Veyil – Film Review

2006 December 15
by vizhiyan

வெயில் திரைப்பட விமர்சனம் pasupathy.jpg

“ஹலோ..ரொம்ப நேரம் காக்கவெச்சிட்டேனா..சாரி பா…” கொஞ்சியபடி கீனா வந்தாள்..பொய்க்கோபத்தில் அவன் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டான். “நீ மட்டும் என்னை விட்டுட்டு நேத்திக்கு படம் போயிட்ட இல்லை.நானும் உன் பேச்சு கா..எந்த படத்துக்குன்னு கூட சொல்லல இல்ல..” இவளும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“வெயில் படத்துக்கு போனேன் மா.” அவன் கீழிறங்கி வந்தான்..

“எப்படி இருந்தது…?”

“வித்தியாசமான முயற்சி தான். இயக்குனர் சங்கர் திறமையான இயக்குனர்களை கண்டுபிடிப்பதில் வல்லவராக இருக்கிறார். காதல், புலிகேசி, அதை தொடர்ந்து வெயில். மூன்று வித்தியாசமான முயற்சி. இயக்குனர் வசந்தபாலன் இது தன் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நல்லா வேலை செய்து இருக்கார்.”

“இது அவரோட இரண்டாவது படம். முதல் படம் ஆல்பம்.யாருப்பா கதாநாயகன், நாயகி?”

“நாயகன் இருவர். பரத்,பசுபதி. நாயகிகள் மூவர் பாவனா,ஷிரேயா,மற்றும் ஒரு புதுமுகம். பசுபதிய சுத்தி தான் கதை நகருது. நிச்சயம் பசுபதியின் திறமைக்கு இந்த படம் நல்ல தீனியாக அமைந்து இருக்கு.தன்னுடைய கனமான கதாபாத்திரத்தில் ரொம்ப வலுவா நடிச்சி இருக்கார்.விருதுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு பரத்திற்கு நிறைய வித்தியாசம் காட்ட வாய்ப்பில்லாம போச்சு.சரியா செய்து இருக்கார்.பாவனா ஒப்புக்கு சப்பாணியா வந்து போறாங்க. ஆனா வருகின்ற எல்லா காட்சிகளிலும் சுவாரஸ்யம். ஷிரேயா, பசுபதியின் பால்ய சினேகிதியா வராங்க. தன் பங்கை சிறப்பா செய்து இருக்காங்க.திமிரில் வந்த பாத்திரத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் காட்டி இருக்காங்க. பரத், பசுபதி அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுகம் கச்சிதம்.இத்தனை நாள் எங்க இருந்தாருன்னு தெரியல. அம்மா கதாபாத்திரத்தை இன்னும் செதுக்கி இருக்கலாம். 20 வருஷத்துக்கு பிறகு மகனை காணும் காட்சியில் இன்னும் நல்லா செய்து இருக்கலாம். பசுபதியில் காதலியாக வரும் புதுமுகம் தங்கம் பழைய நாயகி ஒருவரை நினைவு படுத்துகிறார்.”

“நாயகி நாயகன் தானே கேட்டேன்..அதுக்குள்ள ஆரம்பிச்சிடுவிங்களே..ஏய். கதை என்னன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு”

“பசுபதி,பரத் அண்ணன் தம்பிகள்.சின்ன வயசுல வீட்டை விட்டு ஓடிப்போகின்ற பசுபதி(முருகேசன்) சினிமா தியேட்டரில் தஞ்சம் அடைகிறான். அங்கேயே தங்கி வளர்கிறான். சினிமா மீது தீராத தாகம். ஆப்பரேட்டராக உயருகிறார் பசுபதி. தியேட்டர் வாசலில் புதிதாக வரும் தங்கத்தின் மீது காதல். இருவரும் காதலிக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் தங்கம் இறக்கிறார். தியேட்டரும் மூடப்படுகின்றது. என்ன செய்வது என தெரியாமல் சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஊரில் தம்பி பரத் நல்ல முறையில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். சீர் குலைந்த குடும்பத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்.அப்பா பசுபதியை ஏற்க மறுக்க, தம்பி வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வருகின்றார். பசுபதியின் மனோநிலையே படத்தின் முக்கிய கரு.இறுதியில் என்ன நடக்கிறது என படத்தை போய் பாரு..இதுக்கு மேல என்னால சொல்ல முடியாது.. “

“ச்சீ..சொல்லுங்களேன்..சரி பாட்டு எல்லாம் எப்படி இருக்கு? இசை யாரோ புதுமுகமாமே?”

“ஆமா புதுமுகம் தான்.ஜி.வி.பிரகாஷ். நல்லா செய்து இருக்கார்.மூன்று பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. கிராமத்தில் விளையாட்டை எல்லாம் மையப்படுத்தி வரும் பாடல் நல்லா வந்திருக்கு. கிராமிய மனத்தோடு ஒரு பாடல்.கிராம வாசமே இல்லாதவர்களுக்கு முன்னொரு காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.பசுபதி-ஷிரேயா ரெட்டி வரும் பாடல் மனதை வருடுகின்றது. பரத்-பாவனா காதல் பாடல் காட்சியமைப்பு வித்தியாசம்.எல்லா பாட்டுலையும் நல்லா கவனம் செலுத்தி இருக்காங்க..”

“அப்ப படம் சூப்பர் ஹிட்டா?”

“கஷ்டம் தான். இன்னும் நிறைய விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்கனும். படம் ஆரம்பித்த போது இது சண்டை படமோன்னு ஒரு அச்சம் வந்துச்சு, பிறகு கிராமத்திற்கு கூட்டிட்டு போனப்ப இது மற்றும் ஒரு ஆட்டோகிராப், அழகியோன்னு சுவாரஸ்யத்தை கூட்டுச்சு.தனித்தியா பார்த்தால் நல்லா இருக்கு, ஒட்டு மொத்த கூட்டா பார்த்தா ஏதோ குறை இருக்குது. படம் ஒரே மனநிலையில் செல்லவில்லை.மனசை பிசைகின்ற மாதிரி சில காட்சிகள், லேசாக்குகின்ற காட்சிகள் சில, கோரமான காட்சிகள் சில. ஏதாவது ஒன்றில் நின்று இருக்கலாம். நிறைய காட்சிகள் ரொம்ப நல்லா எடுத்திருக்கார்.நிச்சயம் பாராட்ட வேண்டும். தியேட்டரை சுற்றி வரும் காட்சிகள் ஒரு கலைப்படத்திற்கான அம்சத்துடன் இருந்தது, பிற்பாதியில் கமர்சியலாக்கப்பட்டுவிட்டது என சின்ன வருத்தம்..நா.முத்துக்குமாரின் வரிகள் கேட்கும் படியா இருக்கு.மதி,அழகப்பன் கேமராவில் சோகத்தையும், கண்ணீரையும்,வெறியையும்,காதலையும், நட்பையும் அழகாக படம்பிடித்துள்ளனர்.நிறைய அதிர்வுகள் இருந்தது..”

“ஓ..” கடிகாரத்தை பார்த்தாள் கீனா..

“மச்சி நீங்க இங்க இருக்கீங்களா?” – பின்னால் இருந்து அவன் நண்பன் கோபால் வந்தான். “என்ன கீனா. என்ன கதை விட்டுகிட்டு இருந்தான் இவன்?”

“நேத்து நீங்க பார்த்த படத்தை பற்றிய விமர்சனம் சொல்லிட்டு இருந்தாரு கோபால்..நீங்க சொல்லுங்க.எப்படி இருந்துச்சு..”

“கதை ரொம்ப ஸ்லோவா போச்சு கீனா, ஏசி அறையில் ‘வெயில்’ காச்சி எடுத்துடுச்சி..ஆரம்ப காட்சியில மழை ஜோன்னு பெய்யும், மழைத்துளி அவ்வளவு கனமா விழாது.” – கோபால்

“டேய் படம் நல்லா தான் டா இருந்தது, ஒரு முறை பாக்கலாம்…”

“என்னடா டைரக்டர் உன் நண்பனா?..ஹா ஹா…”

“அடிங்க…”

“நேரமாச்சுப்பா..நான் கிளம்பறேன்..” கீனா டாட்டா காட்டி கிளம்பினாள்..

வெயில் இறங்கி மிதமான காற்று வீசியது..


விழியன்

Key Word : Tamil Film Review, Veyil. வெயில் திரைப்பட விமர்சனம், பசுபதி

8 பதில்கள் leave one →
  1. 2006 December 15

    தலை நல்ல விமர்சனம்..

    வித்தியாசமான முயற்சி என்று சொன்னீர்கள்.. ஆனால் இது அனு.அக்கா..ஆன்ட்டி (ஆனந்த விகடன்) தழுவல் மாதிரி தெரிகிறது…

    எனினும் விமர்சனம் நன்றாக உள்ளது.. நிறைகளோடு உங்களுக்குத் தோன்றுகிற குறைகளையும் சுட்டிக்காட்டுவது சிறப்பு…

    தொடரட்டும் உங்கள் விமர்சனப் பயணம்..

  2. 2006 December 15

    வெயில் ….மார்கழி மாதத்தின் பனி…..
    அருமை……

  3. 2006 December 15

    hello,

    vasantha balan’s first film name is album
    a kavithalaya production

    veyil his second film

    senshe

  4. 2006 December 15

    நன்றிங்க. மாத்திட்டேன்.. :-)

  5. 2006 December 15

    விமர்சனத்திற்கு நன்றி விழியன் ….
    பாடல்கள் கேட்டேன் . நன்றாக இருந்த்தது ,…. இந்த வாரம் செல்ல முயற்ச்சிக்கிறேன் …

    தனசேகர்

  6. 2006 December 15

    Hi Umanath
    This flow of the film review is very good… More of like Vijay TV program “Cinema Karam Coffee”…

  7. 2006 December 15

    Aadaengappa………..yenna oru vilakkam…….

    ithu oru nalla muyarchi!!!!!!!

  8. 2007 ஜனவரி 8

    I like the movie… Everyone did their character very well.. worth watching in Cinema.. But sad ending…

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS