Prodigyயின் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் – விமர்சனம்
Prodigyயின் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் – விமர்சனம்
(30வது புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களின் முதல் விமர்சனம்)

நீண்ட காலமாக சிறுவர்களுக்கு தரமான புத்தகங்கள் இல்லை என்ற கவலை இருந்து வருகின்றது. சமீப காலத்தில் இரண்டு நிறுவனங்கள் குழந்தைகளுக்காக பதிப்பகங்களை துவக்கியுள்ளது. ஒன்று “Books For Children” மற்றொன்று “Prodigy”. Prodigy நிறுவனம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புத்தகங்களை பதிப்பிக்க உள்ள செய்தி மேலும் மகிழ்ச்சியை தருகிறது.
பாட்டி தாத்தா கதைகள் சொன்ன காலம் மறைந்து கணினி, அலைபேசி, மீன், ஒட்டகம், டையனோசர், எலிப்பான் (Mouse), ஜப்பானில் வாழும் சுமோ வீரன் மூலமாக கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர். தற்போதைய சிறுவர்களின் விருப்பத்தை சரியாக அறிந்து அதற்கு ஏற்றாற்போல கதைகளை படங்களுடன் சொல்லி இருக்கி்றது Prodigyயின் சிறுவர்களுக்கான புத்தகங்கள். தற்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏழு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
பாராட்டப்பட வேண்டியவை..
படங்கள் மிக அழகாக, நல்ல தரத்துடன் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஒன்றே குழந்தைகளை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை. கதை சொல்லும் பாங்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விடயங்கள் மூலம் கதை நகர்த்துவது நல்ல களத் தேர்வு. ஆங்காங்கே வரும் துணுக்குகள், செய்திகள் புதுமை. குழந்தை தனம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. எளிமையான சுலபமாக புரியக்கூடிய சொற்கள் குழந்தைகள் புத்தகங்களுக்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த வெளியீடுகள் வெற்றிப்பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.
படங்களை உருவாக்கிய பிள்ளை அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். நிறைய நேரம் செலவழித்து பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார். எழுத்தாளர்கள் நித்யா, எஸ்.சுஜாதா, சோ.மோகனா , சாந்தி ரங்கராஜன், மருதன், என்.சொக்கன் ஆகியோர் முடிந்தவரை நன்றாக எழுதியிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதவேண்டும்.
இது ஆரம்பம் இந்த முதல் படியே வெற்றிப்படியாக மாற பதிப்பகத்தாருக்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் குழந்தைகள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு புது ஆர்வம் ஏற்பட்டு இது போன்ற முயற்சிகள் மேலும் வேகம் பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
கவனிக்க வேண்டியவை:
இந்த சின்ன தமிழ் புத்தகத்தில் ஏராளமான ஆங்கில வார்த்தைகள். இவற்றில் பல வார்த்தைகளை மிக எளிதாக தமிழ் படுத்தியிருக்கலாம். முழுக்க முழுக்க தமிழில் எழுதுவது கடினம் அது படிக்கும் சிறுவர்களுக்கு புரியாது என்று நினைத்திருக்கலாம். அது தவறு என்பதை உணர்ந்து முடிந்த வரை தமிழ் சொற்களையே பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக “டூர்,பர்த்தடே,தேங்கஸ்,friends,ஏர்போர்ட்,ரிசீவ்,ப்ளேன்ல,ஸ்கூல், நோ நோ, டிரஸ், ஈசி, சைஸ், பேப்பர், ஸ்பீட், பில்டிங்க்ஸ், அட்ஜச்ட்,டான்ஸ்,நம்பர், ஒ எஸ் கமான், பெஸ்ட், ஹெல்ப், ஈஸியா, friendship,கிரண்டு, பேட்லக், மேட்ச், ஐஸ்,ஆன்,லீடர்,”பூமி தேர்ட் பெஞ்ச் ஸ்டூடண்டா?”, கேண்டில், லைட், புட்பபல், ஜூஸ், வெயிட், மிஸ், கிப்ட்” (இவைகளுக்கு மிக அழகான எளிய தமிழ் வார்த்தைகள் உள்ளன, வேண்டுமென்றே ஆங்கில வார்த்தைகள் திணிக்கப்பட்டதை போல இருக்கிறது) பிறகு எதற்கு தமிழ் புத்தகம் என்று சொல்ல வேண்டும்?. பிழை திருத்தவில்லையோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ஒரு வேளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டதால் இப்படி வந்திருக்கலாம். எப்படியாகினும் இவைகள் களையப்படவேண்டும்.
இப்படியாக இன்னும் சில:
* சுமோ வீரன் என்று நேராக கதை செல்கின்றது. சுமோ என்ன விளையாட்டு என்ற துணுக்கு போட்டிருக்கலாம்.
* டையனோசர் புத்தகத்தில் எழுத்து பிழைகள் அதிகம்.
* நா என்பதற்கு நான்…என்றே பயன்படுத்தி இருக்கலாம்.
* “வால் பையன் ரேவா” சரியா? ரேவா பெண். (இது கூட தெரியாமல் எழுதியிருப்பதும் அதை படித்து திருத்தியிருப்பவர்களும் அப்படியே விட்டிருப்பதும் ஏன் என்று புரியவில்லை) குழந்தைகளும் அப்படியே நினைத்துவிடுவார்கள் எனபதை யோசித்திருக்கவேண்டும். அல்லது அவர்களுக்கே தெரியவில்லையா?
* டையனோசர் பெயர்கள் ஒரே பக்கத்தில் மூன்று முறை தவறாக வந்துள்ளது. மேலும் இத்தனை டையனோசர்கள் பற்றி சொல்வதைவிட டையனோசர் இனம் பற்றி அறிமுகமாக ஒரு புத்தகத்தையே வெளியிட்டிருக்கலாம். நிறைய டையனோசர்கள் கதையில் வந்தும் மனதில் எதுவும் நிற்கவில்லை.
* புல்புல் கதையில் புல்புல் தான் யார்,பெயர் என்ன என்று அறிமுகம் செய்யவே இல்லை. திடீரென ரேவா “புல் புல்” என்று அழைக்கின்றாள்.
* “பெரிய வெப்ப பாலைவனம் சகாரா. தார் பாலைவனத்தில் ஒரு பகுதி இந்தியாவில் இருக்கின்றது” . இந்த வரிகளில் தெளிவு இல்லை.
மற்றவைகளை விட அறிவியலை கற்று தரும் புத்தகத்தில் அதிக கவனம் தேவை.ஒரு மிகப்பெரிய அறிவியல் தவறு கவனிக்கப்படாமல் அச்சாகி உள்ளது. சூரியனை பற்றிய புத்தகத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் எட்டரை ஒளியாண்டு என்று சொல்லி இருக்கின்றனர். அப்படியானால் எப்படி எட்டரை நிமிடத்தில் அதன் ஒளி பூமியை வந்தடையும்? குழந்தைகளுக்கான புத்தகம் எழுதுவதில் அதிக கவனம் தேவைப்படுகின்றது. சின்ன வயதில் ஆழமாக பதியும் எவையும் எளிதில் வெளியே செல்லாது. அதனால் சரியான விடயங்களையும், சுவையாக சொல்வதும் இப்படிப்பட்ட பதிப்பகத்தாரின் கடமை.
அடுத்த சமுதாயத்தின் தூண்களை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கும் Prodigy மேலும் மேலும் புதுமைகளை செய்யவேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஔஐய்யமில்லை.
புத்தகங்களின் பெயர்களினை இங்கே காணலாம்.
http://thoughtsintamil.blogspot.com/2007/01/blog-post_08.html
–
விழியன்
எழுதுவது கடினமானது. அதிலும் விமர்சனம் எழுதுவது மிகவும் கடினமானது. இத்தனை தெளிவாக தீர்க்கமாக விரிவாக விளக்கமாக… வாழ்த்துகின்றேன் வாழ்த்துகின்றேன்.
இளங்குமரன்
வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி இளங்குமரன்.
ஆழ்ந்து ஆராய்ந்து எழுதிய விமர்சனம். இப்புத்தகங்கள் இணையதளங்கள் மூலமாக on-line முறையில் கிடைத்தால் பலரும் பயன்பெறுவர்.
ஆகிரா
விமர்சனம் படிப்பதே சுவையானது…
அதிலும் அதை உரியவருக்கு (அப்புத்தக பதிப்பகத்தாருக்கு) சுட்டிக்காட்டுவது என்பது மிக முக்கியமானது!!!
சுட்டிக்காட்டியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!
அன்புடைய ஆகிரா,
விரைவில் இந்த புத்தகங்கள் இணையத்தின் மூலம் பெறலாம் என நம்புகிறேன்.
நன்றி..
நன்றி. தகவல் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் சரி செய்கிறோம்.
பிற விமரிசனங்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் பத்ரி. மேலும் நிறைய புத்தகங்களை கொண்டு வாருங்கள்..