ்கள். மாயாவி கதைகளை ஏராளமாக சின்ன வயதில் படித்துள்ளேன். சில நாட்களாகவே அந்த புத்தகங்கள் மீண்டும் வாசிக்க கிடைக்குமா என ஏங்கிய தருணத்தில் இங்காவது கிடைக்குமா என கிண்டி பார்த்தேன், தோண்டிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. (நண்பர்கள் யாரித்தேனும் இருந்தால் தெரிவிக்கவும். படிச்சிட்டு கண்டிப்பா திருப்பி கொடுத்திடறேன்).

வாசலில் மூன்று கல்லூரி பெண்கள். “வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்…” “ஹாரி பாட்டர் இருக்கா..” ” எந்த பகுதி..”..”ரெண்டா மூனாடி..??” “ரெண்டு…” நமுட்டு சிரிப்புடன் மீண்டும் தேடலின் அமர்ந்தேன். ஆமாம் கீழே உக்காந்துகிட்டேன். நீண்ட நேரம் நிற்கவோ குனியவோ முடியவில்லை. இப்போது தமிழ் நாவல்கள் பக்கம். நிறைய கசடுகள் இருந்தாலும் சில மாணிக்கங்களும் தென்பட்டன. பல புத்தகங்கள் 1959, 1964, 1976, 1960 என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள் போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவற்றை நல்ல பைண்டிங் செய்து வைத்திருக்கின்றார். ஆர்வமும், அலாதி இன்பமும் இல்லாமல் இது போன்ற காரியங்களை வெறும் வியாபாரத்திற்காக செய்ய இயலாது. கா.நா.சு வின் நாவல் கிடைத்தது. இலக்கிய சிந்தனையின் சிறுகதை தொகுப்புகள் சில கிடைத்தது. லியோ டால்ஸ்டாயின் புத்தகமும் சேர்ந்தது. பிரபஞ்சனின் ஒரு நாவல், இரா. முருகனின் நாவல் ஒன்றும், பாக்கியம் ராமசாமியின் நாவல் ஒன்றும் சிக்கியது (வாங்கிக்கொண்டு வந்ததும் அப்பா அந்த புத்தகத்தை வைத்து ரசித்து ரசித்து படித்தது மகிழ்வாக இருந்தது. “ரொம்ப நல்லா எழுதுவார்..” என்றார் )

அலைபேசி அழைப்பு வந்த போது தான் நான் தங்கமணிக்கு ஒரு புது அலைபேசி வாங்க தான் கடையைவிட்டு எஸ் ஆனது நினைவிற்கு வந்தது. புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து எவ்வளவு என்றேன். கேட்ட விலையினை கொடுத்துவிட்டேன். பக்கத்து கடைகளில் என்ன விலை போட்டாலும் மறுப்பேதும் சொல்லாமல் பல்லிளித்து வாங்குவதை விட இது எவ்வளவோ மேல். அதுவும் கண்ணெதிரே புத்தகங்களை கட்டி காத்த ஒரு பெரியவருக்கு உதவினோம் என்கின்ற ஒரு திருப்தி.

“42 வருஷமா கடை வேச்சி இருக்கேன். எதிரில இருக்காரே தங்க கடை மொதலாளி, சின்னப்பயனா தெரியும் என் கடையில தான் தினமும் படிப்பாரு, இப்ப பணத்தில மெதக்குறாரு. கண்ணதாசன், வாலி, எல்லோரும் நம்ம கடைக்கு வந்து புத்தகம் எடுத்துட்டு போவாங்க. ரொம்ப பேமஸான நூலகம். ஈஸ்வரி புக் ஹவுஸ் தெரியுமா? அவரோட தம்பி தான் நான். டைம்ஸ் ஆப் இண்டியா, (இன்னும் இரண்டு இதழ்கள்) அதிலெல்லாம் என்னோட கடை வந்திருக்கு. பேட்டி எல்லாம் எடுத்திருக்காங்க. இப்ப யாரும் படிக்கறதே இல்லை. ஏதோ பொழப்பு ஓடுது”

“ரசமான புத்தகம், பொக்கிஷங்களை எல்லாம் வைச்சிருக்கீங்க..”

“என்னத்தை வெச்சி என்ன செய்ய.. இன்னும் மேல செல்லரிச்சு நிறைய புத்தகம் இருக்கு. எடைக்கு போடும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்…”

அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்ததோ இல்லையோ எனக்கு அடைத்தது. பொக்கிஷங்களை எடைக்கு போடும் அவலத்திற்கு சென்றுவிட்டோம்.

இலக்கியத்தில் புரல்வதாலோ என்னவோ அவர் பேசிய வார்த்தைகள் அனைத்து உள்ளே சென்றுவிட்டன. ஒரு இலக்கிய கதாபாத்திரத்திற்கான அனைத்து அடையாளமும் அவரிடம் இருந்தது. வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும் கையாளும் விதம் நேர்த்தி.

“நானும் எழுதறேன். குழந்தைகளுக்கு…” என்ற போது, வாழ்த்தி நல்லா எழுதுங்க நிறைய எழுதுங்க என்றார் கை குலுக்கி, மகிழ்வுடன், கள்ளமில்லா புன்னகையுடன், பரந்த மனதுடன்.

உங்களிடம் ஒரு விண்ணப்பம் தான்.
1. சென்னையில் இருப்பவர்கள் சமயம் கிடைக்கும் போது இந்த கடைக்கு சென்று புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள். (முடிஞ்சா என்னையும் கூப்பிடுங்க..நேரம் இருந்தா வரேன்)
2. வெளியூர் நண்பர்கள், உங்களுக்கு தேவையான பழைய புத்தகங்களை இவருக்கு தொடர்பு கொண்டு, புத்தகம் இருக்கும் பட்சத்தில் நானே வாங்கி அனுப்ப முயற்சிக்கிறேன்.

ரவிராஜ்
அலைபேசி எண் 91763-12489
Raviraj Lending Library
Old No 63, New no 45, Usman Road
T.Nagar
Chennai – 17
(சென்னை சில்க்ஸில் இருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டிடம்)

- விழியன்

(பின் குறிப்பு : புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்திய அனைவருக்கும், வந்திருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!)

என் இரண்டாம் புத்தக வெளியீடு

2009 December 9

அன்பின் நண்பர்களுக்கு,

ஓர் மகிழ்வான செய்தி. குழந்தை இலக்கியத்திற்கான என் பங்களிப்பின் முதல் முயற்சியாக “காலப் பயணிகள் /ஒரெ ஒரு ஊரிலே” என்ற தலைப்பில் இரண்டு சிறுவர் நாவல் ஒரே புத்தகமாக வெளிவருகின்றது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகின்றனர். திரிசக்தி, தேவதை, தமிழக அரசியல் என்ற மூன்று இதழ்களை வெளிக்கொண்டு வரும் திரிசக்தி நிறுவனம் முதல் முயற்சியாக இருபது புத்தகங்களை வெளியிடுகின்றனர். வெங்கட்சுவாமிநாதன், இரமணன், ஹரிகிருஷ்ணன், வீரராகவன், காதம்பரி, மரபின் மைந்தர் முத்தையா, நிலாரசிகன் போன்றோருடைய புத்தகங்கள் இதில் அடங்கும்.

சென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில், டிசம்பர் 20ஆம் தேதி மாலை 6.00 மணி வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. என்னுடைய புத்தகத்தை எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகின்றார். ஒரு குழந்தை நட்சத்திரம் புத்தகத்தை பெற்றுக்கொள்வார்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai - 2 ]

நூல் விபரம்:
பெயர்: காலப் பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே
பகுப்பு : சிறுவர் நாவல்
பக்கம் : 122
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
கிடைக்குமிடம் : டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும்,

என் ஆத்ம நண்பன் நிலா(நிலாரசிகன்)வின் சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் என்கின்ற புத்தகமும் இதே மேடையில் வெளியாகின்றது. இது என் மகிழ்வினை இரட்டிக்கின்றது.

அனைவரும் தவறாது வந்து கலந்துகொண்டு (அனைத்து புத்தகங்களையும் வாங்கி :) ) விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

விழியன்

இதோ திரிசக்தியின் அழைப்பிதழ்.

Vizhiyan Photography – Elagiri – 2

2009 December 1

1. பூத்துக்குலுங்கும் பழங்கள்

2. மழையில் நனையும் பூவில் புதுவாசம்

3. இயற்கையின் சிற்பவேலை

4. காத்திருப்பு

5. அமைதிவனம்

6. சிலிர்ப்பு

7. அட புல் கூட அழகு தான்

8. கிணற்றில் குதிக்கலாமா?

9. கழுகுப்பார்வை

10. உன்னை பார்த்ததும் வெட்கப்படுகின்றது பூவும் தலை கவிழ்ந்தபடி

11. நாளைய சோறு

12. எழில்

13. அதிகாலை ரம்மியம்

14. தேன்நிலவு

முற்றும்.

-விழியன்

Vizhiyan Photography – Elagiri – 1

2009 நவம்பர் 30
vizhiyan ஆல்

1. காலை கதிர்களுடன் வரவேற்கும் ஏலகிரி – ஏழைகளின் ஊட்டி

2. பச்சையை விரும்பும் பனிகள்

3. முட்களும் நிறைந்தது தான் வாழ்க்கை

4. ??

5. கையில் பூத்த மலர்

6. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

7. ஏலகிரி ஏரி

8. தோகை விரித்திடும் மனதை சிலிர்த்திடும்

9. தனித்திரு

10. பூ அழகா புழு அழகா?

நான்காம் படத்திற்கு நல்ல தலைப்பை தர இயலுமா?

கடந்த வாரம் ஏலகிரிக்கு மீண்டும் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே எடுத்த புகைப்படங்களின் முதல் பகுதி இவை.

சில குறிப்புகள்
- வேலூரில் இருந்து 100 கி.மீ.
- வாணியம்பாடிக்கும் திருப்பத்தூருக்கும் நடுவே இருக்கின்றது.
- வேகமாக வெளியாட்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
- 14 கிராமங்களை கொண்டுள்ளது.
- பேருந்துகள் திருப்பத்தூரில் இருந்து மட்டும் செலுத்தப்படுகின்றது.
- கோடை விழாக்கள் இங்கே பிரபலம்
- ஒரு பெரிய ஏரி, அதில் படகு சவாரி
- முருகன் கோவில்
- புதிதாக பூங்காக்கள்
- மைசூரில் நடப்பது போன்ற music fountain

தொடரும்..

- விழியன்

நானும் நடனமும்

2009 நவம்பர் 11
vizhiyan ஆல்

நடனமும் நானும்:

சக தோழி ஒருத்தியின் நடன புகைப்படங்களை பார்த்தவுடன் ஏனோ மனம் நடனத்தின் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை அசைபோட வைத்தது.

ஐந்தாம் வகுப்பு.பாண்டிச்சேரியினை நோக்கி பள்ளியில் சென்ற போது முதல் முறையாக நடனமாடினேன். பேருந்தில். என் அக்காவும் அதே பள்ளியில் பணி புரிந்ததால், பரிந்துரையின் பெயரில் ரஜினியின் “ராஜா சின்ன ரோஜா”வுக்கு முதல் நடனம் அந்த வருடமே பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேறியது. அந்த நடனத்திற்கு நிறைய துணைக்கதைகள் உண்டு.

நடனத்தின் மீதான அன்பு அதிகரித்து முறையாக பரதம் பயில கிருஷ்ண கலா மந்திரில் சேர்ந்தேன். வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கல்யாண மண்டம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் இருந்தது. பரதம் பயின்ற நாட்களின் நினைவுகள் மிகவும் லேசாக தான் இருக்கின்றது. என்னுடன் அசோக் (கேடி என்ற புனைப்பெயரினை உடையவன்) என்னும் நண்பனும் சேர்ந்தான். சேர்ந்த சில நாட்களிலேயே என்னை காய்கறி வெட்ட சொல்றாங்க என்னால முடியாதுன்னு நின்றுவிட்டான். எனக்கு அப்படி ஏதும் கசப்பான அனுபவம் நேரவில்லை. அந்த கால சிஷ்யர்களின் பொறுமையினை வியக்க தான் வேண்டும். குருகுல கல்வி பயில இந்த கால மாணவர்களுக்கு பொறுமை நிச்சய்ம் கிடையாது, அதே போல குரு மீதான நம்பிக்கை, பக்தி துளியும் கிடையாது. அசோக் டிஸ்கோ மற்றும் சினிமா பாடல்களுக்கு தனியான குழு ஒன்றில் நடனமாடி சின்ன வயதிலேயே சம்பாரிக்கவும் ஆரம்பித்தான். எனக்கு வந்த அழைப்பினை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.

dance1

அந்த நடனப்பள்ளியில் எனக்கு தெரிந்து நான் மட்டும் தான் ஆண் மகன். அனைவரும் பெண்கள். சின்ன பயனுங்க. முதல் நாள் ஆசானிடம் காலில் விழும்போது “கமல் போல பெரிய ஆளா வரனும்” என்று ஆசிர்வதித்தார். அப்படி ஒரு பெருமிதம். கமல் தான் ஹீரோ. இன்று வரையிலும். என் பள்ளியினை மாணவிகள், சீனியர்கள் ஜூனியர்கள் என மாறிக்கொண்டே இருப்பார்கள். சில ஒரு மாதம் வருவார்கள். சிலர் சில நாட்கள் மட்டுமே வருவார்கள். சுமார் இரண்டு மூன்று வருடம் பயின்று இருப்பேன். அரங்கேற்றம் நடந்த நாளில் தான் மற்றும் ஒரு அண்ணனும் அங்கே பயில்கிறார் என்பது தெரியும். அன்றைய கலெக்டர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து, பரிசிகளையும் சான்றிதழ்களையும் பெற்றேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடனம், கராத்தே, ஹிந்தி வகுப்புகள் என நேரம் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. யாரோ சிலர் பரதம் பயின்றால் பெண்மை குணங்கள் அதிகமாகும் என்று சொல்லிவிட்டார்கள். லேசாக பயம் தொற்றிக்கொண்டது. நிஜம் என்றும் தோன்றியது. வீட்டில் வேறு ஏதோ சாக்கு சொல்லி பரதம் பயில்வதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் பரதம் ஆடுவது ஒரு போதை, ஒரு எல்லையில்லா ஆனந்தம், ஒரு தெய்வீக அனுபவமும் கூட.

தமுஎச நடத்திய கலை இரவொன்றில் “அமுத மலையின் என் கவிதை நனைகிறது” என்ற பாடலுக்கு நானும் இராதா என்னும் சிறுமியும் பரதம் ஆடினோம். சின்ன வயது முதல் கலை இரவுகளை நேசித்த எனக்கு அதே மேடையில் என் பங்களிப்பும் நடந்தது ஆனந்தத்தை கொடுத்தது. இதே மேடையில் தான் அன்றைய நாட்களில் பிரபலமாகாத லியோனியும் பங்குபெற்றார்.

dance1

இடைப்பட்ட காலத்தில் பரதம் அல்லாமல் பள்ளியில் நாட்டுப்புற நடனத்திற்கு பெயர் பெற்றுவிட்டேன். ஒரு முறை கும்பக்கரை தங்கையாயின் ஒரு பாடலுக்கு முதல் பரிசு கிடைத்தது. மாவட்ட அளவிலான பல போட்டிகளில் பரதம் மற்றும் இதர நடனங்களில் பங்கு பெற்று பல மாணவர்கள், பல்வேறு அனுபவங்களை பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பரதம் நிறுத்தியவுடன் உடம்பு பெருக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை தான். குண்டான உடல்கட்டுடன் நாட்டுப்புற நடனம் ஆடுவதால் பிரபு போல ஆடுகின்றான் என்பார்கள்.  தொன்பாஸ்கோ பள்ளியில் ஒரு விளையாட்டு ஆசிரியர் இருப்பார். எங்கேனும் ஆதரவற்றோர் பள்ளிகளில் விழாக்கள் நடக்கும் போது அழைப்பு விடுப்பார். அன்றைய தேதியில் வெற்றி பெற்ற பாடலுக்கு நடனமாடிவிட்டு வந்துவிடுவேன். மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகும் நாட்டுப்புற நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். படிப்பில் கவனம் சென்றதால் இதர வெளிப்புற நடவடிக்கைகள் குறைந்து போனது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு மேடை ஏறும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. தவிர்க்கும் படியும் ஆகிவிட்டது. சீனியர்களில் பிரிவு உபச்சார விழாக்களில் மட்டும் இரண்டு முறை ஆடினேன். கடைசி ஆண்டு நம் கடைசியாக ஒரு முறை நடனம் ஆடிவிடலாம் என்று நடன போட்டிக்கு பயிற்சித்தேன். Fusion நடனம், அதாவது பரதம் + மேற்கத்திய நடனம் + நாட்டுப்புற நடனம் என மூன்றையும் கலந்து ஆடிவிடலாம் என பயிற்சித்தேன். போட்டி நாளும் வந்தது, ஜூனியர் பெண் ஒருத்தி நடனமாடும் போது மாணவர்கள் கலாட்டா செய்ததில் போட்டி ரத்தாகி போனது.

வேலைக்கு சேர்ந்த பிறகு அங்கு நடைபெற்ற ஒரு மாலை விழாவில் களத்தில் குதித்து சிறப்பு பரிசினை பெற்றேன்.எல்லா ஆட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடந்தேறியது ஒரு விபத்து. இடக்கால் முட்டி பிசைந்துவிட்டது. அந்தக்காலுக்கு அதிகமான வேலை கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது முறைவைத்து எங்கேனும் மடங்கி விடுகின்றது. இதற்கு சிகிச்சை கிடையாது, உடல் பருமனை குறைத்தால் கால் தோல்லைகள் குறையும் என்றார்கள்.

ஆட்டத்துக்கு குட்பை. உங்களிடமிருந்தும் தற்போதைக்கு…

பூக்கார செல்வி – சிறுகதை

2009 அக்டோபர் 29
vizhiyan ஆல்

பூக்கார செல்வி – சிறுகதை

சென்னை பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நகரம்.  யாருக்கும் நிற்காத மனிதர்கள்.  சில சமயம் சோம்பலாய் நாம் இருந்தாலும் மற்றவர்கள் சுறுசுறுப்புத் தொற்றிக் கொள்ளும்.  பல்லவன் பேருந்து மாநகரப் பேருந்திற்கு பெயர் மாறிவிட்டது.  பெயர் மட்டுமே மாற்றம், அதே தகரம் போன்ற வண்டிகள், ஏதாவது ஒரு இருக்கையாவது உடைந்திருக்கும், ஏதாவது கைப்பிடி காணமல் போயிருக்கும்.  இருக்கை சரியாக இருக்கின்றதா என்று தொட்ட பின்னரே அமர்ந்தான் சுரேன்.  கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தேர்வை முடித்து கிடைத்த ஒரு வாரத்தை சென்னையிலுள்ள தன் மாமா வீட்டில் கழிக்க வந்திருந்தான்.  போரூர் கோபால கிருஷ்ணண் தியேட்டர் பின்னால் தான் அவன் மாமாவின் வீடு.  பேருந்து பாண்டி பஜாரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.  தன், பள்ளி தோழன் பாலாஜியை பாண்டி பஜார் வீதியில் “கிளோபஸ்” கடை முன்னர் சந்திப்பதாக திட்டம்.  தன்னுடைய கணிப்பொறி வகுப்புகளை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்திருந்தான் பாலாஜி.  சுரேன் வருடத்திற்கு ஒரு முறையாவது சென்னை வருவான். ஒரு வருடத்திற்கு முன்னர் பாண்டி பஜார் வந்திருந்தான். இப்போது மீண்டும்.

தொலைக்காட்சியில் நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நச்சரித்த/நச்சரிக்கும் விளம்பர கடைகளை நேரில் பார்வையிட்டான்.  வீடு திரும்ப என்ன பேருந்தை பிடிக்க வேண்டுமென மாமாவிடம் கேட்க மறந்தது நியாபகம் வந்தது. எத்தனை வழித்தடங்கள், எத்தனை பேருந்து எண்கள், எப்படித்தான் நினைவில் வைத்துக் கொண்டுள்ளார்களோ தெரியவில்லை.  தன் ஊரில் இரண்டு வழித்தடத்திற்கு இன்னும் குழம்புவான் எது எந்த வழி எண் என்று.  கடைகளை அன்னார்ந்து பார்த்துக் கொண்டே எங்கோ மோதினான்.  மோதியது செல்வி மீது.  செல்வி கீழே விழம் முன்னர் அவளை பிடித்தான் சுரேன்.  “நம் தன நம் தன என தாளம் வரும்” என்று பின்னிசை எழ வேண்டாம், செல்வி பத்து வயது குழந்தை.  பதினான்கு வயது வரை எல்லோரும் குழந்தைகள் தான்.  கழுத்திலே இருந்து தொங்கிய கயிறு, இடுப்பிலே பூக்கூடையை பிடித்திருந்தது.  மல்லிகை பூ கொஞ்சம் வாடிய நிலையில் இருந்தது.  கூடை மீது சின்ன கோணி துணி போட்டு, ஈரம் சொட்ட சொட்ட பூக்களை வாடாவிடாமல் வைத்திருந்தாள் செல்வி.

வெள்ளை நிறமா என்ற சந்தேகம் வருமளவிற்கு அழக்கேறியிருந்தது  அவள் சட்டை. நீல நிறத்தில் பாவாடை.  வருடா வருடம் இலவசமாக கிடைக்கும் பள்ளி சீருடை துணிகள் அவை.  நெற்றியில் காலையில் இட்ட சந்தனம், வேர்வை ஒழுகி, இருந்த அடையாளம் மட்டும் காட்டியது.  நல்ல வேளையாக பூக்கள் ஏதும் கீழே விழவில்லை, அதற்குள் தான் சுரேன் பிடித்துவிட்டானே. மூன்று நான்கு பேர் சூழ்ந்து விட்டனர்.  “சோமாறி ரோட்ல ஒழுங்கா போகமாட்டானே பேமானி” சுற்றி இருந்தவர்கள்.

“கொழந்தயோ பூவோ கீழ விழுந்தா நீயா துட்டு கொடுப்ப?”

“அத்தை, என் மேல தான் தப்பு, நான் தான் தடுக்கி விழுந்துட்டேன்.  அந்த அண்ணன் தான் புடிச்சாரு.  நீங்க வியாபரத்தை பாருங்க அத்தை.  அடப் போங்கண்ணே வேலைய பாருங்க” கூட்டத்தை விரட்டினாள் அந்த சிறுமி சுரேனை பார்த்து சின்னதாக புன்னகை.

ரோட்டோரத்தில் வித வித கடைகள். சகலமும் கிடைக்குமிடம்.  புத்தக  முதல் புத்தாடை வரை, வீட்டு சாமான்கள், விளையாட்டு பொம்மை, போர்வைகள், துணிமணிகள், செருப்பு முதற்கொண்டு சகலமும் இருந்தது.  பூமாலை தொடுத்து மாலை மாலையாக தொங்கியது.  எந்த தலைவர் கழுத்தில் விழப்போகிறதோ, இல்லை மறைந்தவர்களுக்கு மாலையாக எங்கே போகப் போகின்றதோ.  புத்தக கடையினில்  சில நேரம் கழித்தான் சுரேன்.  இன்னும் பாலாஜி வர முக்கால் மணியாவது ஆகும். செல்வி புத்தக கடையருகில் வந்தாள்.

“மன்னிசிடுங்க அண்ணே! பாக்காம இடுச்சிட்டேன்.  யாராவது ஏதாவது சொல்லியிருந்தா தப்பா நெனைச்சுகாதீங்க”

புத்தக கடை சோமு ”என்னாச்சு புள்ள” “ஒண்ணுமில்லைண்ணே”

“பூ வாங்கிக்கங்கண்ணே” என ஏக்கமாக பார்த்தாள் செல்வி

சுரேன் “இல்லம்மா வேண்டாம்”

நடக்க ஆரம்பித்தான்.  பின் தொடர்ந்தாள்.

“உங்க மனைவிக்கு வாங்கி கொடுங்கண்ணே, சந்தோஷப்படுவாங்க”

“இன்னும் கல்யாணம் ஆகலம்மா”

“அப்போ மனசுக்கு புடிச்சவங்களுக்கு வாங்கி தாங்க” மனதிற்கு பிடித்தவள்.  ராதாவின் பிம்பம் வந்து மறைந்தது.  மூர்ச்சையானான் அந்த இடத்திலேயே அவள் வாசம், ஸ்பரிசம்.

“ஹலோ, பிரதர்” நிஜத்திற்கு மீண்டும் வந்தான்.

“அப்படியாருமில்லைமா, இன்னும் சந்திக்கல”

“அட நான் அம்மாவுக்கோ, அக்கா தங்கச்சிக்கோ…” முடிப்பதற்குள் “எல்லாம் ஊர்ல இருக்காங்க”

“சரி, சாமிக்காச்சும் வாங்கி சுத்துங்களேன்”

“எனக்கு நம்பிக்கை இல்லை.  அதுவும் இல்லாம் இதுக்காக தேடி கோவிலுக்கு எல்லாம் போக முடியாது”. சாரி செல்வி.

தன் பெயரை கூப்பிட்டதும் சுரேன் மீது பாசம் பொங்கியது.  இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை பார்த்ததில்லை, பேசியதில்லை ஆனாலும் சுரேனுக்கு இவளிடம் பல வருடம் பேசிய, உறவாடிய சிநேகம் போல இருந்தது.

ஏய் சனியனை.  இங்க என்ன கதையடிச்சிட்டு இருக்க”.  எங்கிருந்து அவள் அத்தை வந்தாளென தெரியவில்லை.  சுரேன் உடலை சற்று திருப்பி டி-ஷட்டுகளை பார்த்தான், செல்வியை நோட்டம் விட்டே.

“அத்தே! இன்னிக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகணும். எழுத நிறைய இருக்கு.  பாடம் படிக்கணும்”.

“கழுதை, உன்னை பள்ளிக்கூடம் அனுப்பறதே, படாத பாடு படறேன்.  படிச்சு என்னத்த கிழிக்க போறியோ.  சரிசரி, இந்த கூடையில இருக்க பூவ வித்திட்டு ஊட்டுக்கு போ!  தம்பிக்கு காய்ச்சலடிக்குது நம்ம நாய்க்கர் கிட்ட காசு வாங்கியார்ரேன்.  காசு தரானோ இல்லையோ அந்த புண்ணியவான்”.

செல்வியை திட்டினாளா, பாசம் வைத்திருக்கிறாளா, சோகத்தை கொட்டினாளா, என்று குழம்பிபடியே சுரேன் அருகிலேயே நின்றிருந்தான்.

“ செல்வி, இங்க குளோபஸ் கடை எங்கிருங்கு”-சுரேன்.

குளோபஸ் எதிரே இருந்த டீக்கடையில் குடித்துக்கொண்டிருந்தான் சுரேன்.  சில நிமிடத்தில் செல்வி ஓடிவந்து டீக்கடைக்குள் ஓடினாள்.  தன் சட்டைக்குள் மறைத்து வைத்த புத்தகம் எடுத்து டீக்கடை முருகையனிடம் கொடுத்தாள்.  “மாமா, இதை மகேஷ் கிட்ட கொடுத்திருங்க, அவன் தமிழ் புக் கொடுத்தானா? நிறைய படிக்கணும் மாமா?”

“அந்த பையில் இருக்கு பாரு புள்ள”.  எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடினார் கடைவீதிக்கு.

“ரொம்ப சுறுசுறுப்பான பொண்ணு இல்ல”

“யாரு செல்வியையா சொல்றீங்களா?  அதுக்குள்ள தெரிஞ்சிடுச்ச அவள பத்தி”.

“மகேஷ், உங்க பையனா? ஒன்னா பாடிக்கறாங்களா செல்வியும் அவனும்? மாமான்னு கூப்பிடுதே சொந்தமா?”-அடுக்காய் கேள்விகள்.

என் புள்ள தான் மகேஷ்.  செல்வியும் அவனும் அஞ்சாங்கிலாஸ் படிக்கிறாங்க வேற வேற ஸ்கூல்.  இந்த கடையில தான் கிலாஸ் கழுவுவிட்டு இருந்தான் மகேஷ் போன வருஷம் வரைக்கும்.  இந்த பொண்ணு தான் என் கிட்ட சண்டை போட்டு அவனை ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னா.  படிச்சி என்  கஷ்டமெல்லாம் தீர்ப்பான்.

செல்வி எனக்கு சொந்தமில்லை தம்பி.  வயித்து சாப்பாட்டுக்கு திண்டாட்ற எல்லாரும் ஒரு இனம்.  சொந்தக்காரங்க தான்.  வந்தவர்களை கவனித்துக்கொண்டே செல்வியின் கதையினை சொன்னார் முருகையன்.

“அப்பன் குடிகாரன்.  ஒரு நாள் ரோட்டோரமா செத்துக் கிடந்தான்.  அவ அம்மாவுக்கும் என்ன நோயோ தெரியல பட்டுன்னு ஒரு மாசத்துக்கப்புறம் பின்னாடியே போய் சேர்ந்துட்டா.  அவ அப்பனோட தங்கச்சி மூக்காயி கிட்ட தான் வளருது செல்வி.  முக்காயி புருஷனும் எங்க போனான்னு தெரியல யாருக்கும்.  பூக்கடை வெச்சி பொழப்பு ஓடுது.  செல்வி, முக்காயி, அவன் பையன் முனு பேரு இருக்காங்க.  படிச்சே தீருவேன்னு ஒத்த கால்ல நின்னு பள்ளிக்கூடம் போகுது.  பள்ளிக்கூடம் விட்டதும் இங்க வந்து வியாபாரத்துக்கு ஒத்தாசையா இருக்கு.  லீவு நாள்ளையும் இங்க தான்.  பத்து வயசு தான் ஆகுது ஆனா படாதபாடு படுது.  மாமா, நான் படிச்சு டாக்டராவேன்னு சொல்லும், கேக்க நல்லா தான் இருக்கும். ஆனா இந்த பொண்ணு மனசு வெச்சா சாதிச்சிடும். ராவுல அவுங்க ஊட்ல கரண்ட் இல்ல, மகேசும் அவளும் எங்க குடிசையில தான் படிப்பாங்க”

சுரேன் கண்கள் குளமாயிருந்தது. தன்னை பற்றி யோசித்த் பார்த்தான். அப்பாவிடம் கல்லூரி செல்ல வண்டி வேண்டும், இல்லையெனில் போகவே மாட்டேன் என மிரட்டிய நாட்கள், தனி அறை வேண்டும் படிப்பதற்கு என்று முரண்டு பிடித்து மொட்டை மாடியில் அப்பா கடன் வாங்கி அறை கட்டிய நாட்கள், சுட்ட தோசை சரியில்லையென காசு வாங்கி ஓட்டலுக்கு சென்ற தினங்கள், இன்னும் என்னென்னமோ எண்ணங்கள் தன்னையும் செல்வியின் நிலையினையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டான். ஒப்பிடுதல் பல நேரங்களில் சரியில்லை தான். ஆயினும் சில நேரம் நம்மையும் தாண்டி ஒப்பிட செய்வதே மனித இயல்பு. வெட்கமாய் இருந்தது அவனுக்கு. மனது ஏதோ செய்தது. குமட்டலாகவும், தொண்டை வரண்டது போன்றும் இருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் பாலாஜி வந்து சேர்ந்தான். டீயும் ஒரு சிகிரெட்டும் வாங்கினான். பற்ற வைத்தான்.

“என்னடா இது புதுசா? “

“சாமியார் இன்னும் மாறலையா? தேர்டு இயர் போயிட்ட இன்னும் தம்மு கூட இல்லையா? என்னாடா வாழ்கை வாழற..”

அது கிண்டலும் கேலியுமாக. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாலும் சுரேனின் மனம் செல்வியை விட்டு விலகவில்லை.

“என்னடா ஒரு மாதிரி இருக்க மாமா..வீட்ல ஏதாச்சும் பிரச்சனையா?”

“கையில எவ்வளவு காசிருக்குடா?”

“நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு கேக்குற. ஏன் திடீர்னு? ரெண்டு நூறு ரூபா நோட்டு இருக்கு..”

சட்டைபையில் கைவிட்டு தாள்களை எடுத்தான். கடைவீதிக்குள் சென்று செல்வியை தேடிப்பிடித்தான். பார்த்ததும் புன்னகை பூத்தாள். இத்தனை பூகம்பத்திற்குள்ளும் என்ன சாந்தம். படித்துவிட்டோம் என்ற கர்வம் தலையில் இருந்து வேகமாக இறங்கியது. படிக்க வேண்டிய நிறைய இருக்கும் மனிதர்களிடம் இருந்து.

“செல்வி, எல்லா பூவையும் என் கிட்ட தா..”

“என்னண்ணே கோவில் கண்டுபுடிச்சிட்டீங்களா?”

அவளிடம் இரு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு ‘சில்லரை எல்லாம் வேணாம் செல்வி, மீதிய நீயே வெச்சுக்க, நோட்டோ படிப்பு செலவுக்கோ வெச்சிக்க. நல்லா படி. என்னால இப்போதைக்கு இது தான் முடிச்சது. உனக்கும் புரியுதான்னு தெரியல செல்வி, எங்கயோ போயிட்டு இருந்தவனை ஓங்கி அடிச்சி நீ போகவேண்டிய இது இல்லைன்னு உன் புன்னகை சொல்லிச்சு. என்ன செய்ய போறேன்னு இப்போதைக்கு சொல்ல முடியல, ஆனா நிச்சயம் செய்வேன். திரும்ப நான் இங்க வந்தா உன்னை பெரிய ஆளா பாக்கனும் செல்வி..”

அந்த சின்ன பெண் தன் கண்ணீரை பார்ப்பது முறையல்ல என்று வெட்கப்பட்டு, அவள் முகம் பாராமல் திரும்பி நடந்தான் டீக்கடைக்கு.

சுரேன் பாலாஜியிடம் “அக்காகிட்ட பூவை கொடுடா..”

“இவ்வளவா? எதுக்குடா? லூசாடா நீ?”

செல்வி அத்தையிடம் “ அத்தை, இந்தாங்க தம்பி மருந்து செலவுக்கு காசு “

- விழியன்

என்னை காப்பாற்றிய என் வலைப்பூ

2009 அக்டோபர் 27
vizhiyan ஆல்

2007.புகைப்படம் எடுக்க ஆரம்பித்த காலம். கண்டதை சொடுக்கிக்கொண்டிருந்த நேரம். காசி, இமயம் என ஊர் சுற்றிக்கொண்டிருந்த வருடம் அது.  அறைவாசிகள், மேல் வீட்டு நண்பர்கள் என கூட்டமாக வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டு மைசூர் தசரா திருவிழாவினை காண பெங்களூரில் இருந்து மைசூர் புறப்பட்டோம். வழியில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஹைதராபாத் கோட்டை என சுற்றிவிட்டு மைசூர் நகரை நோக்கி நகர்ந்தோம்.

நகரே திருவிழாக்கோலத்தில் இருந்தது. மகிழ்ச்சி போர்வையினை போர்த்திக்கொண்டிருந்தது. காலை உணவினை உண்டுவிட்டு சாமுண்டி மலைக்கு சென்றோம். சாமுண்டி தேவியை தரிசித்துவிட்டு கீழ் இறங்கினோம். இந்தியன் எக்ஸ்பிரசின் முதன்மை நிருபரை தர்மஸ்தலத்தில் சந்தித்து ஒரே அறையினை பகிர்ந்து சிநேகம் கொண்டிருந்தேன். அவரின் சொந்த ஊர் மைசூர். அவரின் பரிந்துரையின் பேரில் சில இடங்களுக்கு சென்றோம். யுவா நிகழ்ச்சி இளைஞர்களுக்காக நடக்கின்றது, நான் அங்கே வருகிறேன் வா சந்திக்கலாம் என அழைத்தார். அவர் அழைத்த இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் மாலைக்குள் மைசூர் அரண்மனைக்கு வருவது இயலாது என்பதால் அவரின் அழைப்பை நிராகரிக்க வேண்டியதாயிற்று. அவருடன் சென்றால் எங்கும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கலாம். அவர் தான் ஊடகத்தை சேர்ந்தவராயிற்றே.

(மைசூர் அரண்மனை புகைப்படங்கள் -  http://vizhiyan.wordpress.com/2007/10/16/vizhiyan-photography-16/ )

கண்காட்சிகள் போட்டிகள் என எல்லா அரங்குகளும், விளையாட்டு திடல்களும் நிறைந்து இருந்தது. மல்யுத்தம் நடக்கும் ஒரு திடலுக்கு சென்றோம். மல்யுத்தத்தை முதல் முறை நேரில் காண்கின்றேன்.திடலின் நடுவே செம்மண்னை கொண்டு மல்யுத்த மேடை அமைத்திருந்தார்கள். கொஞ்சம் இடம் விட்டு அந்த மேடையினை சுற்றி நாலாபுறமும் தடுப்பு அமைத்திருந்தார்கள். ஏராளமான கூட்டம் தடுப்பிற்கு அப்பால் இருந்தார்கள். கூடாரம் போல அமைந்திருந்ததால் நிழலில் அனைவரும் அமர்ந்தோம். எனக்கு பார்க்க பார்க்க அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்கின்ற ஆசை. அப்போது Zoom லென்சுகள் கைவசம் இல்லை. மல்யுத்த வீரர்களின் முகபாவங்களை எப்படியும் அருகே சென்று படம்பிடிக்க வேண்டும் என்கின்ற ஆவல் பெருகியபடியே இருந்தது.

போட்டியினை துவங்கி வைக்க கர்நாடகாவின் அமைச்சர் வருகின்றார் என அருகில் இருந்தவர்கள் கூறினார்கள். அதனால் பாதுகாப்பு பலமாக இருந்தது. மல்யுத்த மேடைக்கு அருகே பெரிய மேடை அமைத்து இருக்கைகள் போட்டிருந்தார்கள். மேடைக்கு உள்ளே செல்ல ஒரே ஒரு வழிதான், அங்கே 2-3 போலிஸ்சார் இருந்தார்கள். அன்று ஜிப்பா ஒன்றினை அணிந்து இருந்தேன்.

என்ன தான் நடக்கின்றது நான் அருகே சென்று படம் எடுக்கிறேன் என எழுந்து நடக்கலானேன். மனதில் லேசான பயம் கூட, நுழைவுவாயில் நுழையும் சமயம் கத்தையாக மீசை வைத்திருந்த போலிஸ்காரர் கன்னடத்தில் கேட்டார்

“பிரஸ்சா?”

ஆமாம் என்று தலையாட்டினேன்..

“எந்த பிரஸ்” என்பதை போல கேட்டார்.

கேமராவை காட்டி “WordPress” என்றேன்..

சல்யூட் வைத்து போங்க போங்க என புன்னகைத்தபடியே உள்ளே செல்ல அனுமத்தித்தேர்.

- விழியன்

(மைசூர் தசரா புகைப்படங்கள் – http://vizhiyan.wordpress.com/2007/10/15/vizhiyan-photography-15/

Vizhiyan Photography – Diwali 2009

2009 அக்டோபர் 21
vizhiyan ஆல்

தீபாவளி 2009 புகைப்படங்கள்.

1. இது ஒரு பொன் மாலைப்பொழுது
Diwali01
(இடம்: செண்பகத் தோப்பு : படவேடு அருகில்)
2. சிதறும் பொறிகள்
Diwali02
3. தொருவில் ஓர் நட்சத்திரம்
Diwali03
4. குழந்(தை)த குழலி
Diwali04
5. ஜாட்டியில் ஒரு கோலம்
Diwali05
6. பச்சை இலைகள்
Diwali06
7. ஜமுனாமத்தூர் மலை அடிவாரம்
Diwali07
8. சங்கிலி விளக்கு
Diwali08
9. பின்நவீனத்துவ மத்தாப்போவியம்
Diwali09
10. பால்வெளி அண்டம்
Diwali10
11. ஹி ஹி..
Diwali11
12. நட்சத்திரங்களை கக்கும் புஸ்வானம்
Diwali12
13. பிம்பம்
Diwali13
14. அடிக்கடி வாய்க்கவேண்டும் இம்மாதியான நிமிடங்கள்
Diwali14
- விழியன்

நிறைவேறிய பயணம் – கவிதை

2009 அக்டோபர் 11
vizhiyan ஆல்

நிறைவேறிய பயணம்

சில நூறு மையில்கள் கடந்து
நண்பனவன் மனம் குளிர
மணமதனை காண விழைந்தேன்.
வியர்வையின் நறுமண குளியலில் பயணம்.
கொசுவின் ரீக்காரமுடன் அறையில் உறக்கம்
சொக்கும் கண்களுடன் முதல்வரிசையில் இடம்
சடங்குகளின் போர்வைக்குள் மணமக்கள்
மாங்கல்யம் அணியும் பொழுது
மனமார ஆசீர்வதிக்க மகிழ்கையில்
புகைப்படகாரர்களின் பின்புறம் பார்த்தபடி
இனிதே நிறைவுற்றது பயணம்.

விழியன்

துவ்வு – கவிதை

2009 அக்டோபர் 11
vizhiyan ஆல்

துவ்வு

தலை கனத்த மதியமொன்றில்
புத்தகம் கையில் வரப்பெற்றதும்
வாசல் கதவை தட்டினார் முதியவர்
புன்முறுவலுடன் அறையில் ஒன்றினார்
மெளனித்தே கடந்தன நிமிடங்கள்
சடாலென சட்டை பிடித்து உலுக்கி
சன்னலை கடந்து வெளியை வெறித்தார்

பகிராத என் மனதின் நினைவுகள்

நாணியபடி வெளியேற

மெல்ல தலை கோதினார்
திகைப்பு
கண்ணீர்
இன்முகம்
மாலை சூரியனை உண்டு முடிக்க

பளிச்சிட்ட மின்னலில் மறைந்தார்
கடைசி பக்கம் மின்னியது
அவரின் இளவயது புகைப்படத்துடன்

- விழியன்