A Letter of Affection
அன்பில் ஓர் கடிதம்
அன்பு நண்பனே,
நலம் நலம் அறிய ஆவல்.
யார் இது இந்த முகம் தெரியாத நண்பர் நம்மை விசாரிக்கிறாரே என்ற ஆர்வம் உங்கள் கண்களில் தெரிகின்றது. நான் உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவன் தான். நீங்கள் இருக்க நினைத்த இடத்தில் இன்று நிற்கின்றேன். இன்னும் புரியவில்லை? விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.
காதல் எப்படிப்பட்ட மனிதனையும் விட்டுவைப்பதில்லை. நீங்களும் நானும் அப்படியே. அரும்பு மீசையில் இது காதலா, அல்லது கவர்ச்சியா என்று கூட தெரியாமல் காதலித்ததுண்டு. நீங்கள் முதன்முதலாய் நேசித்தது நான் மணக்கப்போகும் பெண்ணைத்தான். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே.
யார்தான் காதலிக்கவில்லை? காதலித்த அனைவரும் அதே சமயம் ஒன்றாய் இணையும் சந்தர்ப்பமும் அமைவதில்லை. எந்த மனிதனை வேண்டுமானாலும் கேளுங்கள் – மனதின் ஏதாவது இடுக்கில் தன் முதல் காதல் அனுபவங்களை அசை போட்டுக் கொண்டுதான் இருப்பான். அதற்காக தற்போது சந்தோஷமாக இல்லை என்றா அர்த்தம்? இருக்கிறார்கள் என்பதே நிஜம். ஆனாலும் அவள் அவன் பெயரை எங்கேனும் கேட்கும் போது அவர்களையும் மீறி பழைய எண்ணங்கள் ஆட்கொள்ளும். அந்த சில நொடி சந்தோஷம் உண்மையான சந்தோஷத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே நிஜமான நிஜம்.
நானும் ஒரு பெண்ணால் ஆட்கொள்ளப்பட்டேன் என் கனாக் காலத்தில். ஆனந்தமாக துள்ளிக் குதித்த நாட்களில் அவள் அமைதியாய் நுழைந்தாள் கல்லூரிக்குள்ளும் என் மனதிற்குள்ளும். எதனால் ஈர்க்கப்பட்டேன் என்று இன்று வரை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை என்பது என் தெளிவின் மீது எனக்கு எழுந்த சந்தேகம். நண்பர்களாய் உலா வந்தோம். மனதில் அவளை சுமந்தபடி நித்தம் நித்தம் என் காதல் வளர்ந்தது. ஒரு தலைக்காதல்தான். சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை.
சொல்லாத காதல் செல்லாக் காசு என்று படிக்க, ஒரு மாலை வேளையில் தனிமையில் இருவரும் நடந்து செல்லும் போது இனிமையாய் நானும் காதலைத் தெரிவித்தேன். நிதானமாக முடிவெடுப்போம் இரண்டு வருடம் கழித்து என்றாள். வயதில் என்னை விடச் சின்னவள், நிதானத்தில் மூத்தவள். நண்பர்களாய் இருப்போமே கடைசிவரை என்றாள். நாம் ஒரு கணக்குப் போட காலம் ஒரு கணக்குப் போட்டது. ஊசியின் துவாரம் வழியே உலகைப் பார்த்த நான், கல்லூரி விட்டு வேலை இல்லாமல் அலைந்த போது வெட்ட வெளியில் அம்மணமாக நிற்பதாக உணர்ந்தேன்.
அதுவரை என்னை மட்டும் பார்த்த நான் என்னைச் சுற்றியும் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கான பாதை என்ன என்பதை முடிவு செய்தேன். அதற்குள்ளாக என் மனதில் பெண்ணின் மீது இருந்த காதல் காணாமல் போனது. பின்னர் ஒரு பெரிய போராட்டமே நடந்தது அது காதல் தானா என்று. எனக்கானவளைத் தேடினேன். சற்றே வித்தியாசனமானதாக இருக்கும் என் பயணத்திற்கு முதலில் யாராவது கிடைப்பார்களா என்றே சந்தேகமாக இருந்தது. கிடைத்தாள் உங்களின் தோழி.
முகம் தெரியாமல் சினேகிதித்தோம் இணையத்தில். எங்களது கருத்துக்களையும், கனவுகளையும் பறிமாறிக் கொண்டோம். வாழ்த்திக் கொண்டோம் நல்ல வாழ்வு அமைய. மெல்ல மெல்ல நாங்கள் பயணிக்க விரும்பும் பாதை ஒன்றாய் இருப்பதைக் கண்டோம். ஏன் என் விரல் நுனி பிடித்து அவளும் நானும் பயணிக்கக் கூடாதெனக் கேள்வி கேட்டோம். ஆராய்ந்தோம்.
உணர்வுகளால் ஈர்க்கப்பட்டோம்.. உணர்ச்சிகள் தொற்றிக் கொண்டன.. காதல் பிறந்தது…
நாங்கள் முதன் முதலாய் அழுது பேசிக் கொண்டது என் பழைய ஈர அனுபவங்களையும் அவளின் (+உங்களின்) கதைகளையும். அது என்ன ஆண் தன் பழைய காதலை சொல்லலாம், பெண் சொல்லக்கூடாதா? எங்கள் இருவர் தோள்களும் ஈரமாகின. உங்களை அந்த பழைய நினைவுகளுக்குக் கொண்டு சென்று விட்டேன் என்றால் மன்னியுங்கள் நண்பரே.
நான் கூட நினைத்ததுண்டு, என் பழைய நினைவுகளை மறந்து எப்படி வாழ்வது. ஆனால் இவளின் அன்பு என்னைத் திணறடிக்க வைத்துவிட்டது. முதலில் நான் இனி என் தோழியைக் காணவே கூடாது, அது என்னை கதறடிக்கும் என்றுதான் நினைத்தேன். இப்போது காலம் தெளிவினையும் பக்குவத்தையும் தந்துள்ளது.
அவளோடு நன்றாகப் பழகுகிறேன். இன்றும் எனக்கு நல்ல தோழியாக அவளும் இவளும். எங்கள் திருமண அழைப்பிதழை முதன் முதலாக உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது இவளின் ஆவல். அத்தனை அன்பும் மரியாதையும் வைத்துள்ளார் என் மீதி பாதி. திடீர் என்று பத்திரிக்கை அனுப்பினால் உங்கள் மனம் என்ன பாடுபடும் என்று தெரியாதா? அதனால்தான் உங்களுக்கு முன்னேற்பாடாக எங்கள் தோழமை பற்றிக் கூறிவிடலாம் என்று இந்தக் கடிதம்.
திருமணத்திற்கு முன்னர் நல்ல நண்பர்கள் வட்டத்தில் இருந்துவிட்டு பிறகு தன் கணவரே என்று இருக்கும் பெண்ணைப்போல என் இல்லாளும் இருக்கக் கூடாது என்பது என் ஆசை. ஆதலால் அவளின் நண்பர்களை இப்போதே சந்தித்துப் பழகி விடுகிறேன். உறவு விட்டுப்போகக் கூடாதல்லவா? நீர்தான் அயல் தேசத்தில் போய் உட்கார்ந்திருக்கிறீர். தாயகம் திரும்பினால் அடியேனை சந்திக்க ஒரு நாள் ஒதுக்க வேண்டும். முடியாதது என்று ஏதும் இல்லை நண்பா.
திறந்த மனதோடு காத்திருப்போம் உங்களுக்காக நாங்கள் இருவரும்..
நேசமுடன்..
அன்பு தோழன்.
-விழியன்
http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_251b.asp
Hi Vizhiyan.
Really a fantastic story.I loved it.If everybody have the same feeling about their first love, then there wouldn’t be any failure in the marriage life.
Well done.Keep it up
Jegan