Back To College – 1

2006 செப்டம்பர் 26
by vizhiyan

சின்னதாய் நிறைவாய் ஒரு பயணம் – 1 & 2

பெங்களூரில் இருந்து திருச்சி செல்லும் பேருந்து ஏறி “காலை ஆறு மணிக்கு திருச்சியில் இருப்பேன்” என்ற குறுந்தகவலை கல்லூரி கணினி துறைத்தலைவருக்கு (HOD) அனுப்பி உறங்க சென்றேன். 11 மணிக்கு..”சார் நாளை காலை வருகின்றீர்களா?”. “ஆமாம்”..அலைபேசியில் துறைத்தலைவர் அழகவேல். பின்னர் தான் தெரிந்தது நான் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு வருவதாக நினைத்துக்கொண்டு இருந்தார் என்று. காலை 7 மணிக்கு திருச்சி வந்தடைந்துவிட்டேன். திருச்சியை ஒரு சுத்து சுத்தினேன். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் சத்திரத்திற்கே வந்தேன். இரண்டு மாணவர்கள் என்னை அழைத்து செல்வதற்காக வந்திருந்தனர்.”சார் எங்க இருக்கீங்க”. “ஐயங்கார் பேக்கரிக்கு கீழே.ஒல்லியா இருப்பேன்..” சரி சார்”..நான் அவர்களை அடையாளம் கண்டுவிட்டேன். அவர்களுக்கு அதிர்ச்சி…இவனா ஒல்லி?

நான் சென்றது தனலட்சிமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கு. “கேலிஸ்டோ” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப சிம்போசியம்(தமிழில் என்னங்க??) சிறப்பு விருந்தினராகவும், நீதிபதியாகவும். கல்லூரி இருப்பது பெரம்பலூரில்.திருச்சியில் இருந்து சுமார் 55 கி.மீ தொலைவில். கல்லூரி பேருந்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டோம். கார்திக், இனியன் என்ற மாணவர்கள் என்னை கவனித்து கொண்டனர். எங்க பார்த்தாலும் மச்சி, மாமா, துள்ளலான பேச்சுக்கள், கிண்டல்கள். பேருந்தின் முற்பாதியில் ஆண்களும் பிற்பாதியில் பெண்களும். கல்லூரியை பற்றியும் சுற்றி இருந்த மாணவர்கள் பற்றியும் விசாரித்து வந்தேன். வழியில் தென்பட்ட எல்லா கல்லூரிகளை பற்றியும் மாணவர்கள் காட்டினர்.

ஹோட்டலில் குளித்து முடித்து கல்லூரிக்கு செல்லும் முன்னரே துவக்க விழா துவங்கிவிட்டது. கல்லூரியே மங்களகரமாக இருந்தது, மாணவிகள் சேலைகளில்,மாணவர்கள் ஷூ டையுடன். எங்கும் புன்னகை. விழா நடந்த அரங்கிற்கு அழைத்து சென்றனர். சுமார் முன்னூறு மாணவர்கள். பின்னாடி போய் உட்காரலாம் என இடம் பார்த்தேன். அதற்குள் மேடைக்கு அழைத்து சென்றுவிட்டனர். மேடையில் இருந்த கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆஹா கிளம்பிட்டாங்கையா…நமக்மெல்லாம் இது ஓவரப்பான்னு நினைப்பதற்கு ம ுன்னால் “கல்லூரி முதல்வர் உமாந்தை கெளரவரிப்பார்” என்று அறிக்கை. நம்ம வளத்தி தெரியாததால் சால்வையும் துண்டு போல தான் இருந்தது. ஒரு பிள்ளையார் சிலை வேற. இந்த மேடைக் கலாச்சாரம் எல்லாம் தேவையான்னு புரியவில்லை. யார் யாரோ பேசினார்கள். நிஜத்தை சொல்ல வேண்டுமானால் கோபம் தான் வந்தது. மாணவர்களுக்கு சொல்லாக்கூடாத விடயங்கள் மட்டுமே சொல்லப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பயன்படும் செய்திகளை விட்டுவிட்டு போலி புகழ்ச்சியும், தன் அறிவுஜீவிதத்தை காட்டும் காரியம் மட்டுமே நடந்தது/நடக்கின்றது.

போட்டிகள்..

காலை 11 மணிக்கு மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்பித்தன்ர். இரண்டு அரங்கில் போட்டிகள் நடந்தது, நானும் அஸ்ரப் என்னும் நண்பனும் (முதல் நாள் பழக்கத்திலேயே “டா” போட்டு அழைத்த நண்பர்களில் இவனும் ஒருவன்) நீதிபதிகளாக அமர்ந்தோம். மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஒரு சின்ன குழப்பம் ஆங்கிலத்தில் இதை Paper Presentation  என்கின்றோம், தமிழில் என்ன சொல்ல? ஆய்வறிக்கை ? கட்டுரை? ஆய்வுக்கட்டுரை? ஆனால் இவர்கள் சமர்பித்தது பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே. எந்த ஆய்வும் நடந்ததாக தெரியவில்லை.” கூகிளில் ஆய்வதெல்லாம் ஆய்வாகாது?”. இது என்றால் என்ன? அது என்றால் என்ன? போன்ற கட்டுரைகளே வந்திருந்தது. அப்படியே வந்தவைகளிலும் ஆழமான பார்வைகள் புரிதல்கள் மிக மிக குறைவாகவே காணப்பட்டது.

மாணவர்களிடம் மிக எளிதான வினாக்களை மட்டுமே எழுப்பினேன், அவை இன்னும் தாங்கள் தேடலில் பாதையினை கண்டுகொள்ளவே. போட்டிக்கு பின்னர் “என்ன சார் இப்படி கொடஞ்சி எடுத்துவிட்டீர்கள்” என்று கேட்டன்ர் மாணவர்கள். அவை எல்லாம் அவர்கள் நல்லதிற்கே என்று காலம் புரியவைக்கும். தீச்சுவர் Firewall பற்றி கட்டுரை சமர்ப்பித்த மாணவர்களிடம் “உங்கள் கல்லூரியில் என்ன தீச்சுவர்?” என்றதற்கு பதிலில்லை. “சரி என்ன பரிந்துரைக்கின்றீர்கள்?”…முதலில் நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை பற்றி தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லவா? மேலும் படித்ததை எல்லாவற்றையும் நடைமுறை படுத்தி பார்க்கவேண்டாமா? சரி எல்லாவற்றையும் பரிசோதிக்க முடியாது..அந்த முயற்சி கூட இல்லாவிட்டால்?

மணி 2.30 .புதிய செய்திகள் கேட்கும் ஆர்வத்தில் பசிக்கவில்லை..அதிசயம்தாங்க..நல்ல சாப்பாடு. மீண்டும் மதியம் மற்றொரு அரங்கில் கட்டுரை சமர்பித்தனர். நல்ல ஆய்வுகளும் வந்திருந்தன. இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதே ஆவல். ஆவல் மட்டுமல்ல அதுவே வளர்ச்சி. இணையத்தில் பாதுகாப்பு, மறையீட்டியல்,இதயத்தில் இருந்து அலைபேசிக்கு, மருத்துவத்தில் நேனோ, மெம்ஸ், என்று பல்வேறு துறைகளில் கட்டுரைகள் இருந்தது. பல மாணவர்கள் நல்ல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தனர். எல்லாவற்றையும் முக்கியம் அந்த ஆர்வம். அவர்களுக்கு தேவைப்படுவது ஒரு வழிகாட்டுதலே..

மாலையில் வளாகத்தை சுற்றி வந்தோம். ஆறு வருடத்தில் அதீத வளர்ச்சி தான். சுமார் 6-7 நிறுவனங்கள் உள்ளே இருக்கின்றது. விடுதிகளும் உள்ளே இருக்கின்றது. எங்கும் மாணவர்கள். ஒவ்வொரு நிகழ்வும், மாணவனும் எந்த கல்லூரி நிகழ்வையாவதும், ஏதாவது நண்பனை நினைவு கூர்ந்து வந்தது. பச்சைபசேல் என்று எங்கும் செடிகள். உள்ளே கரும்பு தோட்டம் வேறு இருந்தது. “சார் மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சி. அது முடிந்ததும் எல்லோருக்கும் உணவு. கண்டிப்பாக இருந்துவிட்டு அறைக்கு போகனும்” துறைத்தலைவரின் வேண்டுகோள்.

நீண்ட வருடங்கள் பிறகு மேடையில் பாடினேன்..விவரமாக விரைவில்..
விழியன்


9 பதில்கள் leave one →
  1. 2006 செப்டம்பர் 28

    super.. aana unnai eppidi judgeaa.puriyalai.. on wht basis

  2. 2006 செப்டம்பர் 28

    You are getting me so deep into you! a sort of affection towards you and your words…

    Saran

  3. 2006 செப்டம்பர் 28

    மாதவா, அது தான் எனக்கு தெரியவில்லை.. :-)

  4. 2006 செப்டம்பர் 28

    மிக்க சந்தோஷம் சரவணன். விரைவில் சந்திப்போம். இந்தியா வரும் போது தொடர்ப்பு கொள்ளுங்கள்..

  5. 2006 செப்டம்பர் 28

    Man, this is cool nostalgic journey… Just got drowned into those days for some time, pausing my activity for a while… Keep up the good work. I am sure you enjoy writing as much we enjoy reading…

  6. 2006 செப்டம்பர் 28

    hello boss,

    happy to ur see ur writings…

    proud of my name being mentioned in the same..

    waiting for such an oppurtunity once again :)

  7. 2006 செப்டம்பர் 29

    தம்பி, எப்பொழுதும் போல உனக்கே உரித்தான அருமையான எளிமையான நடையில் நிகழ்ச்சியை எழுதியிருக்கிறாய். வாழ்த்துக்கள்.

  8. 2006 செப்டம்பர் 30

    மிக்க நன்றி அண்ணா. உங்களை போன்றோரின் ஊக்கமே என்னை இப்படி எழுத தூண்டுகின்றது.

  9. 2006 அக்டோபர் 1

    GOOD, MY WISHES FOR PROCEEDING FURTHER.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS