ஒரு கோர விபத்தும் அது மறைக்கப்பட்ட பின்னணியும்
ஒரு கோர விபத்தும் அது மறைக்கப்பட்ட பின்னணியும்
ஒரு கோரமான விபத்து. லாரி மோதி பஸ் கவிழ்ந்து 3 முறை குட்டிக்கரணம் அடித்து விழுந்தது. மூவர் பலி மற்றும் 60 க்கு மேற்பட்டோர் படுகாயம் என ஊடக செய்தி. விபத்து நடந்த 45வது நிமிடத்தில் அந்த இடத்தில் இருந்தேன். பயணிகள் ஏற்கனவே அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். தலைகீழாக இருந்த பேருந்து க்ரேன் மூலம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. பேருந்தின் புகைப்படங்களே விபத்து எத்தனை கோரமானது என்பதனை விளக்கும்.
தமிழகத்தின் தலைப்பு செய்தியாக வந்து, பேருந்துகள் மற்றும் லாரிகளின் வேகம் குறைக்கப்படும் என எதிர்பார்த்திருந்தேன். செய்தி பெரிதுபடுத்தப்படவில்லை.
செய்தி அமுக்கப்பட்ட காரணங்கள்
1. பேருந்தில் பயணித்தது சுமார் 95 பேர். ஞாயிறு காலை நல்ல முகூர்த்தம். திருமணம் முடித்து ஊருக்கு திரும்ப ஏராளமான கூட்டம். பேருந்தில் முகூர்த்தப்பைகள் நிறைய இருந்தது. பலகாரங்கள் சிதறி இருந்தது. 95பேரா, இது சாத்தியமில்லை என சொல்வோர் எதேனும் நாட்களில் மாலையோ காலையோ இந்த ரூட் பேருந்தில் பயணித்தால் புரியும். (சனிக்கிழமை மாலை இதே ரூட்டில் மூச்சு கூட விடமுடியாத கூட்டத்தின் நடுவே நாங்கள் பயணித்து இருந்தோம்)
2. தனியார் பேருந்தின் பெயர் ரிப்பேராகிவிடும்.
3. ஒரு வாரம் முன்னர் திரு.ஜி.கே வாசன் ஆரணி – வேலூர் சாலையில் பயணித்து இருக்கின்றார் அதனால் அங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டிருக்கின்றது.
நான்கு நாட்கள் முன்னர் ஆளுனர் ரோசைய்யா திருவண்ணாமலைக்கு சென்றிருக்கின்றார், அதனால் பைபாஸ் சாலையில் இருந்த எல்லா வேகத்தடையும் அகற்றப்பட்டிருக்கின்றது.
விபத்து நடக்க காரணம் லாரி மற்றும் பேருந்தின் வேகமும் ஒரு காராணம் என்றாலும் அங்கிருந்தோரின் குமுறல் ‘இவனுங்க ** சொகத்துக்கு இத்தனை உயிர் பலியாகிவிட்டதே’ என்பதாகும்.
4. விபத்து நடந்ததும் சாலை மறியல் நடந்தது, உடனடியாக வேகத்தடை போடவேண்டும் என்று.
உண்மையில் சம்பவம் நடந்த இடத்திலேயே 4 பேர் இறந்ததாக கூறினார்கள். நிச்சயம் அதற்கு மேல் உயிர்பலி நடந்துள்ளது. அதைவிட ஒருத்தர் கூட எலும்பு முறிவில்லாமல் தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை.
நம் கோபம் யார் மீது திரும்ப வேண்டும்?
– விழியன்
விபத்து நடந்த இடம் – ஆரணி பைபாஸ் + வேலூர் ஆரணி சாலை சந்திக்கும் இடம்
தேதி : செப்டம்பர் காலை 9 மணி வாக்கில்
விபத்து : ஆரணி தனியார் பேருந்து Vs சிமெண்ட் லாரி
எங்கே எது நடந்தாலும், வேடிக்கை பார்த்துக் கொண்டே வெறும் ஊமைச் சனங்களாகக் குறுகி நின்று கொண்டிருக்கிற நம் மீது தான் கோபம் முதலில் திரும்ப வேண்டும் விழியன்!ரௌத்திரம் பழகு என்று பாரதி சொன்னது வெற்று வார்த்தைகள் இல்லை.
இதுதான் தற்போதைய அரசுகளின் நடவடிக்கையாகி விட்டது. முதலில் உண்மையை மறைத்தல். அதன் பின் நடவடிக்கை எடுப்பது போன்று நடித்தல். வாழ்க சுதந்திரம், வாழ்க ஜனநாயகம்.
நீங்களும் விபத்து நடந்த இடம், நேரம், பேரூந்து போன்ற விவரங்களை குறிப்பிடவில்லையே ஏன்?
இவ்வளவு விலாவாரியாக போட்டோ எடுத்த தாங்கள் அதை ஏன் ஒரு நாளிதழுக்கு கொடுத்து அதை ஒரு பரபரப்புச் செய்தியாக்கி இருக்கலாமே?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
ஐயா, தினசரிகளை சேர்ந்த நிருபர்கள் என்னுடன் புகைப்படம், வீடியோ எடுத்தார்கள். மறுநாள் தானே செய்தி மறைக்கப்பட்டது தெரிந்தது.
தினகரனுக்கும் தினமலருக்கும் ஆகாது,தினமணி ஐயர் பத்திரிகை,தினத்தந்தி எதவேனாலும் போடுவாங்க இப்படி இருக்க வேறு எது அவர்களை இந்த ஒரு விசயத்தில் ஒன்று சேர்த்தது?அரசு விளம்பரமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. பின்பலம் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணம்.
விழியன் சார் பின்னணி இப்படி அல்லவா வரும் கொஞ்சம் திருத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்…
நன்றி. மாற்றிவிடுகிறேன்.