என்னை காப்பாற்றிய என் வலைப்பூ
2007.புகைப்படம் எடுக்க ஆரம்பித்த காலம். கண்டதை சொடுக்கிக்கொண்டிருந்த நேரம். காசி, இமயம் என ஊர் சுற்றிக்கொண்டிருந்த வருடம் அது. அறைவாசிகள், மேல் வீட்டு நண்பர்கள் என கூட்டமாக வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டு மைசூர் தசரா திருவிழாவினை காண பெங்களூரில் இருந்து மைசூர் புறப்பட்டோம். வழியில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஹைதராபாத் கோட்டை என சுற்றிவிட்டு மைசூர் நகரை நோக்கி நகர்ந்தோம்.
நகரே திருவிழாக்கோலத்தில் இருந்தது. மகிழ்ச்சி போர்வையினை போர்த்திக்கொண்டிருந்தது. காலை உணவினை உண்டுவிட்டு சாமுண்டி மலைக்கு சென்றோம். சாமுண்டி தேவியை தரிசித்துவிட்டு கீழ் இறங்கினோம். இந்தியன் எக்ஸ்பிரசின் முதன்மை நிருபரை தர்மஸ்தலத்தில் சந்தித்து ஒரே அறையினை பகிர்ந்து சிநேகம் கொண்டிருந்தேன். அவரின் சொந்த ஊர் மைசூர். அவரின் பரிந்துரையின் பேரில் சில இடங்களுக்கு சென்றோம். யுவா நிகழ்ச்சி இளைஞர்களுக்காக நடக்கின்றது, நான் அங்கே வருகிறேன் வா சந்திக்கலாம் என அழைத்தார். அவர் அழைத்த இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் மாலைக்குள் மைசூர் அரண்மனைக்கு வருவது இயலாது என்பதால் அவரின் அழைப்பை நிராகரிக்க வேண்டியதாயிற்று. அவருடன் சென்றால் எங்கும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கலாம். அவர் தான் ஊடகத்தை சேர்ந்தவராயிற்றே.
(மைசூர் அரண்மனை புகைப்படங்கள் - http://vizhiyan.wordpress.com/2007/10/16/vizhiyan-photography-16/ )
கண்காட்சிகள் போட்டிகள் என எல்லா அரங்குகளும், விளையாட்டு திடல்களும் நிறைந்து இருந்தது. மல்யுத்தம் நடக்கும் ஒரு திடலுக்கு சென்றோம். மல்யுத்தத்தை முதல் முறை நேரில் காண்கின்றேன்.திடலின் நடுவே செம்மண்னை கொண்டு மல்யுத்த மேடை அமைத்திருந்தார்கள். கொஞ்சம் இடம் விட்டு அந்த மேடையினை சுற்றி நாலாபுறமும் தடுப்பு அமைத்திருந்தார்கள். ஏராளமான கூட்டம் தடுப்பிற்கு அப்பால் இருந்தார்கள். கூடாரம் போல அமைந்திருந்ததால் நிழலில் அனைவரும் அமர்ந்தோம். எனக்கு பார்க்க பார்க்க அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்கின்ற ஆசை. அப்போது Zoom லென்சுகள் கைவசம் இல்லை. மல்யுத்த வீரர்களின் முகபாவங்களை எப்படியும் அருகே சென்று படம்பிடிக்க வேண்டும் என்கின்ற ஆவல் பெருகியபடியே இருந்தது.
போட்டியினை துவங்கி வைக்க கர்நாடகாவின் அமைச்சர் வருகின்றார் என அருகில் இருந்தவர்கள் கூறினார்கள். அதனால் பாதுகாப்பு பலமாக இருந்தது. மல்யுத்த மேடைக்கு அருகே பெரிய மேடை அமைத்து இருக்கைகள் போட்டிருந்தார்கள். மேடைக்கு உள்ளே செல்ல ஒரே ஒரு வழிதான், அங்கே 2-3 போலிஸ்சார் இருந்தார்கள். அன்று ஜிப்பா ஒன்றினை அணிந்து இருந்தேன்.
என்ன தான் நடக்கின்றது நான் அருகே சென்று படம் எடுக்கிறேன் என எழுந்து நடக்கலானேன். மனதில் லேசான பயம் கூட, நுழைவுவாயில் நுழையும் சமயம் கத்தையாக மீசை வைத்திருந்த போலிஸ்காரர் கன்னடத்தில் கேட்டார்
“பிரஸ்சா?”
ஆமாம் என்று தலையாட்டினேன்..
“எந்த பிரஸ்” என்பதை போல கேட்டார்.
கேமராவை காட்டி “WordPress” என்றேன்..
சல்யூட் வைத்து போங்க போங்க என புன்னகைத்தபடியே உள்ளே செல்ல அனுமத்தித்தேர்.
- விழியன்
(மைசூர் தசரா புகைப்படங்கள் – http://vizhiyan.wordpress.com/2007/10/15/vizhiyan-photography-15/
தலைப்பை பார்த்துட்டு ஒடிவந்தேன்…!!!
சூப்பரு:-))))))))))))))))))))))))))
சான்ஸே இல்ல…..கலக்குங்க!
விகடன்ல பாத்து வந்தேன்.
சூப்பர்
வலைப்பதிதல் என்பது ஊடகவியலின் இன்னொரு வடிவம் என்பதை நிச்சயப்படுத்தும் இன்னொரு சம்பவமாக அமைந்திருந்தது உங்கள் அனுபவம்!
வாழ்த்துக்கள். தங்களின் நிழற்படங்கள் எல்லாமே பேசின.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை