Skip to content

யுவகிருஷ்ணாவின் ‘அழிக்கப்பிறந்தவன்’ – விமர்சனம்

January 11, 2012

யுவகிருஷ்ணாவின் “அழிக்கப்பிறந்தவன்”

பிரபல பதிவர்/ எழுத்தாளர் யுவகிருஷ்ணாவின் (லக்கிலுக்) முதல் நாவல் அழிக்கப்பிறந்தவன். படுவேகமான த்ரில்லர் நாவல். பல இடங்களில் சுஜாதாவை நினைவுபடுத்துகின்றது. இணையத்தில் வாசிப்பதற்கும் புத்தகத்தில் வாசிப்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கின்றது. அதே எழுத்து தான் ஆனாலும் ப்ரிண்டில் படித்தால் அது தரும் அனுபவமே வேறாக இருக்கின்றது.

சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார். சல்யூட்ஸ்.

கதையின் ஆரம்பத்திலே ஒரு கொலை நிகழ்கின்றது. வாப்பா, அவர் இளம் வயதில் ஒருவரால் ஏமாற்றப்பட்டு, சென்னை வீதிகளில் அலைந்து மெதுவாக பர்மா பஜாரில் முக்கிய ஆளுமையாக வளர்ந்தவர். அவரிடம் தொழில் கற்று பிரிந்து சென்றவர்கள் மாரியும் நெடுஞ்செழியனும். இருவரில் யார் கொலை செய்தார்கள் என சந்தேகத்துடன் போலிஸ் விசாரிக்கின்றது. அதற்கு முன்னர் டைரகடர் சங்கரின் ‘நண்பன்’ படம் வெளியாவதற்கு முன்னரே டி.வி.டி வடிவில் கிடைக்கின்றது என செய்தி. திருட்டி டி.வி.டி பற்றிய நல்ல அலசல். அதனால் பலரின் வாழ்கை எப்படி சின்னாபின்னமாகின்றது என எடுத்துக்காட்ட விஜயசங்கரின் பகுதி. (இந்த விஜயசங்கர் தான் டைரக்டர் சங்கரோ என இடையில் நினைத்து வாசித்து வந்தேன். ஒருவேளை வாசகரை ஏமாற்ற தான் இப்படி பெயர் வைத்தாரா தெரியவில்லை 🙂 ) வாப்பாவை தொடந்து சில கொலைகள் (யாரென சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்). ஒரு இடத்தில் ரொம்ப சிக்கலாகி கடைசியில் ஒவ்வொரு சிக்கலுக்கும் விடை கிடைக்கின்றது. கதாபாத்திரத்தின் பெயர்கள் மிகவும் பொருந்துகின்றது. கொசு, சித்தூர் முருகேசன், மாரி, மல்லிகா..

பா.ராகவனின் ‘தூணிலும் இருப்பான்’ நாவலை பல இடங்களில் நினைவுபடுத்துகின்றது. அந்த நாவலும் இதே களம், இதே போல ஒரு தாதா, அவருக்கு கீழே பணிபுரியும் கதாநாயகன், அவன் செய்யும் சாகசம், தில்லுமுல்லு என்று செல்லும். பர்மா பஜாரை இரண்டு நாவல்களும் அதே போல காட்டுகின்றன. கதாபாத்திரங்களும் ஒருசேர காணமுடிந்தது. களமும் பாத்திரமும் ஒன்றே கதை வேறு, நடை வேறு.

லாஜிக்கலாக ஒரே இடத்தில் மட்டும் சறுக்கல் இருப்பதாக தோன்றியது. விஜயசங்கர் படங்களை விநியோகிக்கும் காலம் ‘உள்ளத்தை அள்ளித்தா’ வந்த காலம், அந்த காலத்தில் திருட்டு வீ.சீ.டிக்கள், படம் முன்னரே வெளியாவது போன்றவை அதிகம் இல்லை என்றே நினைக்கிறேன். என் நினைவின் கோளாறாக கூட இருக்கலாம்.

தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பவர் யுவகிருஷ்ணா, மேலும் மேலும் பல படைப்புகளை தர வேண்டும் என வாழ்த்துகின்றேன். நாவல் வேகமா இருந்தது போலவே நாவலையும் வேகமாக எழுதி இருப்பார் என தோன்றுகின்றது. அந்த வேகத்தை மட்டும் குறைச்சிக்கோங்க லக்கி.

நாவல் பெயர்: அழிக்கப்பிறந்தவன்
ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பதிப்பகம் : உ
விலை : ரூபாய் 50 /-
கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ்

(லக்கியின் வலைப்பூ முகவரி கொடுப்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல இருக்கும் )

– விழியன்

4 Comments leave one →
  1. January 11, 2012 7:50 am

    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

  2. January 12, 2012 11:39 am

    wow. very good to read this.. I know LuckyLook in blogs since 2006. But did not know anything other than that. Good to see his real name.

    //இணையத்தில் வாசிப்பதற்கும் புத்தகத்தில் வாசிப்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கின்றது. அதே எழுத்து தான் ஆனாலும் ப்ரிண்டில் படித்தால் அது தரும் அனுபவமே வேறாக இருக்கின்றது.//

    well said 🙂 I perfectly agree with it 🙂

    I will surely try to get his book and read the novel 🙂 It reminds me of the movie Ayan 🙂

    Thanks for the review thalaiva.. Best Wishes to LuckyLook alias YuvaKrishna 🙂

  3. January 12, 2012 11:42 am

    //(லக்கியின் வலைப்பூ முகவரி கொடுப்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல இருக்கும் )//

    h aha ha ha ha 🙂 🙂 🙂

  4. January 15, 2012 5:01 pm

    வாங்கியாச்சு இனிதான் படிக்கனும். வீட்டுக்கு வந்ததும் அப்பா வாங்கிக்கிட்டார்.

Leave a comment