அமைதிக்கு நடுவே ஓர் இரவு
அமைதிக்கு நடுவே ஓர் இரவு.
அதிகபட்சம் ஏழு பேர் தான் தங்கலாம். அதற்கு மேல் அங்கே தங்க வசதி இல்லை என்றார் இரமணன் அண்ணா. விருத்த ஜாகேஷ்வர். ஜாகேஷ்வரில் இருந்து மண் சாலை வழியே 14 கி.மீ. மலை வழியே 2 கி.மீ. நான், பாண்டி விக்ரம், சி.என்.என் விக்ரம் (இரமணன் அண்ணாவின் புதல்வன்), மதுரை சோமு அண்ணா, மதுரை போஸ், ஹைதராபாத் அனில், தில்லி சீனிவாஸ்் ஆகிய ஏழு பேர் மலை மீது தங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. விருத்த ஜாகேஷ்வரில் ஒரு கோவில், இரண்டு டீக்கடை. ஒரு டீக்கடையில் இருவரும் மற்றொரு டீக்கடையில் நால்வரும் படுத்துக்கொள்ளும் வசதி மட்டுமே இருந்தது.
ஜாகேஷ்வர் என்பது இமய மலைத்தொடரில் இருக்கும் ஒர் புனித ஸ்தலம்.தில்லியில் இருந்து ரயில் மூலம் காட்கோதாம்் என்னும் இடம் வரை சென்று, அங்கிருந்து ஜீப் மூலம் 4.30 மணி நேர மலைப்பாதை பயணத்தில் ஜாகேஷ்வரை அடையலாம்.
அன்று விநாயகர் சதுர்த்தி. (15-09-2007). மாலை ஐந்து மணிக்கு ஜாகேஷ்வரில் இருந்து விருத்த ஜாகேஷ்வருக்கு ஏழு பேரும் ஜீப்பில் கிளம்பினோம். ஹரிஷ் வண்டி ஓட்டினார். நாங்கள் சென்ற மூன்று நாளும் ஹரிஷ் எங்களோடு தான் இருந்தார். பாசமான மனிதர். இரவு விருத்த ஜாகேஷ்வரில் தங்க போகிறோம் என்பதால் பெரிய டார்ச் ஒன்றினை எங்களுக்கு நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் உரிமையாளர் கொடுத்தார். விருத்த ஜாகேஷ்வரில் மின்சாரம் இல்லை.ஜீப்பின் பயணத்தின் போது சுவாரஸ்யமான கதைகள் ஓடியது. சோமண்ணா கதைகளை சொல்லிக்கொண்டு வந்தார். கிளம்பும் போது “அங்கே அமைதியாக இருங்கள். அந்த இடத்தின் மகிமையினை அமைதியில் காணலாம்” என்று அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டோம்.மலையினை அடைந்தோம்.
மாலையில் நந்தாதேவி குன்றும், பஞ்ச சூல் குன்றுகளும் காட்சியளித்தது. எந்நேரமும் இந்த மலைக்குன்றுகளை பார்க்க முடியாது. மேகம் விலகி, வானம் பிரகாசமாக இருந்தால் மட்டுமே இதனை காணலாம். நாங்கள் இருந்தது சுமார் 1800 மீ உயரத்தில் என்றால், அந்த மலைத்தொடர்கள் சுமார் 7000 மீ உயரத்தில்.அந்த குன்றின் மீது இருக்கும் பனிகள் மாறி மாறி வேறு வேறு உருவங்களை ஒவ்வொரு சமயமும் காட்சியளித்தது. சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் குறையும் வரை அதே திசையில் அனைவரும் அமர்ந்திருந்தோம். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கோவில் வரலாறு :-
சற்று இருட்டிய பிறகு கோவிலுக்குள் சென்று அமர்ந்தோம். வெளியே இருந்த குளிருக்கு உள்ளே கதகதப்பாக இருந்தது.கம்பளி ஒன்றினை எடுத்துப்போட்டு தியானத்தில் அமர்ந்தோம். அந்த அமைதி பல விடயங்களை புரிய வைக்க ஆரம்பித்தது.கொஞ்ச நேரத்தில் கோவில் பூசாரி வந்து பூஜையை ஆரம்பித்தார். அவர் அந்த கோவிலின் வரலாற்றினை சொல்ல ஆரம்பித்தார்.
ஏழாம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவான லிங்கம் தான் இந்த கோவிலுக்குள் இருக்கின்றது. அப்போது அங்கு உணவிற்காக வந்த மாடுகள் தானாக பாலினை சுரந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுமாம். அந்த சமயம் கோவில் என்று ஏதும் இல்லை. அந்த பகுதி (குமோம்) அரசனுக்கும் பக்கத்து தேசத்து அரசனுக்கும் போர் நடந்தது. போரில் வென்று விட்டால் அந்த லிங்கத்திற்கு கோவில் கட்டுவதாக வேண்டி சென்றார்களாம் குமோம் மக்கள். வென்றும்விட்டனர். கோவிலும் கட்டினார்கள். அன்று ஏற்றி வைத்த தீபம் இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது என பூசாரி தெரிவித்தார்.மாதம் ஒருவர் என்று பக்கத்து கிராமத்தில் இருந்து வந்து இரவு பூஜை செய்து அங்கேயே தங்கிவிட்டு செல்வார்களாம். அவர்கள் தினமும் எண்ணெய் இட்டு அந்த தீபம் அணையாமல் பாதுகாத்து வருகின்றனர். நான்கு ஐந்து அடி பனி இருந்தாலும் தினமும் தவறாமல் பூஜை நடந்துவிடும்.
பூஜை செய்தார். அனைவரும் பிராகாரத்திற்குள் சென்று வழிபட்டோம்.பிரசாதம் கொடுத்துவிட்டு அவர் சமையல் செய்ய சென்றார். அந்த டீக்கடை இந்த பூசாரியின் தந்தையுடையதாம்.

வானமா? நட்சத்திர வனமா?
இந்த ஒரு காட்சிக்காகவே எத்தனை முறை யார் அழைத்து சென்றாலும் ஜாகேஷ்வருக்கு போகலாம். நட்சத்திரங்கள் பறித்துக்கொள்ளும் தூரத்தில் இருந்தது. அத்தனை நட்சத்திரங்களை வேறு எங்கும் காண முடியாது என நினைக்கிறேன். நட்சத்திரக்கூட்டம் என்பது அவற்றின் எண்ணிக்கையை குறைவாக மதிப்பிட்டுவிடும். நட்சத்திரக் கடல், இல்லை நட்சத்திர பெருங்கடல். எத்தனை எத்தனை உருவங்கள். பிரகாசம்.நடுவானில் வெள்ளை நிறத்தில் பாதை போன்று மேகம். இரவு முழுக்க ரசித்துக்கொண்டு இருக்கலாம் போல இருந்தது. இந்த குளிர் தான்…
உணவா அமிர்தமா?
மீண்டும் ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தோம். இங்கு அமைதியை சுவாசிக்கலாம், உண்ணலாம், உணரலாம், குடிக்கலாம், இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யலாம்.பசித்தது. கோவிலில் இருந்து இறங்கி நான் மட்டும் டீக்கடைக்கு சென்று பேச்சு கொடுத்துக்கொண்டு இருந்தேன். உணவு தயார். ஒரு கடையில் நெய்யில் சுட்ட ரொட்டியும் சப்ஜியும், மற்றொரு கடையில் இருந்து கிச்சடியும் தயாராக இருந்தது. காலையில் இருந்து மலைகளில் ஏறிய களைப்பினை உடல் உணரவில்லை என்ற போதிலும், வயிற்றிக்கு அது தெரியவில்லை. பசி ருசி அறியாது என்பார்கள், ஆனால் அந்த பசியிலும் அது சுவைத்தது. அவர்களின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. அன்பாக இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று ரொட்டியினை சூடாக இட்டுக்கொண்டே இருந்ததால் மறுக்கவே முடியவில்லை. வறுமையில் இருந்தாலும் அந்த இடத்தில் வசிப்பதாலும் , அவர்களின் அன்பாலும் அவர்கள் பணக்காரர்களே.
மீண்டும் இரவு கோவிலுக்குள் சென்றோம். ரம்மியம். அழகு. பேரழகு. நெகிழ்ச்சி. ஆனந்தம். பேரானந்தம்.சுகம். சுகந்தம்….
காலை 4.00 மணிக்கு எழுந்து முகம் கழுவி தியானத்தில் அமர்ந்தோம். மனது தெளிவாகி இருந்தது. லேசாகி இருந்தது. வெட்ட வெளியில் அமர்ந்து இருந்தோம். காற்றில் பறப்பது போன்ற உணர்வு. திடீரென குண்டு வெடித்தது போன்ற சத்தம். பயந்து கண் திறந்து பார்த்தால் காய்ந்த இலை ஒன்று மரத்தில் இருந்து விழுகின்றது. இந்த உவமை படிப்பதற்கு அதிகமாக தெரியலாம், அங்கு சென்று அனுபவித்தால் மட்டுமே இதனை உணரலாம். ஐந்தரை மணிக்கு மற்ற சக யாத்திரிகள் ஜாகேஷ்வரில் இருந்து இமயத்தில் காலை தரிசனத்தை பார்க்க வந்துவிட்டனர்.
நிச்சயம் வாழ்வில் மறக்கவே முடியாத ஓர் இரவு.விடியல் எங்கெங்கும்…
-விழியன்
Tags: Vrruda Jageshwar
wonderful…
//இந்த உவமை படிப்பதற்கு அதிகமாக தெரியலாம், அங்கு சென்று அனுபவித்தால் மட்டுமே இதனை உணரலாம். //
ரொம்பவே ஆர்வத்தை உண்டு பண்ணுகின்றது இந்த வார்த்தை.
அமைதியில் அமைதி கொள்வது இனிமையிலும் இனிமை தான்.
அந்த படத்தில் இருப்பர் யார்?
romba nalla express paniirukkeenga… andha ilai vizhundhadha pathi ezhuthinatha padikkum pothu anga poi atha anubavikanum pola irukku… thanks for sharing this article
simply great…
write up superb…
sphere of silence is always to be experienced..itis something which cannot be expressed only u can feel it…
god bless
படிக்கும் போதே மனசு லேசாகிறது .. அங்கு செல்ல வழிமுறைகள் என்ன , தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போன்ற தகவலையும் எழுதினால் , வித்தியாசமான பயணவிரும்பிகளுக்கு உதவியாக இருக்கும்.
இதை படிக்கும்போது கல்லூரியில் இருந்து இரண்டு முறை வெள்ளியங்கிரி மலை (கோவை அருகில்) சென்ற ஞாபகம்தான் வந்தது. கால் நடையிலேயே இரவு முழுதும் நடந்து விடியற்காலையில் தூய மேகங்கள் நம்மை அணைத்துச் செல்லும் அனுபவமே தனி.
உங்கள் பயணங்களைப் பற்றீ ஒரு தனி தொகுபே போடலாம்.
அன்புடன்
தனசேகர்
Great…. Gethuma
படத்தில் இருப்பது டீக்கடைக்காரர். அந்த பூசாரியின் தந்தை. வித்தியாசமான முகமாக இருந்ததால் ஒரு கிளிக்..
//அங்கு சென்று அனுபவித்தால் மட்டுமே இதனை உணரலாம்//
ம்ம்ம்…..
அருமையான் உணர்வு…
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…
experience well penned; being part of the yatra, i could feel ur exp.
அந்த அனுபவம் அதிலும் முக்கியமாய் நட்சத்திரக் கடலுடன் கூடிய வானம் நாங்களும் கைலைப் பயணத்தில் பார்த்தோம்! உண்மையிலேயே மிகவும் அற்புதமான அனுபவம் தான். நல்ல பதிவு. மிகவும் நன்றாக அனுபவித்ததோடு இல்லாமல் வார்த்தைகளிலும் வடித்திருக்கிறீர்கள். நன்றி.