அப்படி இப்படி – பிப்ரவரி
அப்படி இப்படி – பிப்ரவரி
யூமா வாசுகியுடன் சந்திப்பு
வெகுநாட்கள் என் அலைபேசியில் ஒரு எண் இருந்து அழைக்காமல் இருந்தது யூமா வாசுகியின் எண் தான். 4 ஆண்டுகள் இருக்கலாம். பண்புடன் இதழுக்காக 3 கதைகள் தருகின்றார் போய் வாங்கிட்டுவா என சித்தார்த் சொன்னதும் தான் அவரை அழைத்தேன். முன்னரே இரண்டு முறை பஷீருடன் சந்தித்து இருந்தேன். ஆனாலும் விழியன் என்ற பெயர் நினைவில் இருக்கின்றதா என தெரியவில்லை, சொல்லுங்க விழியன் என்றார். அப்பாடி. விஷயம் சொல்லிவிட்டு மறுநாள் அவர் வீட்டிற்கு காலையிலேயே சென்றுவிட்டேன். முக்கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் மொழி பற்றியும் மொழி பெயர்ப்பு பற்றியும் பேசினார். எளிமையான மனிதர். தன் எழுத்து பணியில் நேர விரயப்படுத்தும் விஷயத்தை பற்றி குறிப்பிட்டார். குறிப்பிட்ட எழுத்துருவில் தட்டச்சி TAM எழுத்துருவிற்கு மாற்றும்போது ஏற்படும் சிக்கலால் பெரும் நேரம் விரயமாகின்றது என குறிப்பிட்டார். இன்று காலை சில நிரல்களை நிறுவி எப்படி எளிமையாக யூனிகோடில் அடிப்பது மற்றும் எப்படி மாற்றுவது என சொல்லிக்கொடுத்துவந்தேன். சிறுபிள்ளையின் ஆர்வத்தை போல திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் பரிசாக கொடுத்து அனுப்பினார். என்ன மாதிரியான எழுத்துக்கள். எப்படி தீவிர இலக்கியத்திலும் செயல்பட முடிகின்றது, எளிமையாக சிறுவர் இலக்கியத்திலும் செயல்படமுடிகின்றது என்ற ஆச்சரியம் அவரின் எழுத்துக்களை படிக்கும்போது மேலோங்குகிறது.
பிப்ரவரி பண்புடன் வாசகர் வட்டம்
வாசகர் வட்டம் இம்முறை நவபாரத் பள்ளியில் நடைபெற்றது. 12 நண்பர்கள் பங்குபெற்றனர். சிறப்பு பேச்சாளராக எழுத்தாளர் கமலாலயன் பங்குகொண்டார். ‘உலகை குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அற்புதமான முக்கியமான உரை. நிகழ்வு வழக்கத்தை விட நிறைவாக இருந்தது. நண்பர்கள் தங்கள் வாசித்த புத்தகம் பற்றியும் அதன் அனுபவம் பற்றியும் பேசினர். சரியான நேரத்தில் ஆரம்பித்து நான்கு முறை முடிக்கலாம் என கோரிக்கைவிடப்பட்டு சுமார் 7 மணிக்கு முடிவிற்கு வந்தது. பின்னர் சுமார் 1 மணி நேரம் சிறுங்கூட்டம் பள்ளி வாசலில் நடந்தது. லக்ஸுடன் நடந்த உரையாடல் அரிதானவை. ஆத்தார்த்தமானவை. அழகானவை.
லக்ஸின் குறும்படம்
நெடுநாளைய நண்பன் லக்ஸ் என்கின்ற லக்ஷமணராஜாவின் குறும்படம் ஏ.வி.எம் தியேட்டரில் கடந்த வெள்ளி திரையிடப்பட்டது. நீர் வழிப்படூவும் – A Journey through Time. லக்ஸ் ஆரம்பத்தில் கணினி வல்லுனராக பணியாற்றி வந்தான். பின்னர் தேவதேவன் கவிதைகள் அவன் வாழ்வினை மாற்றியது. வேலையை உதறிவிட்டு புகைப்படதுறையில் நுழைந்தான். கூழாங்கற்கள் என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் துவங்கினான். திரைதுறையில் நுழைந்து வெளிவந்தான். தற்போது முதல் குறும்படத்தினை இயக்கியுள்ளான். அற்புதமான படம். சந்தோஷின் கேமரா வேலை அபாரம். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம். ரொம்ப கவித்துவமாக இருந்தது. ஆனால் வெகுஜனங்களால் புரிந்துகொள்ளக்கூடிய எளிய மொழியில் இல்லை. கண்களுக்கு நிச்சயம் விருந்து. மனதிற்குள் பல சலனங்களை ஏற்படுத்து. உலக தரத்திற்கு இருந்தது. ஒவ்வொரு ப்ரேமும் பல கதைகள் சொல்லியது. வசனங்கள் இல்லாத குறும்படம். லக்ஸ் நல்லா வருவடா.
அம்பேத்கர் சட்டக்கல்லூரி புகைப்பட போட்டி
அம்பேத்கர் சட்டக்கல்ல்லூரியில் நடக்கும் விழா ஒன்றில் புகைப்பட போட்டிக்கு நீதிபதியாக இருக்கும் பொறுப்பு அண்ணன் ஆசாத் மூலம் கிடைத்தது. மாணவர்களிடம் நல்ல புகைப்பட அறிவு இருக்கின்றது. கிரியேட்டிவிட்டி அருமையா இருக்கும். சரியான வழிகாட்டுதல் அவர்களுக்கு கிடைத்தால் விரைவில் நல்ல புகைப்பட கலைஞர்களை பார்க்கலாம். நாளைய வழக்கறிஞசர்களுக்கு நீதிபதியாக இருந்தது எம்புட்டு பெருமை.
வாசிப்பு
பிப்ரவரியை முழுக்க ஆக்கிரமித்தது கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் தான். பல வருடங்கள் முன்னரே வாசித்திருக்க வேண்டும் என தோன்றியது. சிறுகதைகள் பற்றிய பல எண்ணங்களை சிதைத்தது. உள்ளே இழுக்கும் வசீகர நடை, ஆனாலும் மிக எளிய வார்த்தைகள். புதுமைபித்தனை வாசிக்க ஒரு மனநிலை வேண்டும் ஆனால் கு.அவை அனுக எந்த மனநிலையும் தேவையில்லை. மொத்த தொகுப்பில் கால்வாசியை கடந்திருப்பேன், சில மாதங்கள் இவருடனே கழிக்க மெதுவாகவே வாசிக்கிறேன்.
யூமா வாசுகி மொழிபெயர்த்த ‘நினைவுக் குறிப்புகள்’ புத்தகம் வாசித்தேன். மொழிபெயர்ப்புகள் என்னை கவர்ந்திழுக்கும் காரணம் அறியேன், புதிய வாழ்வியல் முறை, பழக்கப்படாத இடம் போன்ற காரணங்களால் இருக்கலாம். அற்புதமான புத்தகம்.
புகைப்படம்
வெகுநாட்கள் கழித்து நேற்று கேமராவை தொட்டேன். அப்பாவின் சொந்த ஊரிற்கு சுமார் 17 ஆண்டுகள் கழித்து சென்றேன். அங்காளபரமேஸ்வரி அம்மன் திருவிழா. நல்ல புகைப்படங்கள் சிக்கின. அப்பாவும் சுமார் 30 ஆண்டுகள் கழித்து அந்த திருவிழாவிற்கு வந்திருந்தார். அவருடைய மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கேமராவால் பதிவுசெய்ய இயலவில்லை. புகைப்படங்கள் கூடிய விரைவில்.
தேவதை வாழும் வீடு
பழுதாகிப்போன ரிமோட்டை கீழே போட்டு உடைத்தாள். 2 பாகமாக சிதறியது. எதோ படித்துக்கொண்டிருந்த நான் “குழலி “என குரல் கொடுத்தேன்.
“நான் உடைக்கல அம்மா தான் உடைச்சாங்க”
“ஓய்”
“அம்மா தான்பா ஒடச்சாங்க.”
“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது மா”
“அம்மா தான்பா ஒடச்சாங்க ” (வேறு தொனியில்)
“சொன்னா கேக்க மாட்ட. அப்படி சொல்லக்கூடாது”
வேகமாக “அம்மாதான்பாஉடைச்சாங்க”
——–
குழந்தைகளை உறங்க வைப்பது ரெம்ப ரெம்ப குஷ்டம்.
நேற்று இரவு குழலியை மூவர் உறங்க வைக்க சிரமப்பட்டோம். நான்,அம்மா, மனைவி. நான் அம்மாவின் மடியில் தலை வைத்து
“நான் எங்க அம்மா மடியில் தூங்கறனே..” என்றேன். அவளும் அவளுடைய அம்மா மடியில் தலைவைத்து “நானும் எங்க ஆம்மா மடியில தூங்கறனே” என்றாள்.
அம்மா தலை கோத “எங்கம்மா என் தலை கோதறாங்களே” என்றேன்.
அவளும் அவளுடைய அம்மாவை பார்த்தாள் “எனக்கும் எங்கம்மா தலை கோதறாங்களே”
“அம்மா எனக்கு குருவி கதை சொல்லுங்கம்மா” என்றேன். “எங்கம்மா எனக்கு எங்கம்மா குருவி கதை சொல்றாங்களே” என்றேன். அவளும் அப்படியே செய்தால். சரி ஒர்க் அவுட் ஆகுது என நான் கண்ணை மூடுறனே , தூங்கறனே , குறட்டை விடுறனே என்றேன், அவளும் செய்தாள்..
திடீரென எழுந்து “எங்கம்மா மடி மேல உக்காந்து இருக்கனே” என்றாள். மூவருக்கும் என்ன செய்வதென புரியவில்லை
)
———
- விழியன்

//சிறுபிள்ளையின் ஆர்வத்தை போல திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் பரிசாக கொடுத்து அனுப்பினார். //
good to read that..
//அவருடைய மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கேமராவால் பதிவுசெய்ய இயலவில்லை.//
very true.. not all moments can be expressed. only they can be experienced!
//திடீரென எழுந்து “எங்கம்மா மடி மேல உக்காந்து இருக்கனே” என்றாள். மூவருக்கும் என்ன செய்வதென புரியவில்லை )//
lovely!
arumai. thanks for sharing.
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.