ஜனவரி 21 – வாசகர் வட்ட குறிப்புகள்
ஜனவரி 21 – வாசகர் வட்ட குறிப்புகள்
சென்ற வார பொங்கலின் போது சந்திப்பு அறை அலங்கோலமாக இருந்தது. வாசகர் வட்ட சந்திப்பின் முந்திய தினம் அறை சுத்தம் செய்யப்பட்டது. புத்தகங்களையும் பிரித்தெடுத்து அடுக்கிவிடலாமே என களத்தில் இறங்கினோம். புத்தகத்தை அடுக்கி வைப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை, புத்தகமோ டயரியோ பழைய குறிப்புகளோ பழைய நாட்களுக்கு இழுத்து சென்றது. யார் தந்த புத்தகம், எப்போது வாங்கியது, எப்படி எழுதியது, எப்படி படித்தது, இப்படியான நினைவுகள் வந்துவந்து சென்றதால் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. ஒரு வழியாக முந்தைய நாள் இரவில் இருந்து நிலா, வில்லன், ரத்னபிரபா மறுநாள் மதியம் வீட்டிற்குள் நுழையும் வரை அடுக்கிவைத்தல் நடந்துகொண்டே இருந்தது. மதியம் 3 மணிக்கு மூவர் வந்திருந்தனர். இம்முறை 3.30 மணிக்கு ஆரம்பித்துவிடப்படும் என்றதால் 4.00 மணிக்காவது ஆரம்பித்தோம். ப்ரியா, நரேஷ், ஸ்பே, தல பாலபாரதி வந்துசேர்ந்தனர்.
பதிப்பக உலகம் பற்றிய பேச்சுக்களுடன் வட்ட நிகழ்வுகள் தொடங்கியது. வழமை போல அஜண்டா இருந்தது ஆனால் அதன்படி நடக்கவில்லை. பேச்சுகளும் விவாதங்களும் அதன் போக்கிலே பயணித்தது. பல சமயம் சுவாரஸ்யமாக இருந்தாலும் கட்டுப்படுத்தல் அவசியம் என்றே முடிவில் பல நண்பர்கள் தெரிவித்தனர். பாலபாரதியின் புத்தக பதிப்பு அனுபவம், இயங்கும் பதிப்பு உலகம், நண்பர்களில் அனுபவங்கள் என தொடர்ந்தது.
நிலாரசிகன் புத்தக வாசிப்பு பற்றி கூறினான். லஷ்மி சரவணகுமார் எழுதிய ‘உப்பு நாய்கள்’ என்ற நாவலை பற்றி பகிர்ந்துகொண்டான். அதனை தொடர்ந்து கவிதை பற்றிய விவாதம் சூடுபறக்க கிளம்பியது. எது கவிதை, கவிதை செய்யப்படுகின்றது என பாலபாரதி கூற பலமான எதிர்ப்புகுரல்கள் கிளம்பியது. அச்சமயம் ஆசாத்ஜி, மொராஜி (மோர்), சா.கி நடராஜன், விஷ்னு பிரசன்னா, ஸ்நாபக் விநோத் வந்து சேர்ந்திருந்தனர்.
பாலபாரதி தன் நாவலுக்காக உழைத்த நாட்கள் பற்றியும் திருநங்கைகள் பற்றியும் பேசினார். அதை ஒட்டி சா.கி நடராஜன் பகிர்ந்த சம்பவம் கேட்கும் போதே சிறந்த சிறுகதையாக தோன்றியது. அதை தொடர்ந்து மேலும் சில நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். அங்கிருந்து திரும்ப ப்ரேக் போட்டு புத்தகம் பற்றி பேச துவங்கினோம். நிலா வா.கோமுவின் மங்கலத்து தேவதைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தான்.
ஸ்பெ பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ பற்றிய தனது நீண்ட கருத்தினை தெரிவித்தார். நுட்பமான பார்வையுடன் தன் சொந்த அனுபவங்களை சேர்த்து கதைகளை விமர்சித்தார். விட்டால் எல்லா கதை பற்றி சொல்லிவிடுவார் என்பதால் தடுத்துநிறுத்திவிட்டோம். விரைவில் ஸ்பெ மற்றும் நிலாவிடம் இருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். அதனை தொடர்ந்து நானும் சாமியாட்டத்தை பற்றி சில கருத்துக்களை தெரிவித்தேன். அதனை வாசிக்கும் போது காதினில் ஒலித்துக்கொண்டிருந்த இசை பற்றி விளக்கம் அளித்தார் பாலபாரதி. எப்படி இசை தனக்குள் சென்றது என்றும் அதன் வெளிப்பாடாக சிறுகதைகளில் அவரையும் மீறி வெளிப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் குலதெய்வங்கள் பற்றியும் நீண்டநேரம் பகிர்வுகள் நிகழ்ந்தது. ராஜசங்கர், மோர்சுப்ரா, விநோத் ராஜன் மற்றும் உதயன் சேர்ந்தனர். மொழிபெயர்ப்பு பற்றி கொஞ்ச நேரம் விவாதம் நடந்தது. நரேஷ் தான் வாசித்த கேண்டிட் பற்றிய அற்புதமான விமர்சனத்தை முன்வைத்தான். வாசிப்பை எப்படி எல்லாம் அனுக முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தது நரேஷின் விமர்சன பார்வை.
தொடர்ந்து பல்வேறு சிறுசிறு விவாதங்களில் தொடர்ந்து சுமார் எட்டு மணிக்கு முடிந்தது. இருந்தும் ஆங்காங்கே சிறுசிறு கூட்டமாக பேச்சுக்கள்.
வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவது ஒரு சுயநலத்தில் தான். அது தருகின்ற உற்சாகத்திற்காகவும், ஊக்கத்திற்காகவும், ஒத்த கருத்தில்லாமல் போனாலும் வாசிப்பின் மீது நேசகம், காதல், வெறி இருக்கும் நண்பர்களை ஒரு சேர காண்பதற்காகவும், இன்னபிற சொற்களில் அடக்கிவிடமுடியாத காரணத்திற்காக்வும்..
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது வாசகர் வட்டம். தொடர்ந்து உடன் பயணிக்கு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். இனி எங்களுடன் ஓட/பயணிக்க விரும்பும் நண்பர்களுக்கு வந்தனங்கள்.
கலந்துகொண்டோர் : விழியன், நிலாரசிகன், ஸ்பெ, நந்தா, நரேஷ், உதயன், வில்லன், பிரபா, ப்ரியா, வித்யா, செந்தமிழ்செல்வன், சகிநா, ஆசாத் ஜி, தல பாலபாரதி, ஸ்நாபக் விநோத், விநோத் ராஜன், ராஜசங்கர், மோர் சுப்ரா, விஷ்னு பிரசன்னா & உமாநாத்
– விழியன்
சந்திப்பு ஜோர்…
http://sivaparkavi.wordpress.com/
sivapakavi
Kalanthu kolla aasai…Tholaivil iruppathal santhikkum tharunam kuraivaga ullathu vizhian…