Muthal Mathipen

2006 மே 22
by vizhiyan

முதல் மதிப்பெண்..

“கண்ணா நீ தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்”
“என் பையன் தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண்”
மதிப்பெண்கள் தான் வாழ்க்கையில் இலட்சியமாக போய்விட்டது இன்றைய சூழ்நிலையில். இந்த சூழல் எல்லா அந்தஸ்திலும் வியாபித்து இருக்கின்றது. முதல்மதிப்பெண் வாங்கியவன் மட்டும் தான் புத்திசாலியா? மற்றவர்கள் எல்லோரும் என்ன முட்டாள்களா? இப்படி கேள்விகள் ஒரு பக்கம். படிக்கத்தானே பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகின்றார்கள், அதில் அதிக கவனம் செலுத்தி முதல் மதிப்பெண் எடுப்பது தானே ஒவ்வொரு மாணவன்/மாணாவியின் கடமை. இது மற்றொரு பக்கம் இருக்கும் வாதம்.

இதில் இருவர் வாதமும் சரியே.புரிதலில் மட்டும் முரண்பாடுகள். முதல் மதிப்பெண் எடுப்பது மட்டும் கல்வியா? கல்வி என்பது என்ன? இதற்கான விடையை அவரவரே தீர்மானிக்கட்டும்.மனனம் செய்து பாடத்தை ஒப்பிப்பதா? இதுவும் ஒரு திறமை தான் அதில் ஐய்யமில்லை.பள்ளிகளில் இந்த பழக்கம் ஆசிரியர்களால் அதிகமாக ஊக்கப்படுத்துவதால் மாணவர்கள் வேறு வழியின்றி தவிக்கின்றனர்.பாட புத்தகத்தை தாண்டி ஏதும் பயில மறுக்கின்றனர். இன்று எத்தனை மாணவர்களுக்கு நூலகங்களுக்கு சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆசான்களும் ஊக்கப்படுத்துவதில்லை, வீட்டில் பெற்றோர்களும் அதற்கு வழிமுறை செய்வதில்லை. இதை கேட்கபோனால் ஒருவர் மற்றவர் மீது விரல் சுட்டும் பணியே நடக்கும்.

நல்ல மாற்றமாக பல பாலக பள்ளிகளில் மதிப்பெண் அளிக்கும் முறை மாற்றப்பட்டு உள்ளது.இதன் மூலம் படிக்கும் போது ஏற்ற தாழ்வுகள் மறையும்.ஒரு வகுப்பில் அறிவில் சிறந்த மாணவன் இருக்க கூடும், அதற்காக அவன் புராணமே பாடிக்கொண்டிருந்தால் சாதாரண மாணவனின் மனம் எத்தனை காயப்படும். சுட்டி மாணவனை தனியாக அழைத்து பாராட்டலாம், அது அவனுக்கு உற்சாகம் அளிக்கும்.வகுப்பிலே பாராட்டுதலே கூடாது என்று கூறவரவில்லை ஆனால் அதே சமயம் அந்த பாராட்டு எவர் மனதிலும் காயத்தை,ஏற்படுத்த கூடாது. மாறாக தானும் சாதிக்க முடியும் என்கின்ற நிலை வரவேண்டும். அவனிடம் இருந்து மற்ற மாணவர்கள் கற்கின்ற கூழ்நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

நம் சமூக அமைப்பில் நன்றாக படித்தால் மட்டுமே நல்ல பையன்/பெண் என்கின்ற பார்வைகள் இருக்கின்றது. முதல் மதிப்பெண் எத்தனை பேர் எடுக்க முடியும்? அடுத்த கேள்வி அந்த முதல் மதிப்பெண் எடுக்கும் முறை சரியானதா என்று எழுகின்றது. இது ஒரு நீண்ட விவாதம். மதியை மதிப்பிடுவது மதிப்பெண்களா?

யார் சிறந்த மாணவன்?

யார் நல்ல மாணவன்?

இரண்டும் வேறு வேறு கேள்விகள். ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒரே கேள்வி போல காட்சியமைத்து நம்மை குழப்புகின்றது.யார் முதன்மையான மாணவன் யார் முதல் மாணவன் என்கின்ற கேள்விகள் முதலில் எல்லோர் மனதிலும் முளைக்கட்டும். அதற்கான விடை தானாக கிடைக்கும்.


விழியன்

2 பதில்கள் leave one →
  1. 2006 மே 22

    //நம் சமூக அமைப்பில் நன்றாக படித்தால் மட்டுமே நல்ல பையன்/பெண் என்கின்ற பார்வைகள் இருக்கின்றது. முதல் மதிப்பெண் எத்தனை பேர் எடுக்க முடியும்? அடுத்த கேள்வி அந்த முதல் மதிப்பெண் எடுக்கும் முறை சரியானதா என்று எழுகின்றது. இது ஒரு நீண்ட விவாதம். மதியை மதிப்பிடுவது மதிப்பெண்களா? //

    அன்பின் விழியன்! இந்தக் கேள்வி எனக்கும் எழுந்ததுண்டு. வெறும் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பிட்டு பல மணியான பிள்ளைகளை இழந்து விடுகிறோம்.

    கல்வித்துறை எனும் பூனைக்கு மணி கட்டுவது யார்?

  2. 2006 மே 23

    தேர்வுகள் புள்ளியின் அடிப்படையில் தானே நடைப் பெறுகின்றது. ஆதலால் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல மதிப்பெண்களை வாங்கும் மாறு சொல்கிறார்கள். பள்ளியில் தேர்வு முறைகளை மாற்றினால் பெற்றோர்களின் சிந்தனையும் மாறும்?

    மனப்பாடம் என்பதும் எழிதல்ல. ஒருவருக்கு அதில் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அவரால் அதை மனப்பாடம் செய்ய முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் பாடங்களை மனப்பாடம் செய்வதோடு பிள்ளைகள் நிறுத்தி விடுகிறார்கள். அதை புரிந்துக் கொள்வதற்கு முயற்ச்சி செய்வது இல்லை..

    ஒருவர் மிகவும் நன்றாக செய்து உள்ளார் என பாரட்டுவதை விட, சென்ற தேர்வை விட இத்தேர்வில் யார் யார் நன்றாக செய்து உள்ளார்கள் என சொல்லலாமே. அது ஒரு புள்ளியாக இருந்தாலும் அம்மாணவ மாணவியரின் உள்ளத்தில் அடையும் மகிழ்ச்சி அடுத்த தேர்வில் கண்டிப்பாக அவர்கள் இன்னும் நன்றாக செய்ய முயற்ச்சி செய்வார்கள்….

    //
    நம் சமூக அமைப்பில் நன்றாக படித்தால் மட்டுமே நல்ல பையன்/பெண் என்கின்ற பார்வைகள் இருக்கின்றது.
    //

    படித்தால் நல்ல முடிவை எடுக்கும் மன பக்குவம் அவர்களுக்கு வந்து விடும் எனும் எண்ணம் தான்…..

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS