பண்புடன் வாசகர் வட்டம் – 2 குறிப்புகள்
பண்புடன் இரண்டாம் வாசகர் வட்ட சந்திப்பு சிறப்பாக நடந்தது. மதியம் 3.00 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை நீடித்தது. குறுகிய வட்டம் என்பதால் ஆழமான விவாதங்கள் நடந்தது.வட்டத்தில் பங்கு பெற்றவர்கள் விழியன், ஸ்டாலின், பிரியா, வித்யா, நந்தா, நரேஷ், செந்தமிழ்செல்வன், மகேஸ்வரி, குணசுந்தரி மற்றும் குழலி.
முதலில் நான் “Survey Saga” என்ற கட்டுரை பற்றிய பகிர்வையும், அதன் முக்கியத்துவத்தை பற்றியும் விரிவாக பேசினேன். இந்த சர்வே சுமார் 40 ஆண்டுகள் நீடித்தது, இதனை “The Great Indian Arc” என குறிப்பிடுகின்றனர். ஒரு மொழிபெயர்ப்பிற்காக என்னிடம் வந்த கட்டுரை. சித்தார்த் சந்திப்பின் போது இதை பற்றி பேசினேன். பின்னர் விரிவான கட்டுரையுடன் இதை பற்றி பேசுகின்றேன்.
ஸ்டாலின் பொன்னீலன் எழுதிய மறுபக்கம் என்னும் நாவலை பற்றி நீண்ட நேரம் பேசினார். மிக சுவாரஸ்யமாக இருந்தது. 800 பக்கங்கள் கொண்ட பெருநாவல். வரலாற்று பிண்ணனி , கதை நடக்கும் காலம், கதாபாத்திரங்கள் என அழகாக விரிவரித்தார். நல்ல கதை சொல்லியாக தேர்ந்து வருகின்றார். அதே சமயம் தன் வாதங்களையும் தர்க்கங்களையும் செழுமைபடுத்திக்கொண்டே வருகின்றார்.
பண்புடனின் நடந்த விவாதங்கள் பற்றியும் சில நேரம் சென்றது. நரேஷின் முதல் கூட்டம் என்பதால் அவர் தன் புத்தக பயணம் பற்றி விவரித்தார். சிறுவர் மலரின் ஆரம்பித்து, நூலகத்தில் தொடர்ந்து, அப்பாவின் புத்தக அறிமுகம், மற்றும் கல்லூரிகளில் வாசித்த புத்தகங்கள், குழும பங்கேற்பு , வலைப்பூ துவங்கியது பற்றி பேசினார்.
கூட்டம் நேர்கோட்டில் செல்லவில்லை என்பது சிறப்பாக இருந்தது. நான் லீனியராக சென்றது. ஒரு விவாதம் வந்தவுடன் அங்கிருந்து வேறு புத்தகம் அங்கிருந்து வேறு சம்பவம் அங்கிருந்து வரலாறு அங்கிருந்து அனுபவம் என பல தளங்களில் பயணித்தது. சிறு குழுவாக இருந்ததால் இது சாத்தியமானது.
போரூரில் உள்ள மாவட்ட நூலகத்தில் அடுத்த கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம். இடைபட்ட காலத்தில் அங்கு ஒரு முறை நேரில் சென்று இட வசதி இருக்கின்றதா என பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.
நந்தாவின் வாசிப்பு ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு வரலாற்று நிகழ்வை வாசிக்கும் போது எப்படி வாசிக்க வேண்டும் என்பதை இவரிடம் கற்க வேண்டும். முதுகுளத்தூர் பயங்கரம் மற்று முதுகுளத்தூர் கலவரம் என்ற இரண்டு நூல்களை வாசித்து, அதனால் இன்னும் 4 நூல்களை தேடி வாசித்து ஒரு வரலாற்றை நம்மிடம் பகிர்ந்தார். பொன் சத்யா எழுதிய சிறுகதை மற்றும் முத்துராமலிங்க தேவர் பற்றிய நூலே இந்த 7 புத்த வாசிப்பிற்கான ஸ்பார்க். உந்துதல். மிக நிறைவாக இருந்தது.
எஸ்.ராவின் இப்போது கடல் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்ற சிறுகதை தொகுப்பின் வாசிப்பு அனுபவத்தை நான் பகிர்ந்துகொண்டேன். சில சிறுகதைகளின் தாக்கம் பற்றியும் விவரித்தேன்.
பண்புடன் சந்திப்புகள் மற்றும் பண்புடன் சுவடுகளின் அடுத்த நிகழ்வுகளை பற்றியும் கலந்துரையாடினோம்.
அடுத்த சந்திப்பு மார்ச் 20, ஞாயிற்றுகிழமை என முன்வைக்கப்பட்டுள்ளது. நேரம் மற்றும் இடத்தை பின்னர் முடிவு செய்யலாம்.
நன்றி.
விழியன்
மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.