என் புதிய நண்பர்கள்
இருங்காட்டுக்கோட்டையில் இருந்து இடதுபுறம் திரும்பி ஐந்து கி.மீ தூரத்தில் இருந்தது காட்ராம்பாக்கம் கிராமம். கடந்த ஞாயிறு (5/2/12) அங்கே துளிர் இல்ல பயிற்சி முகாம்.
(துளிர் இல்லம் என்றால் என்ன? துளிர் இல்லம் என்பது சிறுவர்களுக்கான வாசர் வட்டம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 25 ஆண்டுகளாக துளிர் என்ற அறிவியல் மாத இதழை சிறுவர்களுக்காக கொண்டு வருகின்றது. துளிர் இல்லங்களில் 15- 20 மாணவர்கள் வரை உறுப்பினராக இருப்பார்கள். மாதம் ஒரு இடத்தில் கூடுவார்கள். பாடல்கள், விளையாட்டுகள், கதை சொல்லுதல், துளிர் புத்தகம் வாசித்தல், எளிய அறிவியல் பரிசோதனை செய்தல், விவாதம் செய்தல் என தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெறும். இதற்கு ஆசிரியர் அல்லாத ஒரு நபர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். அன்று நடந்தது இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்)
முந்தைய நாள் இரவே முகாம் துவங்கிவிட்டது. 10 பேர் வந்திருந்தனர். மதுரையில் இருந்து பாண்டியராஜன் வந்து முந்தைய நாள் மாலை பயிற்சி கொடுத்து முடித்திருந்தார். காலை டிபனை முடித்து பயிற்சி தொடர்ந்தது. முதலில் கதை சொல்லுதலும் பாட்டுகளும். முகாம் நடந்தது அந்த ஊரில் பள்ளியில். அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் சக்திவேல் தான் அத்தனை ஏற்பாடு செய்திருந்தார். இதே பள்ளியில் இருந்து தான் சென்ற வருட தேசிய அறிவியல் விழாவிற்கு 4-5 ஆய்வுகள் சமிர்பிக்கப்பட்டு இருந்தது. ஐஐடியில் கடந்த டிசம்பரில் நடந்த மாவட்ட அளவில் நடந்த போட்டிக்கு நானும் ஒரு ஜட்ஜாக சென்று இருந்தேன். அந்த பள்ளி மாணவர்களும் சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டனர்.
(தேசிய குழந்தைகள் அறிவியல் விழா என்றால் என்ன? இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களிடத்தில் ஆய்வுகளை கேட்டு, மாவட்ட, மாநில அளவில் சமர்பித்து பின்னர் ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மாணவர்கள் தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வினை சமர்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பும் அறிவிக்கப்படும். ‘இளம் விஞ்ஞானி’ என்ற பட்டமும் அவர்களுக்கு கிடைக்கும். NCSC (National Children Science Congress)
எட்டு மாணவர்களை தனியாக அழைத்துக்கொண்டு அமர்ந்தேன். நல்ல மர நிழல். சுகமான காற்று. விஸ்தாரமான விளையாட்டு திடல். இரண்டு பெஞ்சுகள் போட்டு அமர்ந்தோம். முதலில் ஒவ்வொருடைய பெயர், அப்பா, அம்மா பற்றிய விவரம், குடும்பம், லட்சியம், ஆசை என கேட்டறிந்தேன். என்னுள் அவர்களை இழுக்க எதாச்சும் செய்யவேண்டும் என்று பழங்களின் பட்டியல், மிருகங்களின் பட்டியல் எழுத ஆரம்பித்தோம். தமிழ் ஆங்கிலம் என இரண்டிலும் எழுதினோம். ஆங்கில பெயர்கள் பாதி அவர்களுக்கு தெரியவில்லை. மெல்ல மெல்ல அவர்களுக்கு என்னை பிடித்துவிட்டது. உலகின் விஸ்தாரத்தை பற்றி கூறினேன், மொபைலில் இருந்த சில படங்களை காட்டினேன். நீங்க இங்க எல்லாம் போகனும்னா படிப்பு தான் முக்கியம் என்றேன். விடாம படிங்க என்றேன். அதன் பின்னர் அவர்கள் என்னைவிடவே இல்லை. எதேதோ பேசினோம். நிறைய கதைகள் சொன்னார்கள். ஆறு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அந்த கிராமத்தை விட்டு வெளியே வர சாத்தியங்கள் மிக குறைவாகவே இருந்தது. அதில் ஒரு பெண் NCSCயில் ஆய்வு சமர்பித்து பேசியது இன்னும் என் நினைவில் நன்றாக இருந்தது. என்ன ஒரு தைரியம், என்ன ஒரு நம்பிக்கை.
ஆரோக்கியமான மூன்று வேலை உணவு, படிப்பில் மட்டும் கவனம், வீட்டில் சுகமான சூழல் என படிக்கும் மாணவர்கள் மத்தியில் இவர்கள் எத்தனை எத்தனை இடர்களுடன் படிக்கின்றனர். பெற்றோர்கள் எங்கே பணி புரிகின்றார்கள் என கூட தெரியாது. பிள்ளைகள் என்ன வகுப்பில் படிக்கின்றனர் என கூட தெரியாது. ஆனால் நாளைய போட்டியில் இவர்கள் போட்டி போட வேண்டியது நகர மாணவர்களுடன். என்ன செய்ய?
மதிய உணவினை முடித்தது மீண்டும் இழுத்து சென்றனர். முகாமில் நான் அதன்பின்னர் கலந்துகொள்ளவில்லை. குழந்தைகளுக்கான நாவல்கள் இரண்டு எழுதிக்கொண்டிருக்கேன். இவர்களிடம் என்ன வரவேற்பு இருக்கு என பரிசோதிக்க இரண்டு கதைகளையும் கூறினேன். உண்மையில் ஒரு கதை குழந்தைகளுக்கானது மற்றது சிறுவர்களுக்கானது. ரொம்ப ரசித்தனர். ‘சூப்பர் சார்’ என்றார்கள். அது போதும். இனி எழுதி முடித்துவிடுவேன்.
திடீரென மனம் கனத்து போனது, இவர்கள் எப்படி அடுத்த நிலைக்கு செல்வார்கள் என. அரும்புகளின் உலகம் இப்படி இருக்கின்றதே. விசாலம் அடைந்தாலொழிய எதுவும் சாத்தியமில்லை. அவர்களுடன் பேச பேச அவர்களின் பாசாங்கற்ற பேச்சு இன்னும் கனமாக்கியது. நான் திரும்பி வருகின்றேன், எப்ப வேண்டுமானாலும் போன் போடுங்க என நம்பர் கொடுத்தேன். நிச்சயம் அடிக்கடி செல்வேன். குட்டி நண்பர்களுக்காக.
(தேசிய அளவில் நடந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து சென்ற வேதா என்னும் மாணவி தன் அனுபவங்களை எழுதுமாறு கேட்டேன். அவள் எழுதி தந்ததை அப்படியே பிழைகளுடன் கிழே தட்டச்சியுள்ளேன்)
அன்புள்ள பிரித்தா,
நலமா? நான் இங்கு நலம், உன் பெற்றோர்கள் நலமா? நான் வந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில கலந்து கொண்டு தேசிய அளவுக்கு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறேன். என் அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் முதலில் காலை 9.30 மணி அளவில் எனது பள்ளிலியிருந்து சென்னையை சென்றடைந்தோம். ஜெய்ப்பூர் செல்வதற்கு கலந்துறை நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து அனைத்து மாணவர்களிடையும் பழகினோம். அங்கிருந்து 3.30 மணி அளவில் சென்னை செண்டரலில் சென்றடைந்தோம். அங்கும் செண்டரலில் இருந்து இரவு 8.30 அளவில் J.T.Express கலம்பியது. அங்கு ரயிலில் செல்லும் போது பல காட்சிகளை ரசித்தேன். அங்கு ஒரு மிகப்பெரிய மரத்தை பார்த்தோம். சூரியன் பெரிய பந்துபோல அழகாக இருந்தது.
24/12/11 அன்று காலை 6 மணியளவில் டெல்லியை சென்றடைந்தோம். அங்கிருந்து 9 மணியளவில் கிளம்பி மாலை 6.30 மணி அளவில் ஜெய்பூரை சென்றடைந்தோம். 27/12/11 அன்று வரவேற்பு விழா நடந்தது. மறுநாள் ஜெய்பூரை சுற்றிக்காடினர். மறுநாள் எங்களுடைய ஆய்வை சமற்பித்தோம். 30/12/11 அன்று பல பள்ளிகள் ஆய்வினை சமற்பித்தன. அன்று மதிய அளவில் அப்துல் கலாமை சந்தித்தோம். மருநாள் காலை பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது எங்கள் ஆய்வு தேர்தெடுக்கப்பட்டது.
எங்களுக்கு A Grade வழங்கப்பட்டது. நனக்கு அந்த Grade கொடுத்தது மிகவும் சந்தொஷமாக இருந்தது. எங்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களும் மிக்வும சந்தோஷம் அடைந்தனர்.
3/1/12 அன்று காலை 7.00 மணி அளவில் சென்னையை வந்து அடைந்தோம். எங்களுக்கு உர்சாக வரற்வேப்பு அளிக்கப்பட்டது. அப்புறம் நாங்கள் வீட்டிற்கு சென்றோம். என்னுடை அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்துகொண்டேன். இது போன்ற நிகழ்ச்சி இருந்தால் தெரிவிக்கவும்,
நன்றி
வேதா
***********************- விழியன்
உங்களது தொடர்ந்த சேவைக்கு இனிய வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி விழியன்.
இதே போன்ற மிகவும் பின்தங்கிய கிராம சூழ்நிலையில் இருந்து வந்த காரணத்தினால், உங்கள் வரிகளையும் அது சுட்டும் பொருளையும் உணரமுடிகின்றது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சூழலில் கூட நமது (தமிழ்) குழந்தைகள் சிலர் அவர்களது பெற்றோர் மற்றும் சமூக அழுத்தங்களினால் எவ்வாறு உளவியல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என நான் அறிந்ததை எழுத எண்ணியுள்ளேன். கடும் பணிச்சுமை மற்றும் சோம்பேறித்தனத்தினால், குறைந்தது சிறு பதிவாவது விரைவில் பதிய வேண்டும்.
அருமையான முயற்சி.
வாழ்த்துகள்.