ஜனவரி 21 – வாசகர் வட்ட குறிப்புகள்
ஜனவரி 21 – வாசகர் வட்ட குறிப்புகள்
சென்ற வார பொங்கலின் போது சந்திப்பு அறை அலங்கோலமாக இருந்தது. வாசகர் வட்ட சந்திப்பின் முந்திய தினம் அறை சுத்தம் செய்யப்பட்டது. புத்தகங்களையும் பிரித்தெடுத்து அடுக்கிவிடலாமே என களத்தில் இறங்கினோம். புத்தகத்தை அடுக்கி வைப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை, புத்தகமோ டயரியோ பழைய குறிப்புகளோ பழைய நாட்களுக்கு இழுத்து சென்றது. யார் தந்த புத்தகம், எப்போது வாங்கியது, எப்படி எழுதியது, எப்படி படித்தது, இப்படியான நினைவுகள் வந்துவந்து சென்றதால் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. ஒரு வழியாக முந்தைய நாள் இரவில் இருந்து நிலா, வில்லன், ரத்னபிரபா மறுநாள் மதியம் வீட்டிற்குள் நுழையும் வரை அடுக்கிவைத்தல் நடந்துகொண்டே இருந்தது. மதியம் 3 மணிக்கு மூவர் வந்திருந்தனர். இம்முறை 3.30 மணிக்கு ஆரம்பித்துவிடப்படும் என்றதால் 4.00 மணிக்காவது ஆரம்பித்தோம். ப்ரியா, நரேஷ், ஸ்பே, தல பாலபாரதி வந்துசேர்ந்தனர்.
பதிப்பக உலகம் பற்றிய பேச்சுக்களுடன் வட்ட நிகழ்வுகள் தொடங்கியது. வழமை போல அஜண்டா இருந்தது ஆனால் அதன்படி நடக்கவில்லை. பேச்சுகளும் விவாதங்களும் அதன் போக்கிலே பயணித்தது. பல சமயம் சுவாரஸ்யமாக இருந்தாலும் கட்டுப்படுத்தல் அவசியம் என்றே முடிவில் பல நண்பர்கள் தெரிவித்தனர். பாலபாரதியின் புத்தக பதிப்பு அனுபவம், இயங்கும் பதிப்பு உலகம், நண்பர்களில் அனுபவங்கள் என தொடர்ந்தது.
நிலாரசிகன் புத்தக வாசிப்பு பற்றி கூறினான். லஷ்மி சரவணகுமார் எழுதிய ‘உப்பு நாய்கள்’ என்ற நாவலை பற்றி பகிர்ந்துகொண்டான். அதனை தொடர்ந்து கவிதை பற்றிய விவாதம் சூடுபறக்க கிளம்பியது. எது கவிதை, கவிதை செய்யப்படுகின்றது என பாலபாரதி கூற பலமான எதிர்ப்புகுரல்கள் கிளம்பியது. அச்சமயம் ஆசாத்ஜி, மொராஜி (மோர்), சா.கி நடராஜன், விஷ்னு பிரசன்னா, ஸ்நாபக் விநோத் வந்து சேர்ந்திருந்தனர்.
பாலபாரதி தன் நாவலுக்காக உழைத்த நாட்கள் பற்றியும் திருநங்கைகள் பற்றியும் பேசினார். அதை ஒட்டி சா.கி நடராஜன் பகிர்ந்த சம்பவம் கேட்கும் போதே சிறந்த சிறுகதையாக தோன்றியது. அதை தொடர்ந்து மேலும் சில நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். அங்கிருந்து திரும்ப ப்ரேக் போட்டு புத்தகம் பற்றி பேச துவங்கினோம். நிலா வா.கோமுவின் மங்கலத்து தேவதைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தான்.
ஸ்பெ பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ பற்றிய தனது நீண்ட கருத்தினை தெரிவித்தார். நுட்பமான பார்வையுடன் தன் சொந்த அனுபவங்களை சேர்த்து கதைகளை விமர்சித்தார். விட்டால் எல்லா கதை பற்றி சொல்லிவிடுவார் என்பதால் தடுத்துநிறுத்திவிட்டோம். விரைவில் ஸ்பெ மற்றும் நிலாவிடம் இருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். அதனை தொடர்ந்து நானும் சாமியாட்டத்தை பற்றி சில கருத்துக்களை தெரிவித்தேன். அதனை வாசிக்கும் போது காதினில் ஒலித்துக்கொண்டிருந்த இசை பற்றி விளக்கம் அளித்தார் பாலபாரதி. எப்படி இசை தனக்குள் சென்றது என்றும் அதன் வெளிப்பாடாக சிறுகதைகளில் அவரையும் மீறி வெளிப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் குலதெய்வங்கள் பற்றியும் நீண்டநேரம் பகிர்வுகள் நிகழ்ந்தது. ராஜசங்கர், மோர்சுப்ரா, விநோத் ராஜன் மற்றும் உதயன் சேர்ந்தனர். மொழிபெயர்ப்பு பற்றி கொஞ்ச நேரம் விவாதம் நடந்தது. நரேஷ் தான் வாசித்த கேண்டிட் பற்றிய அற்புதமான விமர்சனத்தை முன்வைத்தான். வாசிப்பை எப்படி எல்லாம் அனுக முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தது நரேஷின் விமர்சன பார்வை.
தொடர்ந்து பல்வேறு சிறுசிறு விவாதங்களில் தொடர்ந்து சுமார் எட்டு மணிக்கு முடிந்தது. இருந்தும் ஆங்காங்கே சிறுசிறு கூட்டமாக பேச்சுக்கள்.
வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவது ஒரு சுயநலத்தில் தான். அது தருகின்ற உற்சாகத்திற்காகவும், ஊக்கத்திற்காகவும், ஒத்த கருத்தில்லாமல் போனாலும் வாசிப்பின் மீது நேசகம், காதல், வெறி இருக்கும் நண்பர்களை ஒரு சேர காண்பதற்காகவும், இன்னபிற சொற்களில் அடக்கிவிடமுடியாத காரணத்திற்காக்வும்..
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது வாசகர் வட்டம். தொடர்ந்து உடன் பயணிக்கு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். இனி எங்களுடன் ஓட/பயணிக்க விரும்பும் நண்பர்களுக்கு வந்தனங்கள்.
கலந்துகொண்டோர் : விழியன், நிலாரசிகன், ஸ்பெ, நந்தா, நரேஷ், உதயன், வில்லன், பிரபா, ப்ரியா, வித்யா, செந்தமிழ்செல்வன், சகிநா, ஆசாத் ஜி, தல பாலபாரதி, ஸ்நாபக் விநோத், விநோத் ராஜன், ராஜசங்கர், மோர் சுப்ரா, விஷ்னு பிரசன்னா & உமாநாத்
- விழியன்
இரண்டாம் வருடத்தில் – பண்புடன் வாசகர் வட்டம்
இப்ப தான் ஆரம்பிச்சத்து போல இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிட்டு இருக்கு. பண்புடன் வாசகர் வட்டம் இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது.
புத்தகம் விசிறிகள், புத்தக நேசகர்கள் சிலர் கூடி புத்தகம் பற்றியும் வாசிப்பு பற்றியும் பேசும் / விவாதிக்கும் முயற்சியே வாசகர் வட்டம். இது என்ன செய்துவிடுகின்றது?
1. புத்தகங்களை அறிமுகம் செய்கின்றது.
2. எழுத்தின் வெவ்வேறு பார்வையை காட்டுகின்றது.
3. வாசிப்பினை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கின்றது
4. ஒத்த நேசமுடைய நண்பர்களை கூட்டுகின்றது.
5. புதிய எல்லைகளையும் இலக்குகளையும் காட்டுகின்றது
6. இப்படி பட்டியலிட்டு எதையும் செய்ய முடியாது எனவும் சொல்கின்றது.
இவ்வளவு நடக்குது, விருப்பம் இருந்தால் அவசியம் வாங்க. புத்தகம் பற்றி பேசலாம்.
நாள் : 21, ஜனவரி 2012
நேரம் : மாலை 3.30 மணி முதல்
இடம் : விழியன் இல்லம், 2 A, சாந்தம்மாள் தெரு, சிவன் நகர், துண்டலம். ஐயப்பன் தாங்கல், சென்னை – 77. (ஐயப்பன் தாங்கல் டிப்போவில் இருந்து நேராக ஆயில் மில் ரோட்டின் கடைசியில் உள்ளது)
தொடர்புக்கு : 9094009092
இதுவரை உறுதி செய்துள்ளவர்கள்:
நிலாரசிகன், நந்தா & துணைவி, நரேஷ், மோர்சுப்ரா, ஸ்டாலின் பெலிக்ஸ், ஆசாத், உதயன், ப்ரியா, ஸ்நாபக் விநோத், ராஜசங்கர், ப்ரியன், உமாநாத் & விழியன்
- விழியன்
சாமியாட்டம் – நூல் அறிமுகம்
பாலபாரதி என சிலராலும் தல என பலராலும் அழைக்கப்படும் எஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். வழக்கமாக சிறுகதை தொகுதிகள் வாசிப்பது வேகமாக சென்றுவிடும். ஆனால் இந்த தொகுப்பை அத்தனை வேகமாக வாசிக்கமுடியவில்லை. காரணம் அந்த எழுத்து ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். ஒவ்வொரு கதையை கடக்கையிலும் ஆழ்மனதில் புதைந்திருந்த பல கதைகளையும் நினைவுகளையும் மீட்டு வந்தது என்பதே உண்மை.
பாலபாரதியை பல வருடம் முன்னர் இணையத்தில் அறிமுகம். நேரில் இதுவரை 4-5 முறை மட்டுமே சந்தித்து இருப்பேன். கடந்த வருடம் ஒரு மாலை சீமானை சந்திக்க நண்பர்கள் சில பண்புடன் சார்பாக சந்திக்க சென்றிருந்தோம். சந்திக்க தாமதமானதால் முன்னறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த பேச்சு பல எண்ணங்களை கிளறியது. பத்திரிக்கையாளர் ஒருவரிடம் மிக நெருங்கி பழகியது அது தான் முதல் முறை. சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்தபடி இருந்தார் பாலா. “நீ கண்டிப்பா சில சிறுகதைகளை படி” என்று துரைபாண்டியின் கதையினையும் கோட்டிமுத்து கதையினையும் பரிந்துரைத்தார். ஆனால் அந்த பரிந்துரையை காற்றிலேயே பறக்கவிட்டேன்.
கோட்டிமுத்து என்ற முதல் சிறுகதை வாசிக்க ஆரம்பித்ததுமே அப்பா அடிக்கடி குறிப்பிடும் கந்தர்வனின் சிறுகதை நினைவிற்கு வந்தது (இதையே தமிழ்ச்செல்வனும் முன்னுரையும் குறிப்பிட்டதை பின்னர் கண்டேன்) ‘சாமியாட்டம்’ கதையின் கடைசி வரி முடிந்ததும் மீண்டும் ஒருமுறை கதையை வாசிக்க வைத்தது. எந்த விஷயத்தையும் நேரடியாக சாடாமல், காட்சிகளின் மூலம் வாசகனை சிந்திக்க வைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. விடிவெள்ளி கதையும் முடிவு இதற்கு நல்ல உதாரணம். மெல்லிய அங்கதத்துடனே இவை சாடப்பட்டும் இருக்கின்றது. கதைகளின் கட்டமைப்பில் பெரும் புதிய முயற்சிகள் இல்லை, அற்புதமான கதைசொல்லிக்கு அவை தேவையுமில்லை என்றே நினைக்கிறேன்.

வாசிக்கையில் காதில் ஒருவிதமான இசை அநேகமான கதைகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சில சமயம் அது நகரத்தில் இரைச்சலாகவும், சில சமயம் இராமேஸ்வரத்தின் ஆலய ஒலியாகவும், இரயில் சத்தமாகவும், மேள சத்தமாகவும், சாமியாட்டத்தின் தப்பு சத்தமாகவும், பெரியவரின் முனகல் சத்தமாகவும், பாரதியாரின் பாடலாகவும், பேய்வீட்டு பங்களாவின் அரவாகவும், தண்ணீர் தேசத்தின் லாரி இரைச்சலும், மனதின் உள்ளோசைகளும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. வாசிப்பு அனுபவத்தினை இவை நிச்சயம் அதிகரித்தது.
புத்தகத்தை முழுதும் வாசித்ததும் சீக்கிரம் மும்பைக்கும் இராமேஸ்வரத்திற்கும் செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறுகதைக்கான தலைப்புகள் ஒரு வார்த்தையிலேயே அமைந்துள்ளது. மிக சாதாரண வார்த்தைகள். குழம்பமில்லாத கதைகள் போன்றே தலைப்புகளும் அமைந்துள்ளது. சில சமயம் வாசகனை உள் இழுக்காமல் போகசெய்யும் சாத்தியக்கூறுகளும் உள்ளது.
தெளிந்த ஆற்றங்கரையில் கால்களை நீரில் சிலம்பிதும் உள்மனதில் எழுப்பும் ஆனந்தத்தை இந்த சிறுகதைகள் தந்தன.
பாலபாரதிக்கு உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் இன்னும் பல சிறுகதைகளை காலம் நமக்கு வெளிவர வரம் அளிக்க வேண்டும். மென்மேலும் பல படைப்புகளின் ஊடாக சாமானியனின் கதைகள் / உணர்வுகள் / மெல்லுணர்ச்சிகள் உலகறிய வேண்டும் என்பதே தம்பிகளின் ஆவா.
தல பாலபாரதியின் வலைத்தளம்
http://blog.balabharathi.net/
பொன். வாசுதேவன் எழுதிய சாமியாட்டத்திற்கான நூல் அறிமுகம் இங்கே.
http://www.aganazhigai.com/2012/01/blog-post_15.html
- விழியன்
2012 புத்தக கண்காட்சி பட்டியல் – 2
அடுத்த பட்டியல். ஒரு திருப்திகரமான வேட்டையாக இருந்தது. காமிக்ஸ் புத்தகங்களுக்கு மட்டும் தடை விழுந்து இருந்தது (வீட்டில்).
| S.NO | புத்தக பெயர் | ஆசிரியர்/பதிப்பகம் | வகை |
| 1 | குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி | ரேவதி | கட்டுரைகள்/கதை |
| 2 | Malgudi school days | R K Narayanan | நாவல் |
| 3 | Grandmother’s Tale | R K Narayanan | நாவல் |
| 4 | Mr. Sampath | R K Narayanan | நாவல் |
| 5 | சாமியாட்டம் | பாலபாரதி | சிறுகதைகள் |
| 6 | வீட்டுக்கு ஒரு மருத்துவர் | உமர் பரூர்(பாரதி) | கட்டுரைகள் |
| 7 | கலிலியோ | பேரா.வி.முருகன்
(பாரதி) |
கட்டுரைகள் |
| 8 | தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் | பாரதி புத்தகாலயம் | |
| 9 | இரா.நடராசன் சிறுகதைகள் | பாரதி புத்தகாலயம் | |
| 10 | அறியப்படாத தமிழ் உலகம் | பாரதி புத்தகாலயம் | கட்டுரைகள் |
| 11 | உலகை குலுக்கிய பத்து நாட்கள் | வி.பத்மநாபன் | கட்டுரைகள் |
| 12 | தம்தம் – தம்பி புத்தகம் | பாரதி புத்தகாலயம் | சிறுவர் |
| 13 | பள்ளிக்கூடம் | அர்க்காதிய் கைதார் | ருஷ்ய நாவல் |
| 14 | Parent’s Circle | Magazine | |
| 15 | ஆடுவோமே பாட்டு பாடுவோமே | நமசிவாயம் | |
| 16 | +2க்கு பிறகு என்ன படிக்கலாம் | K. Sathyanarayan | |
| 17 | Swami Vivekananda & Success of students | ||
| 18 | Awakening India | Swami Vivekananda | |
| 19 | குழந்தை வளர்ப்பு விதிகள் | Richard Templar | |
| 20 | சிறப்பான வாழ்கைக்கு 700 எளிய வழிகள் | Robert Ashton | |
| 21 | உடல் பருமனை குறைப்பது எப்படி | இரா.பூபதி | அவ்வ்வ் |
| 22 | எனது குழந்தை பருவம் | மாக்ஸிம் கார்க்கி | கட்டுரை |
| 23 | டயர் சமையல் | கிழக்கு | |
| 24 | கருத்த லப்பை | கீரனுர் ஜாக்கிர்ராஜா | நாவல் |
| 25 | நவீன தமிழ் சிறுகதைகள் | சாகித்திய அகாடமி | |
| 26 | கு.அழகிரிசாமி கதைகள் | சாகித்திய அகாடமி | |
| 27 | கண் தெரியாத இசைஞன் | விளாதீமிர் கொரல்ண்டெ | |
| 28 | பழைய கதை புதிய பார்வை | கட்டுரை | |
| 29 | கதாநாயகன் மரணம் | ராஜன்குறை | சினிமா கட்டுரை |
| 30 | ஏழு தலைமுறை | நாவல் |
புத்தக கண்காட்சி அனுபவம் விரைவில்..
- விழியன்
யுவகிருஷ்ணாவின் ‘அழிக்கப்பிறந்தவன்’ – விமர்சனம்
யுவகிருஷ்ணாவின் “அழிக்கப்பிறந்தவன்”
பிரபல பதிவர்/ எழுத்தாளர் யுவகிருஷ்ணாவின் (லக்கிலுக்) முதல் நாவல் அழிக்கப்பிறந்தவன். படுவேகமான த்ரில்லர் நாவல். பல இடங்களில் சுஜாதாவை நினைவுபடுத்துகின்றது. இணையத்தில் வாசிப்பதற்கும் புத்தகத்தில் வாசிப்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கின்றது. அதே எழுத்து தான் ஆனாலும் ப்ரிண்டில் படித்தால் அது தரும் அனுபவமே வேறாக இருக்கின்றது.

சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார். சல்யூட்ஸ்.
கதையின் ஆரம்பத்திலே ஒரு கொலை நிகழ்கின்றது. வாப்பா, அவர் இளம் வயதில் ஒருவரால் ஏமாற்றப்பட்டு, சென்னை வீதிகளில் அலைந்து மெதுவாக பர்மா பஜாரில் முக்கிய ஆளுமையாக வளர்ந்தவர். அவரிடம் தொழில் கற்று பிரிந்து சென்றவர்கள் மாரியும் நெடுஞ்செழியனும். இருவரில் யார் கொலை செய்தார்கள் என சந்தேகத்துடன் போலிஸ் விசாரிக்கின்றது. அதற்கு முன்னர் டைரகடர் சங்கரின் ‘நண்பன்’ படம் வெளியாவதற்கு முன்னரே டி.வி.டி வடிவில் கிடைக்கின்றது என செய்தி. திருட்டி டி.வி.டி பற்றிய நல்ல அலசல். அதனால் பலரின் வாழ்கை எப்படி சின்னாபின்னமாகின்றது என எடுத்துக்காட்ட விஜயசங்கரின் பகுதி. (இந்த விஜயசங்கர் தான் டைரக்டர் சங்கரோ என இடையில் நினைத்து வாசித்து வந்தேன். ஒருவேளை வாசகரை ஏமாற்ற தான் இப்படி பெயர் வைத்தாரா தெரியவில்லை
) வாப்பாவை தொடந்து சில கொலைகள் (யாரென சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்). ஒரு இடத்தில் ரொம்ப சிக்கலாகி கடைசியில் ஒவ்வொரு சிக்கலுக்கும் விடை கிடைக்கின்றது. கதாபாத்திரத்தின் பெயர்கள் மிகவும் பொருந்துகின்றது. கொசு, சித்தூர் முருகேசன், மாரி, மல்லிகா..
பா.ராகவனின் ‘தூணிலும் இருப்பான்’ நாவலை பல இடங்களில் நினைவுபடுத்துகின்றது. அந்த நாவலும் இதே களம், இதே போல ஒரு தாதா, அவருக்கு கீழே பணிபுரியும் கதாநாயகன், அவன் செய்யும் சாகசம், தில்லுமுல்லு என்று செல்லும். பர்மா பஜாரை இரண்டு நாவல்களும் அதே போல காட்டுகின்றன. கதாபாத்திரங்களும் ஒருசேர காணமுடிந்தது. களமும் பாத்திரமும் ஒன்றே கதை வேறு, நடை வேறு.
லாஜிக்கலாக ஒரே இடத்தில் மட்டும் சறுக்கல் இருப்பதாக தோன்றியது. விஜயசங்கர் படங்களை விநியோகிக்கும் காலம் ‘உள்ளத்தை அள்ளித்தா’ வந்த காலம், அந்த காலத்தில் திருட்டு வீ.சீ.டிக்கள், படம் முன்னரே வெளியாவது போன்றவை அதிகம் இல்லை என்றே நினைக்கிறேன். என் நினைவின் கோளாறாக கூட இருக்கலாம்.
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பவர் யுவகிருஷ்ணா, மேலும் மேலும் பல படைப்புகளை தர வேண்டும் என வாழ்த்துகின்றேன். நாவல் வேகமா இருந்தது போலவே நாவலையும் வேகமாக எழுதி இருப்பார் என தோன்றுகின்றது. அந்த வேகத்தை மட்டும் குறைச்சிக்கோங்க லக்கி.
நாவல் பெயர்: அழிக்கப்பிறந்தவன்
ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பதிப்பகம் : உ
விலை : ரூபாய் 50 /-
கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
(லக்கியின் வலைப்பூ முகவரி கொடுப்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல இருக்கும் )
- விழியன்
2012 புத்தக கண்காட்சி புத்தக பட்டியல்
2012 புத்தக கண்காட்சிக்கு மூன்று முறை சென்று எடுத்த புத்தக பட்டியல். இம்முறை மிக குறைவாக எடுக்க வேண்டும் என்றே சென்றேன்.
| S.NO | Book Name | Author | Publisher |
| 1 | அழிக்கப்பிறந்தவன் | யுவகிருஷ்ணா | உ |
| 2 | முட்டம் | சிறில் அலெக்ஸ் | ஆழி |
| 3 | உங்கள் குழந்தைகள் திறமைகளை வளர்ப்பது எப்படி? | ஏ.ஆர்.ராமராஜு | |
| 4 | ஒரு ரூபாய் டீச்சர் | யூமா வாசுகி | NCBH |
| 5 | ஆரணி | ஆழி | |
| 6 | வேலூர் | ஆழி | |
| 7 | ஊர் சுற்றி புராணம் | ராகுல் | |
| 8 | நாவலும் வாசிப்பும் | ஆ.இரா. வேங்கடாசலபதி | காலச்சுவடு |
| 9 | பாத்துமாவின் ஆடு | வைக்கம் முகமது பஷீர் | காலச்சுவடு |
| 10 | அறம் | ஜெயமோகன் | வம்சி |
| 11 | சென்றதும் நின்றதும் | ஜெயமோகன் | தமிழினி |
| 12 | சிந்தனை பலம் தரும் | எம்.ஏ.பழனியப்பன் | |
| 13 | பட்சியன் சரிதம் | இளங்கோ கிருஷ்ணன் | காலச்சுவடு |
| 14 | சப்தங்கள் | வைக்கம் முகமது பஷீர் | காலச்சுவடு |
| 15 | எங்க உப்பாவுக்கு கொரு ஆணையிருந்த்து | வைக்கம் முகமது பஷீர் | காலச்சுவடு |
| 16 | ஆனைவாரியும் பொன்குருசும் | வைக்கம் முகமது பஷீர் | காலச்சுவடு |
| 17 | அமெரிக்காகாரி | அ.முத்துலிங்கம் | காலச்சுவடு |
| 18 | கிழவனும் கடலும் | எம்.எஸ் | காலச்சுவடு |
| 19 | அப்பத்தா | பாரதி கிருஷ்ணகுமார் | The Roots |
| 20 | ஆறாத வடு | சயந்தன் | தமிழினி |
| 21 | ஒளிராத இந்தியா | அ.முத்துகிருஷ்ணன் | தமிழினி |
| 22 | கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் | அ. முத்துகிருஷ்ணன் | |
| 23 | செகாவின் மீது பனி பெய்கிறது | எஸ்.ரா | |
| 24 | வானில் பறக்கும் புள்ளெல்லாம் | சு.தியோடர் பாஸ்கரன் | |
| 25 | நீங்க தான் சாவி | சுரேகா | |
| 26 | ஞாபகங்கள் இல்லாத போகுமொரு நாளில் | செல்வராஜ் ஜெகதீசன் | அகநாழிகை |
எப்படியும் இன்னும் குறைந்தது 2-3 முறை மீண்டும் செல்வோம். இந்த வருட கண்காட்சி அனுபவங்கள் விரைவில்..
- விழியன்
Vizhiyan Photography – Great Bombay Circus
குழலிக்கு வாக்களித்திருந்ததால் தானேயின் தாண்டவத்தின் பின்னர் சர்க்கஸ் சென்றிருந்தோம். சந்தோஷத்தைவிட அவர்களின் வாழ்கை சற்றே வருத்தம் அளித்தது. அவசியம் இந்த கலையை ஊக்குவிக்க வேண்டும்.
1. சிரித்து வாழ்

2. பிடிப்பு

3. உறுதி

4. சுழற்சி

5. வாழ்(விக்கும்)கை

6. பிழைப்பு

7. காற்றில் நடனம்

8. நானா கோமாளி??

9. அந்தரத்தில் தொங்கும் வாழ்கை

- விழியன்
Vizhiyan Photography – Dec 2011
கடந்த ஒரு மாதத்தில் எடுத்த சில புகைப்படங்கள்
1. பிள்ளையார்பட்டி

2. மதுரை நாயகர் மகால்

3. ரெளத்திரம் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில்)

4. Splash (குற்றாலம்)

5. குற்றால குளியல்

6. வேடந்தாங்கல்

7. பழமுதிர்சோலை

8. பம்பை

9. தாய்மை (பழமுதிற்சோலை)

10. கவிதை – குடைகளை விற்ற பெண் – மதுரை வீதி

11. துரை

12. இங்கே வராமல் (வேடந்தாங்கல்)

13. நாயக்கர் மஹால்

14. நண்பன். கந்தபழனி

- விழியன்
Happy New Year 2012. அடுத்த வருடம் சந்திப்போம் நண்பர்களே.
2012 ஆண்டே வா வா.
வேடந்தாங்கல்
Write a short note on Vedanthangal:
பள்ளி நாட்களில் சென்னை டூர் என்றால் காலை உணவு வேடந்தாங்கலில் தான். பறவைகள் இருக்கும் என்பார்கள். ஆனால் அந்நாட்களில் பறவை இருக்கும் சமயமாக வரமாட்டோம், எப்போது பள்ளியில் செல்ல தோதாக இருக்குமோ அப்போது கூட்டி வருவார்கள். அந்த சமயங்களில் பறவைகள் பார்த்ததாககூட நினைவு இல்லை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லை பகுதிக்கு மேடம் அனைவரையும் அழைத்து செல்வார்கள். தத்தமது உணவுகளை பிரித்து நண்பர்கள் உண்போம். ஒரு டெலஸ்கோப் அங்கே இருக்கும் அதில் தேடி ஒன்று அல்லது இரண்டு பறவைகள் பார்ப்போம்.
கல்லூரி நாட்களில் ஒரு சமயம் நண்பர்களுடன் வேடந்தாங்கல் சென்றோம். அது கல்லூரியின் கடைசி நாள். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒன்றாக பயணித்த கடைசி பயணம். ஒரு பக்கம் ஈரவிழிகள், ஒரு பக்கம் களிப்பு. மறக்கமுடியாத பயணம். அப்போதும் பறவைகள் பார்த்ததாக நினைவு இல்லை. நண்பர்களை கவனிக்கவே நேரம் போதவில்லை. ஓவென ஒருத்தி அழ மற்றவர்கள் தேத்தியது நன்றாக நினைவில் உள்ளது. குடும்பத்துடன் இரண்டு முறை சென்றுள்ளோம்.
கேமரா கையில் வந்தவுடன் வேடந்தாங்கல் வேடந்தாங்கல் என அழைத்தது. சரியாக கிருஸ்துமஸ் 2010 அங்கே கேமரா கையுமாக சென்றோம். அப்போதும் மூன்று வண்டிகள். பிரசன்னா வண்டி, மோகன் வண்டி & எங்க வண்டி. வீட்டில் வாண்டுகள் கூட்டம் அரையாண்டு விடுமுறைக்கு வந்து இருந்தார்கள். குழலி ரொம்ப குழந்தையாக இருந்தாள்.
2011:
விழித்ததும் கடிகாரத்தில் நேரம் 3.30. குழலிக்கு பால் குடிப்பாட்டி, நாள் 25-12 என இருந்ததை பார்த்ததும் ஒரு நிமிடம் சுனாமி நினைவு வந்துபோனது. கேபி பக்கத்து அறையில் விழித்து இருந்தான். பேட்டரிகளை கேமராவில் போட்டு சரிபார்த்தேன். கிண்டியில் இருந்து பிரசன்னாவின் வண்டியில் செல்வதாக திட்டம். ஐயப்பன் தாங்கலில் வண்டியை நிறுத்திவிட்டு பஸ்ஸில் கிண்டிவரை செல்வதாக திட்டம். பார்கிங் 6 மணிக்கு தான் திறப்போம் என காவலாளி சதாய்க்க நான், குழலி, வித்யா பேருந்தில் கிளம்பினோம். கந்தபழனி போரூரில் வண்டியை பார்க் செய்துவிட்டு எங்களை பின் தொடர்ந்தான். அந்த அதிகாலையிலும் பேருந்து நிரம்பி இருந்தது. கிருஸ்துமஸிற்காக ஆலயம் செல்லும் கூட்டம்.
நாங்கள் கிண்டி செல்லவும், பிரசன்னா வரவும் சரியாக இருந்தது. குழலியின் கண்கள் மட்டும் தான் தெரிந்தது. Fully covered. இரவு சளியும் இரும்மலும் இருந்தது. விட்டுவிட்டு போக சொல்லி இருந்தார்கள் அம்மா. வேடந்தாங்கல் செல்வதின் முக்கிய நோக்கமே குழலிக்கு பறவைகளை அறிமுகம் செய்துவைப்பதே. புகைப்படம் இரண்டாம் இலக்கே. (சமாளிச்சனா?
) மூன்று வண்டிகளில் நண்பர்கள் கிளம்பினோம். வழக்கமான பெருங்களத்தூர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் வண்டிகள் சங்கமித்தன. தேநீர். (அது எப்படி பேப்பர் கப்புகளில் தேநீர் பருகுகின்றீர்களோ).
வேடந்தாங்கல் சென்றபோது மணி 7. ஆறுமணிக்கே திறந்துவிடுமாம். நாங்கள் தவறாக 7 மணி என நினைத்து மெதுவாக வந்தோம். சூரியன் தலைகாட்டியாகி இருந்தார். லேட்டாக வந்துவிட்டோமோ என்ற எண்ணத்திலே உள்ளே நுழைந்தோம். பறவைகள் பறவைகள் எங்கும் பறவைகள். ஜோடி பறவைகள். ரெக்கை விரித்தபடி பறவைகள். தனிமையில் சில பறவைகள். எதையோ அடைந்த சில பறவைகள். நீந்தியபடி சில பறவைகள். ஓய்வு எடுக்கும் பறவைகள். விமானங்கள் எப்படி பறக்கும் என காண்பிக்கும் பறவைகள். குச்சிகள் கொண்டு எதையோ கட்டும் பறவைகள். காகங்கள் போல கறுப்பு பறவைகள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை பிடித்துக்கொண்டனர் பிடிப்பதற்கு. நாதஸ் மட்டும் நீண்ட துப்பாக்கி போன்ற லென்ஸ் பொருத்தி இருந்தார். ஜகதீஷ் ஆளையே காணவில்லை. மோகன் கிளிக் கிளிக் என அடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இணையாக இணையான விஜியும் தன் பங்கிற்கு விளாசித்தள்ளினார்.
அந்த க்ளிக் க்ளிக் ஓசை ஒரு மயக்கம் தான். அதுவும் பல க்ளிக்குகள் தொடர்ந்து கேட்டது வேறு உலகிற்கு அழைத்து சென்றது. குழலி விளையாட ஆரம்பித்து இருந்தாள். 300 எம்.எம் வைத்து பல காட்சிகளை படம் பிடிக்க முடியாமல் போனது அலுப்பை ஏற்படுத்தியது. பல பறவைகள் என்னை டீஸ் செய்வதாகவே தோன்றியது. இன்னும் படங்களை திரும்ப கூட பார்க்கவில்லை கேமராவில் இருந்து. சில நன்றாக வந்திருக்கலாம், ஆனால் திருப்தி இல்லை. அடுத்த முறை கண்டிப்பாக 600 எம். எம்முடன் தான் வரவேண்டும் என மட்டும் தோன்றியது.
நான், குழலி வித்யா மூவரும் மற்றவர்களை விட்டு கொஞ்ச தூரம் நடந்தோம். குழலியின் சேட்டைகளால் வித்யா கடுப்பானதை ரசித்தபடியே வந்தேன். பசித்தது. இன்றைய பிஸ்னஸ் ஓவர். வேடந்தாங்கல் சரணாலயத்தின் கடைசியில் இருந்தோம். திரும்ப ஒவ்வொருவரையாக அழைத்து வாசலில் இருந்த கடைக்கு சென்றோம். சூடான இட்லி, பஜ்ஜி, வடை. சட்னி மட்டும் சட்னியாக இருந்திருக்கலாம். குழலி பலூன் ஒன்றினை கொண்டு எல்லோரையும் மொத்து மொத்து என அடித்துக்கொண்டிருந்தாள். ஒரு வண்டி மட்டும் அங்கேயே இருந்தது. மற்ற இரண்டு வண்டிகள் சென்னையை நோக்கி நகர்ந்தது. இனிய பயணம்.
பயணித்தவர்கள் : வித்யா, குழலி, கேபி, பிரசன்னா, பிரசன்னா துணைவி, விஜி (12ஆம் வகுப்பு தோழி), விஜியின் கணவர் மோகன், உதயன், ப்ரவீன், ஜகதீஷ், நாதஸ், பாஸ்கர், ராஜா.
வேடந்தாங்கல் எப்படி செல்வது, எது சரியான சமயம் என அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
நண்பர்கள் புகைப்படங்கள் பார்க்க.
Praveen – http://pinkurippukal.blogspot.com/ – http://www.flickr.com/photos/prawintulsi/
Nathas – http://www.flickr.com/photos/naathas/
Udhayan -www.udhayam.in
KP – http://nallaraan.wordpress.com/
Prasanna – http://iprasan.blogspot.com/
Jagadeesh – http://mycreationz.wordpress.com/
Mohan – http://www.incredibleindiaphotogallery.com/
படமில்லாமல் முடித்தால் நல்லா இருக்காது என்பதற்காக ப்ரவீனின் ஒரு புகைப்படம்
- விழியன்
பயணங்கள் – 2011
பயணங்கள் வாழ்விற்கு ருசியூட்டுகின்றன. பயணங்கள் பற்றி எழுதுவதை விட பயணிக்கவே ஆசைப்படுகிறேன். புத்துணர்ச்சியையும் தெம்பையும் இன்னும் இன்னும் சுற்றவேண்டும் என்கின்ற உத்வேகத்தையும் கொடுத்துவிடுகின்றது. லென்ஸ் வழியே பார்க்கும் போது மேலும் அழகு ஒட்டிக்கொள்கின்றது.
2011 நிச்சயம் பயணங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. இடையில் தங்கைக்கு வேறு திருமணம் வேளைகள் வேறு. சுமார் மூன்று மாதம் நகரமுடியவில்லை. குழலியின் அனுமதியால் மட்டுமே இது சாத்தியமானது. அவளின் ஒத்துழைப்பின்றி சில பயணங்கள் தோல்வியும் கண்டது. அவள் ஊர் சுற்றுவதை ரசிக்கின்றாள். ஊர் சுற்றும்போது நன்றாக இருக்கும் அவள் வீட்டில் 2 வாரம் தங்கினால் சளி/வயிற்றுப்போக்கு என ஏதேனும் உடல்கோளாறினை உண்டு செய்துகொள்கிறாள். அவளை உலக பயணியாக உருவாக்க வேண்டும். ஆனால் என் கனவுகளை அவள் மீது என்று திணிக்க மாட்டேன்.
பட்டியலிட்டு பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கின்றது. சில தூர பயணங்களும் சில லோக்கல் விசிட்டுகளும். புகைப்படம் எடுப்பதும் பயணிப்பது கைகோற்த்துக்கொள்கின்றன. கடந்த டிசம்பர் 15 முதல் இந்த டிசம்பர் 15 வரை சென்ற ஊர்கள்
பெங்களூர், வேடந்தாங்கல், பிச்சாவரம், போட்டோ நோவா, சிதம்பரம், சங்கரன்கோவில், குற்றாலம், மதுரை, மேட்டூர், தில்லி, இமயம், சபரிமலை, பிள்ளையார்பட்டி, ஏலகிரி (இரண்டு முறை), ஜலகன்பாறை, அயனம்பாக்கம் ஏரி, கொலவை ஏரி (செங்கல்பட்டு), ஊட்டி , செம்பரம்பாக்கம் ஏரி, திருவண்ணாமலை, திருத்தனி, விழுப்புரம், காரைக்கால் & சுற்றியுள்ள ஊர்கள்,
கோவில்கள் என பார்த்தால் பட்டியல் இன்னும் நீள்கின்றது
குன்றத்தூர் முருகன் கோவில், மருந்தீஸ்வரர் (திருவான்மியூர்), மயிலாப்பூர் கபாளீஸ்வரர், வேலூர் ஜலகண்டீஸ்வரர், ஸ்ரீவாங்சியம் சிவன் கோவில், கூத்தனூர் லட்சுமி, நாகை அம்மன், வேதாரண்யம் சிவன் கோவில், திருக்கடையூர் கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், திருவேற்காடு அம்மன் கோவில், ஜாகேஷ்வர் சிவன் ஆலயம், டில்லி பிரில்லா மந்திர், சிதம்பரம் நடராஜர் கோவில், சங்கரன்கோவில், திருகுற்றாலநாதர், மதுரை மீனாட்சி அம்மன், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், குன்றக்குடி முருகர், சபரிமலை ஐயப்பன், சோட்டானிக்கரை பகவதி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர்கோவில், பழமுதிற்சோலை முருகன் கோவில், திருத்தனி முருகன் கோவில், கூடலழகர் கோவில் இன்னும் சிற்சில கோவில்கள்.
முக்கியமான பயணங்கள் இரண்டு. ஜாகேஷ்வர் & சபரிமலை. ஜாகேஷ்வர் – குழலி அந்த தட்பவெப்பத்திற்கு சமாளிப்பாளா என்பது. ஆனால் அங்கே சென்றதும் ஜடகங்காவில் முதலில் குதித்தது அவள் தான். ஐஸ்கட்டிபோல இருந்த ஆறு. அடுத்தது சபரிமலை. பெருந்த உடலினை சுமந்து அத்தனை தூரம் வெறும் காலில் நடப்பது. இதற்காகவே இன்னும் குறைக்க வேண்டும்.
நிச்சயம் ஆண்டின் துவக்கத்தில் எதையும் தீர்மானிக்கவில்லை. தானாகவே அமைந்தது. அடுத்த வருடத்தில் இலக்கு இரண்டே இரண்டு இடம் தான். காசி & லட்சத்தீவுகள். மற்றவை எல்லாம் போனஸ்.
ஒவ்வொரு பயண விவாதத்தின் போதும் அப்பாவும் அம்மாவும் ‘கொஞ்சம் ரெஸ்ட்’ எடுக்கலாமே என மறைமுகமாக உணர்த்துவார்கள். அதற்காகவே சில பயணங்களை தவிர்த்தும் உள்ளோம்.
பயணங்கள் சந்தோஷத்தை தருகின்றது. பயணங்கள் சோர்வடைவும் செய்கின்றது. பயணங்கள் வாழ்கையின் முழுமைக்கு அழைத்து செல்கின்றது.
இன்னும் இன்னும் பயணிக்கவே பயணங்கள் உணர்த்துகின்றன. தூண்டுகின்றன.
——————–
ஹலோ சண்டே Alamparai Fort போகலாமா?
எந்த ஞாயிறு?
இந்த ஞாயிறு.
ஓ? நாளைக்கு சொல்லட்டுமா?
ஓகே.
——————
- விழியன்

