Skip to content

Back To College – 2

September 28, 2006

சின்னதாய் நிறைவாய் ஒரு பயணம் – 3 * 4

கலைநிகழ்ச்சி

மாலையில் ஒரு குளுகுளு அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சினிமா பாடல்கள், நடனங்கள் என்று மாணவர்கள் கலக்கினார்கள். கூச்சலும் கும்மாளமும் நிறைந்து இருந்தது. ஒரு மாணவி பாடச்சென்று மாணவக்கூட்டத்தில் இருந்து சத்தம் கிளம்ப சிரித்துக்கொண்டே பாதியில் மேடையில் இருந்து இறங்கினாள். நிச்சயம் அந்த மாணவிக்கு ஒரு சபாஷ். தன்னை கிண்டலடித்ததையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் குணம் காண்பது அரிதல்லவா.. முதலாண்டு மாணவர்கள் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி செய்தனர். மேடையில் ஒரு பென்ச் போட்டு ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜை மிஞ்சும் அளவிற்கு விரல்களில் மேலதாளம் போட்டனர். விசில் அடிக்கலாம் என்று கை சென்றுவிட்டது, அடங்கு உமாநாதா என்று நிறுத்திவிட்டேன். வெளி கல்லூரியில் இருந்து வந்த மாணவி ஒருத்தி திடீரென மேடையேறி ராரா..பாட்டுக்கு பரதம் ஆடினாள்.அனாயசமான ஆட்டம். முழு பாடலுக்கு சிரித்தபடி, அபினயங்கள், கோபம் என்று பாவங்கள் விளையாடின. எங்கிருந்து வந்த உத்வேகம் தெரியவில்லை, அடுத்து நான் பாடுகின்றேன் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் சொல்லி விட்டேன். டொய்ன் டொய்ன்ன்னு மேடைக்கும் சென்று விட்டேன். நான் மேடைக்கு போய் பாடுகின்றேன் என்றது, ஏண்டா இந்த வேண்டாத வேலை, பசங்க பாவம் என்றான் அஸ்ரப்.

ரொம்ப நாள் ஆச்சு மேடையில் எல்லாம் பேசி. கணினியை கை தொட்டதில் இருந்து இந்த மாதிரி சந்தர்பங்கள் மிக குறைவாகவே கிடைத்தது. அதுவும் கல்லூரி கலை நிகழ்ச்சிக்கெல்லாம் போவதே இல்லை. அது வரை எல்லோரும் ஆங்கிலத்தில் பேசியபடியாலும் நான் தமிழில் “அனைவருக்கும் மாலை வணக்கம்” என்றவுடன் கைதட்டல். மேடையில் இருக்கும் போது கைதட்டல் நாம் இன்னும் பேசவா இல்லை பேசியதும் அறுத்ததும் போதும்டா கீழ இறங்குன்னு சொல்வதற்கா என்று தெரியாது..:”சிவ பூஜையில் கரடி புகுந்தது போல உங்க பூஜையில நான்..எனக்கும் ஆடனும்னு ஆசை தான்..ஆனா..” என்று ஆரம்பித்து..”வெறும் சினிமா பாடல்கள் மட்டுமல்ல பாட்டு, இன்னும் ஏராளமான பாடல்கள் உள்ளது, அதே போல சிரிப்பு மட்டுமல்ல கலை, அழுகை, கோபம், கீரல்,ரணங்கள்,பாசம் நேசம் பற்றி பல விஷயங்களையும் தொட வேண்டும், உங்களுக்காக ஒரு அம்மா பாடல்…” என்று சிறிது நேரம் பேசி பாடினேன். (ரமணன் + விபாகை சந்திப்பில் பாடிய பாடல்). அது கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட் பாடல் ( அம்மான்னா பிரச்சனை வந்துவிட போகின்றது 🙂 சாரிங்க தாய் பற்றிய பாடல்). மேடையில் இருந்து கிழே வரேன் பெண்கள் முகத்தில் அங்கும் இங்கும் கண்ணீர்.அடடா ஜாலியா இருந்தவங்களை இப்படி பண்ணிட்டேனே என்ற வருத்தம்.. சீட்டில் வந்து உட்கார்ந்தால் நம்ம அஸ்ரப்பும் கண்ணை துடைக்கின்றான்.கை கொடுத்து..”கலக்கிட்ட மா”. ஒரு நிறைவு தான். நிகழ்ச்சி முடிந்தது சாப்பாடு.

தொழில்நுட்ப புதிய செய்திகள் தெரிந்து கொண்டு உமாநாத் நிறைவடைந்தான், கலை நிகழ்ச்சியில் கலைரசிகன் நிறைவடைந்தான். இரவு உணவினை ஆனந்தமாக உண்டு பாப்பாவும் ‘பூரி’ப்படைந்தைது. இரவு உணவினை ஒரு மைதானத்தில் வைத்தனர். சைவமும் இருந்தது, அசைவவும் இருந்தது. என்ன செய்ய யாரும் வருத்தம் கொள்ள கூடாது என்று இரண்டுமே உண்டேன். சார் ஒரு மீன் ..சார் ஒரு பரோட்டா, சார் தயிர் சாதம். சார் சிப்ஸ்..நடக்க முடியாமல் நடந்து காரில் ஹோட்டலுக்கு சென்றோம். நான்,அஸ்ரப், தீபக், சாதிக் என்ற இரண்டு மாணவர்களும். என் அறைக்கு சென்று குளித்துவிட்டு அஸ்ரப் அறைக்கு வந்தேன். அஸ்ரப் அன்று இரவே கோவை செல்ல வேண்டுமாம். அவனுக்கு எங்களை விட்டுச்செல்ல மனதே இல்லை. 9.30 மணிக்கு போகிறேன், 9.45, 10.00 ,10.15 என்று கடைசியாக 10.30 மணிக்கு பேருந்தில் ஏற்றிவிட்டோம். சாதிக்கும் வீட்டிற்கு சென்றான். தீபகை என்னோடு தங்குமாறு கேட்டுக்கொள்ள அவனும் என் அறையில் தங்கினான். இரவு 2 மணி வரை பேசிக்கொண்டு இருந்தோம். எனது கல்லூரி வாழ்கை, காதல், கடலை, பெங்களூர் வாழ்கை, எழுத்து…அவனது குடும்பம், கல்லூரியில் சுவாரஸ்ய சம்பவங்கள், கலாட்டாக்கள்..ஏதோ ஒரு இடத்தில் ஊங் குட்டியபடி உறங்கிவிட்டிருந்தேன்..

இரண்டாம்  நாள்.

காலை எழுந்து ஒரு புத்தகத்தை முடித்தேன். அகிலன் எழுதிய “நான் கண்ட ரஷ்யா.” 1970களின் பின் பகுதியில் அவர் பயணத்தை பற்றிய கட்டுரைகள். தீபக்கும் பொறுமையாக எழுந்தான். இரவு அவன் தூங்கவில்லை என்று நினனக்கிறேன். லொக் லொக்னு இரும்பியபடி இருந்தான். மூன்று மணிக்கு எழுந்து ஏ.சியை நிறுத்துவிட்டு தூங்கினான். “அண்ணா நான் ரூமுக்கு போய்விட்டு குளிச்சிட்டு வரேன்..நீங்க ரெடியாயிடுங்க..’..”இருடா காபி சாப்பிடுவோம்..”. காபி அருந்துவிட்டு கிளம்பினான். தொலைக்காட்சியில் பூஜ்ஜியத்தில் இருந்து 85 சேனல் வரை இரண்டு முறை சென்று பிறகு கிளம்பினேன். அன்று தான் புதிதாக “மக்கள்” என்ற தனியார் தொலைக்காட்சியை பார்த்தேன். வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகள், சந்திப்புகள், புத்தக விமர்சனம் என்று வந்தது. யார் நடத்துகின்றார்கள் என்ற செய்தி தெரியவில்லை. நிச்சயம் இது மாறுபட்ட ஒரு முயற்சி.

“45 நிமிடத்தில் முடிச்சிடுங்க”  என்று அழகவேல் சொல்லிவிட்டு அரங்கிலிருந்து கிளம்பிட்டார். காலை மணி 10.30. மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தோடு இருந்தனர். “தமிழில் பேசலாமா? ஆங்கிலத்திலா? ” என்றேன். இரண்டிலும் பேசினேன். நேர ஆளுமை பற்றி சின்ன உரையாடல். “உங்களுக்கு நேரம் இருக்கா?..” என்று ஆரம்பித்து எப்படி நேரத்தை விரயப்படுத்துகின்றீர்கள், நீங்கள் போகவேண்டிய பாதை எது? போக வேண்டிய ஊருக்கு இன்னும் பேருந்து எங்கிருக்கின்றதே தெரியாமல் இருக்கின்றீர்களே? நாளை நிலைமையை பற்றி யோசித்தீர்களா? உங்களுக்குள் என்ன தனித்திறமைகள் இருக்கின்றது? அதை வளர்க்கின்றீர்களா? என்று கேள்விகளையும் அவர்கள் சிந்திக்குமாறு சில வினாக்களையும் தொடுத்து உரையை முடித்தேன். ஆங்காங்கு சோர்ந்த முகங்கள். சரி நம் பேசியது ஏதோ சில மாணவர்களுக்காவது சேர்ந்தது என்ற நிம்மதி. இன்று சோர்வுடன் இருந்தாலும் நாளை அது உற்சாகமாக மாறும் என்ற நம்பிக்கையில்…

பின்னர் மேடை போட்டிகள் நடந்தது. 5 நிமிடத்தில் சொல்லும் ஒரு பொருளை விற்பனை செய்யவேண்டும், ஒரு நிமிடத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் பேசவேண்டும், 1 நிமிடம் அந்த தலைப்பிற்கு ஆதரவாகவும், அடுத்த நிமிடம் எதிர்த்தும் பேச வேண்டும்.சரக்கு போதவில்லை. நிறைய வாசித்து இருந்தாலே இது சாத்தியாமாகும். கொஞ்சம் ஆனந்தமாக சென்றது அந்த நிகழ்ச்சிகள். AXE Effectக்கு பதில் சாக்ஸ் Effect என்று விற்பனை செய்தனர். இன்னும் நிறைய போட்டிகள். தனியாக C Debugging போட்டியும் நடந்தது. அந்த போட்டியை காண கூட செல்லவில்லை. ஒரு காலத்தில் ஊருக்கே Debug செய்த காலம் உண்டு, கல்லூரியில் தான். (இப்படியே பேசுடா நீ..அந்த காலத்தில..சின்ன வயசில..ஒல்லியா இருக்கும் போது…போடாங்க…)

மதியம் மல்டிமீடியா காட்சிகள். இதுவும் போட்டி தான். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு, புகை நமக்கு பகை, நல்ல சிந்தனைகள் போன்றவற்றை மையமாக வைத்து மாணவர்கள் தங்கள் வேலைகளை காட்டினார்கள். மாலை நிறைவு விழா.மிண்டும் ஒரு வழக்கமான நிகழ்வு. மாணவர்கள் தங்கள் இரண்டு நாள் அனுபவத்தினை பகிர்ந்தனர். நானும் இரண்டு வார்த்தை பேசினேன் (நன்றி வணக்கம் இல்லைங்க..) இரண்டு வார்த்தை என்றால் இரண்டு அல்ல..என்னை அழைத்த அழகவேலுக்கு நன்றி தெரிவித்தேன். இத்தனை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி நடக்கின்றந்தென்றால் அதன் பின்னால் எத்தனை சண்டை, வேர்வை, உழைப்பு இருக்கும் என்று தெரியும், அவர்களுக்கு முதல் நன்றி & பாராட்டு என்றேன்.. பலத்த கரகோஷம். (இறங்கிடு…போதும்..)

தீபக் என்ற புதிய உறவு…

நான் எத்தனை முறை சார் எல்லாம் வேண்டாம் டா..நான் யூத்டா ஒழுங்க உமான்னு கூப்பிடு இல்ல அண்ணா ஓகெ என்றேன் இவனிடம். அப்பொழுதும் சார் சார் தான் வந்தது அவன் வாயில். ஊருக்கு கிளம்பும் போது தான் வாய் நிறைய அண்ணா அண்ணா என்றான்.ஒத்த கருந்துள்ள நண்பர்களை எங்காவது காணும் போது தான் எத்தனை ஆனந்தம் போரின்பம். அதுவும் எதிர்பார்க்காத ஊரில், எதிர்பார்க்காத இடத்தில்..ஓடி ஓடி வேலை செய்தான். பம்பரமாக சுற்றினான். பஸ்சில் போகலாம் டா…வேணாம் சார் காரில் போகலாம்…இப்படி திரும்பினால்..என்ன சார் வேணும்..? டேய் அமைதியா இருடா என்று பாச வசனங்கள்..வேலூருக்கு பஸ் வந்தது. என்னுடம் இரண்டு வேலூர் மாணவிகள் (போட்டிக்கு வந்திருந்தவர்) வந்தனர். மூவருக்கும் சீட் பிடித்துவிட்டு கிழே இறங்கினான். “அண்ணா என்னை மறந்துடாதீங்க…” கண்கள் குளமாயிருந்தது. அந்த மாணவிகளுக்கு அதிசயமாக இருந்தது. இரண்டு நாளில் இப்படி ஒரு நட்பா..? நட்புக்கு இரண்டு நாள் என்ன இரண்டு நொடி போதுமே.. “அடிக்கடி போன் பண்ணுங்க..நான் பண்றேன்..” என்னால பேச முடியவில்லை. “நல்லா படிடா..பெங்களூர் வந்த மறக்காம வா..”.பேருந்து கிளம்பியது…”சேன்ஸே இல்ல..இந்த மாதிரி ஒரு Feeling வந்ததே இல்லைண்ணா..ஏதோ தொலைக்கிற மாதிரி இருக்கு…”..இருவர் கண்ணில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீர் அந்த பயணத்தை நிறைவாக்கியது..


விழியன்
https://vizhiyan.wordpress.com

6 Comments leave one →
  1. SriniVIT permalink
    September 28, 2006 5:09 am

    Tht was really heart touching,,wish ur thinking and thoughts enlighten the upcoming generation. Salutes.
    Srini

  2. September 28, 2006 9:05 am

    கண்டிப்பாக

  3. கோபு permalink
    September 28, 2006 10:45 am

    நானும் தங்களுடன் வந்ததுபோன்ற ஒரு உள்ளுணர்வு….
    instinct……

    கோபு

  4. Mohan permalink
    September 30, 2006 11:35 am

    எனக்கும் எனது கல்லூரி வாழ்கை, நண்பர்கள் feelings வருது

  5. Menaka permalink
    October 1, 2006 10:01 am

    by reading i am thinking about my college life.thanks for remembering me the old days.

  6. vaani permalink
    January 17, 2008 12:45 am

    “ஒத்த கருந்துள்ள நண்பர்களை எங்காவது காணும் போது தான் எத்தனை ஆனந்தம் போரின்பம். அதுவும் எதிர்பார்க்காத ஊரில், எதிர்பார்க்காத இடத்தில்”

    Thats always nice to have people around us who are in the same wavelength. Intersting na? you have written your experience so well. keep writing more Umanath

Leave a comment