விழியன் பக்கம்

ஏப்ரல் 18, 2008

இணையத்தில் தமிழ்பாட நூல்கள்

கோப்பு வகை: News, தகவல் — vizhiyan @ 8:24 நான்

நண்பர்களே,

இனி இணையத்தில் தமிழ்நாட்டு பாட பிரிவின் கீழ் எல்லா வகுப்புக்களுக்குமான பாட புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றது.

அனைத்தும் பி.டி.எப் வடிவத்தில் கிடைக்கின்றது.

அதற்கான சுட்டி
http://www.textbooksonline.tn.nic.in

நிச்சயம் இது ஒரு நல்ல ஏற்பாடு.

முதலாம் வகுப்பு பாடங்களை வாசிக்க துவங்கியுள்ளேன். சுவாரஸ்யமாக உள்ளது !!!

நன்றி
விழியன்

ஏப்ரல் 9, 2008

100th Day

கோப்பு வகை: கட்டுரை — vizhiyan @ 5:21 நான்

நூறாவது நாள்: (மீள் பதிவு)

ஏப்ரல் 9 :

வருடத்தின் நூறாவது நாள். இதில் என்ன சிறப்பு இருக்கின்றது என்ற கேள்வி எழலாம்.சிறப்பு என்று எதுவும் இல்லை.ஆனால் பல மாறுதலுக்கான அழைப்பாக இருக்கலாம்.

இந்நாளில் இல்லை சிறப்பு

உங்கள் மாறுதலுக்கான அழைப்பு..

நம்மில் 90% சதவிதத்தனர் வருடத்திம் துவக்கத்தில், அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி உற்சாகமாக எழுவோம். சரி இந்த வருடம் முதல் தினமும் இவற்றை எல்லாம் செய்வோம் என்று பட்டியல் இடுவோம். எடுத்து காட்டாக, தினமும் காலை 6 மணிக்கு எழுவது (இதுவே தாமதம் தான்), உடற்பயிற்சி செய்வது (நம்மை போல கணிணி முன்னர் நாள் முழுதும் காலம் தள்ளும் மனிதர்களுக்கும், மானிட்டரில்(Monitor) மூழ்கும் மானிடர்களுக்கும் மிக அவசியம்), புத்தகம் வாசிப்பது, தினமும் டையரி எழுதுவது, இன்னும் அவரவர் அவசியத்திற்கேற்ப, தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு உறுதிமொழிகள்(Resolutions) எடுத்திருப்போம்.

இவற்றை நாம் தவறாமல் பின்பற்றுகின்றோமா என்பது தான் கேள்வி. முடிவுகள் எடுத்த உற்சாகத்தில் நாம் ஒரு வாரம், இல்லை பத்து நாள் விடாப்பிடியாக செய்து முடிப்போம். பின்னர் ??? அதே உறுதிமொழிகளை அடுத்த வருடம் எடுப்போம் சில மாறுதல்களோடு..மீண்டும் அதே நிலை..நான் சொல்வது 90% மக்களுக்கு. நீங்க அந்த 10% இருந்தால் ஆனந்தம் தான்.

சரி, இந்த வருடம் ஆரம்பித்து 100 நாள் இன்றோடு முடிகின்றது. சென்சுரி அடிச்சாச்சு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. ஒரு சின்ன ப்ரேக் எடுத்து நூறு நாளுக்கான ஒரு பத்து நிமிட ஆய்வு நடத்தலாமா?

வெண்தாளும் எழுதுகோளும் தயாரா?

1. உங்கள் உறுதிமொழிகளை எழுதுங்கள்

2. அதில் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தியுள்ளீர்?

3. சருக்கலுக்கான காரணம் என்ன?

தவறிப்போன செயல்களுக்கும் காரணம் யாரும் அல்ல.நீங்கள் தான். நீங்கள் தான் அனைத்திற்கும் பொறுப்பு. வெற்றிக்கும் சரி தோல்விக்கும் சரி. ஆனது ஆகிவிட்டது இனி இறந்த காலத்தை பற்றி பேசிப்பயனில்லை. எதிர்காலத்தை பற்றி பேசுவோம்.

*எடுத்த உறுதிமொழிகளை மறுபார்வை இடுங்கள்.

*எவற்றை கண்டிப்பாக செய்ய போகின்றீர் என்று உறுதி செய்யவும்

* சிறிது சிறிதாக முடிக்கவும். உதாரணமாக தினமும் வாக்கிங் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துள்ளீர் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாளே 2 கி.மீட்டர் நடக்கவேண்டாம். முதல் நாள் 100 அடி நடவுங்கள் போதும்.ஔஉங்கள் மனதிடம் “நான் இன்றைய வேலையை செய்துவிட்டேன்” என 5 முறை கூறவும்.அடுத்த நாள் 200 அடி..அப்படியே படிப்படி….

* எல்லா காரியத்தையும் இப்படி சின்ன சின்னதாக ஆரம்பித்தால் நலம்.உங்களுக்குள்ளேயே தன்னம்பிக்கை உயரும்.

* அதே சமயம் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பது நன்றல்ல.(ஒரே இடத்தில் முன்னேறாமல் இருப்பது சாக்கடை என சொல்லுவார்கள்). முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கவேண்டும்.

* முதலில் கடினமாக இருக்கும். பின்னர் பழகிவிடும்.

முன்பே சொன்னது போல எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் தான்.நீங்கள் மட்டும் தான்.

வருடத்தின் நூறாவது தின வாழ்த்துக்கள்.

நான் முடித்துவிட்டேன். இனி நீங்கள் துவங்கலாம்.

- விழியன்

மார்ச் 21, 2008

குழந்தை(பருவம்) - கவிதை

கோப்பு வகை: Kavithai, கவிதை — vizhiyan @ 8:52 நான்
குழந்தை(பருவம்)
உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்தற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான்  உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?
- விழியன்

மார்ச் 14, 2008

கவிதை - 42

கோப்பு வகை: Kavithai, கவிதை — vizhiyan @ 7:16 நான்

உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்
-விழியன்

மார்ச் 4, 2008

Vizhiyan Photography - 26 (Somnathpur)

கோப்பு வகை: Photography, Photos, பயணம், புகைப்படம் — vizhiyan @ 2:47 பிற்பகல்

சோம்நாத்பூர். ஹொய்சாலா கட்டிட கலையம்சம் கொண்ட கோவில்.

1.

2. அனாதையாய் நிற்கும் தூண்கள்

3. கோவில் - 1

4. தூண்கள்

5. கோவிலின் ஒரு பகுதி

6. எங்கயோ வெச்சு எப்படியோ எடுத்தது

7. இந்த படம் மிகவும் பிடித்த படம்

8. நிழல் கூட கலைநயத்துடன்

9. கோவிலின் உள்ளே.

10. கோவில் - 2

11. எங்கெங்கும் சிற்பங்கள்.

12. சன்னதியில் உள்ள சிலை - 1

13. சன்னதியில் உள்ள சிலை - 2

பெப்ரவரி 22, 2008

மூன்றாம் வருடத்தில் விழியன் பக்கம் :

கோப்பு வகை: News — vizhiyan @ 4:37 நான்

மூன்றாம் வருடத்தில் விழியன் பக்கம் :

விழியன் பக்கம் மூன்றாம் வருடத்தில் காலெடுத்து வைக்கின்றது. சென்ற ஆண்டு புகைப்படக்கலை அறிமுகமானது. ஊர் சுற்றும் பழக்கம் இதற்கு உறுதுணையாக நின்றது. இதுவரை ஊர் சுற்றியதில் அதிகமாக சுற்றியது 2007 ஆம் ஆண்டாக தான் இருக்கும். காசி,தில்லி, இமயம், மைசூர், குடகு மலை, நந்தி மலை, வயநாடு, காரைக்கால், வேதாரண்யம், நெல்லூர் என நீண்டு கொண்டே போனது பயணம். நிறைய அனுபவங்களை கொடுத்துவிட்டது பயணங்கள்..பயணங்கள் மட்டுமல்ல…

அடுத்த நொடியில் என்ன ரகசியம் இருக்கின்றது என யாருக்கு தெரியும். ஆனாலும் அது என்ன ரகசியம் என்கின்ற ஆவலில் வாழ்கை தொடர்ந்து கொண்டே செல்கின்றது

இந்த வருடம் ஏராளமான அனுபங்கள் கொண்டதாக அமையும் என நம்புகிறேன். அவற்றினை முடிந்தளவு உங்களோடு பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

உங்களின் ஊக்களிப்பும் விமர்சனமும் என்றென்றும் என்னை எழுதத்தூண்டுகின்றன. நன்றி.

பதிவுப் புள்ளிவிவரங்கள்:
மொத்தப் பார்வைகள்: 54,341
Best Day Ever: 565 — Thursday, January 31, 2008
இடுகைகள்: 271
பின்னூட்டங்கள்: 1,923
பகுப்புகள்: 42
குறிச்சொற்கள்: 36

-விழியன்

பெப்ரவரி 21, 2008

வார்த்தை விழும் முன்..

கோப்பு வகை: Translation, மொழிபெயர்பு — vizhiyan @ 2:23 பிற்பகல்

இரயில் கிளம்பியது. கூட்டம் வழிந்தது. அனைத்து தரப்பட்ட வயதினரும் இருந்தனர். கல்லூரி மாணவர்கள். இளம் ஜோடிகள். வயதானவர்கள். குழந்தைகள். அங்கிருந்த அனைத்து கண்களும் இரண்டு நபர்களையே மாறி மாறி மொய்த்துக்கொண்டிருந்தது. வயதான முதியவரும் அவரின் மகனும். சன்னலுக்கு வெளியே வேடிக்கைபார்த்தபடி இருந்தான் அந்த இளைஞன்.

இரயில் சற்றே வேகம் கொண்டது. இரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த இளைஞனின் உற்சாகமும் அதிகரித்தது. வெளியே கடக்கும் காட்சிகளை கண்டு ஆனந்தம் கொண்டவனாய் இருந்தான்.

“அப்பா, அங்க மரங்கள பாருங்க.எவ்வளவு வேகமா பின்னாடி போகுது…”

அவனின் நடவடிக்கைகள் முப்பது வயது இளைஞனுக்கு உரியதாக இல்லை. வேடிக்கை பார்ப்பதை வேடிக்கையாய் பார்த்தனர். முனுமுனுப்புகள் அங்கும் இங்கும். புதிதாய் திருமணமான சரவணனும் அவன் மனைவியும் அந்த இளைஞனுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். தன் மனைவியிடம் அவன் பைத்தியமாக இருப்பான் என சைகை செய்தான். இருவரும் புன்னகையினை பரிமாறிக்கொண்டனர்.

திடீரென மண் மீது நேசம் கொண்ட மழை, வானிலிருந்து பூமியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது, சன்னல் திறந்து வைத்திருந்த எல்லா இடங்களிலும் தூறல் உட்புகுந்தது. அந்த இளைஞன் மேலும் உற்சாகம் கொண்டான். ” அப்பா..மழை எவ்வளவு அழகா இருக்கு பாருங்கப்பா..அய்யோ…”

சன்னல் திறந்தே இருந்ததால், சரவணன் மனைவி ஆடை நனைந்துவிட்டது. எரிச்சலுற்றாள். புது மனைவிக்கு எரிச்சல் என்றால் கணவன் என்ன செய்வான்?

“யோவ் மழை வரது தெரியல…இவ்வளவு வயசாச்சு, உன் பையனுக்கு புத்தி சரியில்லைன்னா எங்காச்சும் பைத்தியக்கார ஆஸ்பத்திரில விட வேண்டியது தான. ஏன் இப்படி எல்லார் உயிரையும் வாங்குற…”

இரயிலின் தடக் தடக் சத்தமும், மழையின் தாளம் மட்டும் கேட்டது. உள் இருந்தவர்கள் அனைவரின் கவனமும் அந்த பெரியவர் மீதே.

பெரியவர் தயங்கியபடி தாழ்வான குரலில்…”நாங்க ஆஸ்பத்திரியில இருந்து தான் வரோம் சார். காலையில தான் டிஸ்சார்ஜ் பண்ணாங்க. சின்ன வயசுல உடம்புக்கு முடியாம போனப்ப பார்வையும் போயிடுச்சு, போன வாரம் தான் ஒரு புண்ணியவான் தயவால பார்வை கிடச்சுது என் புள்ளைக்கு. இந்த மழையும் உலகமும் அவனுக்கு புதுசா இருக்கு…”

அனைவரிடமும் கை கூப்பி “உங்களுக்கு ஏதாச்சும் சிரமம் ஏற்படுத்தி இருந்தா மன்னிச்சிக்கோங்க…”

இளைஞன் தூறலுடன் நட்பு கொண்டு உறவாடிக்கொண்டிருந்தான்…

உண்மை உணரும் வரை நாம் பார்ப்பது மட்டுமே சரி என நினைத்திருப்போம். எது உண்மை என புரிந்த உடன் நம் எண்ணமே நம்மை சுட்டுவிடும். ஆத்திரம் கொண்ட வார்த்தைகள் கொட்டுவதற்கு முன்னால் சற்றே சந்திப்போம்.

(தமிழாக்கம் மட்டும்)
-விழியன்

பெப்ரவரி 20, 2008

இரவின் இருட்டில் - சிறுகதை

கோப்பு வகை: story, கதை — vizhiyan @ 4:25 நான்

இரவின் இருட்டில் - சிறுகதை

மூன்று வருடம் இருக்கும். அந்த இரவின் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது நினைத்தாலும் கண்முன்னே விரிகின்றது. இரவு ஒரு மணிக்கு எனது இரயில். விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த நான், அன்று இரவு அம்மா அப்பாவுடன் சண்டை போட்டிருந்தேன். மாதம் ஒரு முறை வீடு வரும் போதும் இப்படி தான் சாப்பிட வெறும் சாம்பார், ரசம் மட்டும் வைப்பீர்களா? இன்றாவது நல்ல சாப்பாடு செய்யக்கூடாதா என்று கத்தியிருந்தேன். என் சத்தத்தில் தம்பி பயந்திருந்தான். அம்மா, அப்பா யாரும் பேசவில்லை அந்த கூச்சலுக்கு பின்னர். அப்பா ஏற்கனவே நொறுங்கிபோயிருந்தார் ஏகப்பட்ட பிரச்சனைகளில். அம்மாவை அத்தனை சொல்லியும் நான் கிளம்பும் போது வந்து வழியனுப்பி வைத்துவிட்டே சென்றார்கள்.

“கிளம்பு, என்ன ஸ்டேஷன்ல விட்டுட்டுவா” என்றதும் தம்பி மறுப்பேதும் சொல்லாமல் லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறி அப்பாவின் பழைய டி.வீ.ஸ் 50யினை வெளியில் தள்ளினான்.

“வரேன்மா..”

“எப்ப திரும்ப வர. போனது போன் பண்ணு சங்கர்..”

“ம்ம்ம்…”

தம்பி என்னை ஸ்டேஷனில் விடும்வரை ஏதும் பேச்சில்லை. இறங்கிய போது ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனுக்கான தேவைகள் நிறைய இருக்கும். இருந்தும் “ட்ரெயின் வர வரைக்கும் இருக்கவா அண்ணா?” என்றான்.

“இல்லடா நான் பாத்துகறேன்.பனி நெறைய இருக்கு. நீ வீட்டுக்கு போ. கைல காசிருக்கா? “

“வேண்டண்ணா…”

சட்டை பையில் இரண்டு காந்தி சிரிக்கும் சின்ன நோட்டுகளை வைத்தேன்.அவன் போன திசையில் சிறிது நேரம் பார்த்துவிட்டு ரயில் எத்தனை மணிக்கு வருகின்றது என பார்க்க சென்றேன். அடடா தம்பியை இருக்க சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு மணி நேர கால தாமதம். புத்தக வாசிப்பு அன்றைய காலகட்டத்தில் எனக்கு புதிய விஷயம். புத்தகத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆரம்பகாலம்.இரண்டு புத்தகங்கள் பையில் இருந்தது. ஒரு மணி நேரத்தை கடத்துவதா கடினம்.

இரவில் ரயில் நிலையம் நான் இன்றும் ரசிக்கும் விஷயங்களில் முக்கிய இடம் வகிக்கும். எப்போதும் நிற்கும் கூட்ஸ் வண்டிகள்.அடுத்த ரயிலுக்காக காத்திருக்கும் கேண்டீன் பையன்கள், பச்சை கொடியினை கையில் பிடித்தபடி வெள்ளை ஆடையில் ஓருவர். எல்லையில் போரிடும் மிலிட்டரி மனிதர் ஒருவர் நிலைய அதிகாரியிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். நிறைய சாமான்கள் இருப்பதற்காக அதிகாரி அதிக பணம் கேட்டார் என்பதற்காக சண்டை இருக்கலாம் என்பது என் ஊகம். மெல்ல நடந்து சூடான காபியினை வாங்கி நிலையத்தின் கடைசிவரை நடக்கலானேன்.

நிலையத்தின் கடைசி விளக்கினை அடைந்த போது, எதிர்புறம் இருந்த ரயில்வே காவல் நிலையத்தில் ஏதோ பரபரப்பு. இரண்டு மூன்று தொப்பை ஆசாமிகள் வெளியே வந்தனர். அதே நேரத்தில் எதிர்புறம் ரயில் ஒன்று வந்தது. நின்றது. கிளம்பியது. அந்த தொப்பை ஆசாமிகள், ஒல்லியான தோகத்தில் இருக்கும் ஒருவனை பிடித்திருந்தனர். “எங்கடா எங்ககிட்டயே உன் கைவரிசைய காட்றியா” என்று லத்தியில் அடிவிழுந்தது. “சார். அடிக்கற வேலையெல்லாம் வேணாம்..” ஏதோ கல்லூரி தோழனிடம் பேசுவது போல சாதாரணமாக பேசினார் அவர். எப்படி இவர்களுக்கு இந்த ரயிலில் இந்த பெட்டியின் இப்படி ஒரு திருடன் வருகிறான் என தெரிந்தது? இவர்களுக்கு எல்லாம் தெரியுமோ? நான் யோசிப்பது கூட எங்கே கண்டுபிடித்திடுவார்களோ என்று நான் நழுவத்துவங்கினேன்.

அம்மாவின் நினைவு மீண்டும் வந்தது. அப்படி பேசி இருக்க கூடாதோ. அட நாம மாசத்திற்கு ஒருமுறை வருகிறோம், வெளியூருல இருக்கான் பையன் எப்படி சாப்பிடுறானோ, எங்க சாப்பிடுறானோ வீட்டுலயாவது நல்ல சாப்பாடு போடலாம்னு இருக்கா? ஆனாலும் அம்மா பாவம் தான். என்ன முப்பது நாள்ல ரெண்டு நாள் தான வரேன்.அது கூட செய்ய முடியாதா? சின்ன வயசில் இருந்தே எனக்கு புளிசாதம் என்றால் உயிர். அதும் அம்மா செய்தால் அருமையோ அருமை. வேலைக்கு சென்ற ஆரம்பத்தில் தூக்கு நிறைய புளி தொக்கு செய்து ஊருக்கு எடுத்து செல்வேன். அப்போது அறையில் சமைத்துக்கொண்டு இருந்தோம். வேலை அதிகமானதால் விட்டுவிட்டோம். அப்பளம், வத்தல் அது கூட தொட்டுக்க இல்லை இன்று. நான் சொல்லி தான் இதெல்லாம் தெரியனுமா? அம்மாவுக்கே இதெல்லாம் தெரியக்கூடாது? அம்மா மாலை எங்கோ வெளி சென்று வந்ததால் சோர்வாக இருந்தார்கள். அதனால செய்ய முடியாம போயிருக்கலாம். இரண்டு பக்கமும் மனம் மாறி மாறி பேசிக்கொண்டே போனது. கேண்டீன் எதிரே அமர இடம் இருந்தது.

திண்ணை போல வட்டமாக இருந்த அந்த இடத்தில் அமர்ந்தேன். மின்விசிறியின் சத்தம் மட்டும் சில சமயம் அதிகமாக கேட்டது. பையில் இருந்து புத்தகத்தினை எடுத்து படிக்க துவங்கினேன். தூரத்தில் நாயின் குரைச்சல். நாளைய வேலையின் எண்ணங்கள். ரயில் ஒரு மணி தாமதம் என்றால் சில வேலைகள் தடைபடும். அச்சோ, சவரம் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன், ஏற்கனவே நிறைய தாடி வளர்ந்துவிட்டு இருந்தது. மேலாளர் கடிந்து கொள்வார். வண்டி ஸ்டேஷனில் இருக்கு, பத்திரமாக இருக்குமா? போன முறை கொஞ்சம் பெட்ரோல் காணவில்லை.இந்த முறை கொஞ்சமாக இருந்த போது தான் விட்டுவைத்து வந்திருக்கிறேன். எப்படியும் காலை பெட்ரோல் பங்க் திறந்திருக்கும். புத்தகங்களில் பக்கங்கள் நகரவில்லை.

இன்னும் ரயில் வர அரைமணி நேரம் இருந்தது. கண் லேசாக அயர துவங்கியது. அப்போது கருத்த உருவம் என்னை நோக்கி வந்தது. என் தம்பி வயது இருக்கலாம். அல்லது ஒன்று இரண்டு வயது கூட குறைச்சல் இருக்கலாம். தம்பி கண்ணாடி அணிந்திருப்பான், இவன் கண்ணாடி அணியவில்லை. காலில் செருப்பு ஏதும் இல்லை. அடுத்த முறை தம்பிக்கு நல்ல செருப்பு வாங்கி வர வேண்டும், அல்லது  கடைக்கு அவனை கூட்டிக்கொண்டு வாங்கி தர வேண்டும். பாவம் ஹவாய் செருப்பு தான் பயன்படுத்துகிறேன். இவனுக்கு அது கூட வாங்கி தர ஆளில்லை போலும். நீட்டு முகம். வாரப்படாத தலை முடி. கருப்பு என்றால் அட்டை கருப்பெல்லாம் கிடையாது.

அவன் என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னையே பார்த்துக்கொண்டு வந்தான். அந்த பகுதியில் அப்போது யாரும் இல்லை. அந்த மிலிட்டரி ஆளும் எப்போழுதோ சென்றுவிட்டார். அதிகாரி காணவில்லை. காவல் நிலையத்தில் அந்த ஆளை கவனிக்க தொப்பையர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். கேண்டீன் ஆளும் அடுத்த ரயில் வரும் வரை உறங்க சென்றிருக்க வேண்டும். இவன் பார்வையே சரியில்லையே. இவன் திருடனாக இருக்க கூடும், என் கண்களை உறங்குவது போல மூடிக்கொள்கிறேன். நமக்கான தைரியம் எல்லாம் நம்மைவிட அடங்கி இருப்பவர்கள் இடத்தில் மட்டும் தானே இருக்கும்.

என் மிக அருகில் வந்துவிட்டான். நான் உறங்குகிறேனா என என்னை எட்டிப்பார்க்கிறான். கேண்டீனை நோக்கி திரும்புகிறான். என் மீது ஒரு பார்வை இருந்து கொண்டே இருந்தது. அங்கே குளிர்பானங்களை அடுக்கி வைத்திருந்த பெட்டிகள் மீது கைகள் போனது. காலி பாட்டில்கள் தான் இருந்தன. கல்லாப்பெட்டியில் கைவைக்க போகிறான், நான் உடனே அவனை பிடித்துவிடுவேன். கூச்சலிடுவேன். போலிஸ் காரர்கள் வந்துவிடுவார்கள், அல்லது கேண்டீன்கார்கள் வந்துவிடுவார்கள், இல்லை யாரேனும் வந்துவிடுவார்கள். இல்லை விட்டுவிடலாமா? என்னை அவன் அடித்துவிட்டால், போலிஸ் கேசு என்று ரயிலை விட்டுவிட்டால்…..ஒரு நாள் வேலை தடைபட்டுவிடும். மேலாளரிடம் திட்டு விழும். மீண்டும் வீட்டிற்கு இரவே சென்றுவிட வேண்டும். வேண்டாம் விட்டுவிடலாம்.

காலி பாட்டில் ஒன்றினை கையில் எடுத்தான். என்னை பார்த்தான். என் மண்டையை உடைக்கவா? அய்யோ !!.. சற்றே அவனை உன்னிப்பாக கவனிக்கிறேன்.அவன் பார்வையில் கொடூரம் ஏதும் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பாட்டிலை நேராக அவன் வாயருகில் எடுத்து சென்றான். யாரோ ஒரு புண்ணியவான் /புண்ணியவதி பாட்டிலில் கடைசி சொட்டு விட்டுவைத்திருக்கிறார்கள். அந்த ஒரு சொட்டு பானம், அவன் தொண்டை வழியே பயணித்தது மிகத்துள்ளியமாய் தெரிந்தது. எத்தனை நாளாச்சோ அவ்வழியே ஒரு குவளை சோறு சென்று . பசி எத்தனை கொடூரமானது. பாட்டிலை ஒரு உலுக்கு உலுக்கினான். அடுத்த பாட்டிலை எடுத்தான், அதற்கு மேல் ஏதும் தெரியவில்லை. கண் முன்னே குளம் தோன்றியிருந்தது.

நான் நினைத்திருந்தால் அவனுக்கு உதவி செய்திருக்கலாம். காசு ஏதேனும் கொடுத்திருக்கலாம், அதெல்லாம் பெரிய உதவியா தெரியவில்லை. அவன் வாங்கி இருப்பானா என்பது அடுத்த விஷயம். ஆனாலும் அந்த நொடியில் எதுவும் செய்ய முடியாமல் இருந்துவிட்டேன். அவன் சென்ற திசையினை பார்க்க கூட திராணி இல்லை. என்னையும் அவனையும் ஒரே நிமிடம் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன். இப்பொழுதெல்லாம் பசிக்கும் பொழுதெல்லாம் ஒரு சொட்டு பானம் அவன் தொண்டைக்குள் பயணிக்கும் காட்சி கண்ணில் வந்துபோகும்.

- விழியன்

பெப்ரவரி 14, 2008

படமும் கவிதையும் - 1

கோப்பு வகை: Kavithai, Photography, கவிதை, புகைப்படம் — vizhiyan @ 9:30 நான்

பழுப்பேறிய அரிசி
மகளுக்கான நோட்டுப் புத்தகம்
அடிவாங்கி வரும் மயக்கம்
நிம்மதியான உறக்கம்
இன்றைய வியாபாரத்தில் வீடுவரும்
இவற்றில் ஒன்றேனும்
-விழியன்

பெப்ரவரி 11, 2008

கேரளா - கடவுளின் செல்ல பிரதேசம் - பயணம்

கோப்பு வகை: Travel, பயணம் — vizhiyan @ 9:08 நான்

கேரளா - கடவுளின் செல்ல பிரதேசம்

“தோழா, பெங்களூர் சென்றுவிடலாம்.சனி ஞாயிறு அங்கே கழிக்கலாம். கேரளா செல்ல வேண்டுமா?” என்றான் ஹரி (சக ஊழியன்) .”இல்லை நிச்சயம் நாம் செல்கிறோம்” என்பது எனது திடமான பதில். இதுவே ரம்மியமான இரண்டு நாட்களுக்கு வழிவகுத்தது.

நானும் ஹரியும் மூவட்டுப்புழா செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறோம். சேலத்தில் இருந்து மூவட்டுப்புழா செல்ல ஏழு மணி நேரமாகும். சேலத்திற்கு மற்றொரு நண்பர் சரவணன் திருமணத்திற்கு வந்திருந்தோம்.(21-01-2005). பயணம் சுகமாய் இருந்தது. மனதிற்கு பிடித்தவர்களுடன் பயணிப்பது தனிசுகம் தான். எங்கள் கல்லூரி கதைகளை பேசினோம். அவன் REC கல்லூரியின் முன்னாள் மாணவன். கல்லூரி நிகழ்வுகள், முதல் காதல், வெவ்வேறு விதமான நண்பர்கள், அனுபவங்கள் எல்லாவற்றையும் அமைதியாக பகிர்ந்துகொண்டோம்.நிலவை பார்த்தபடி எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கினோம்.இறங்கிய பின்னரே தெரிந்தது அது தவறான பேருந்து நிலையம் என்று.மது சொன்ன பேருந்து நிலையத்திற்கு நடக்க துவங்கினோம். மது என்கின்ற மதுசூதனன் எங்களுடன் பணி புரிந்தான். வானம் கருமையாக இருந்தது. கோடானுகோடி நட்சத்திரங்கள் தெரிந்தது. இது போன்ற சந்தர்ப்பங்கள் மிக குறைவே.பெங்களூரில் இப்படி ஒரு வானத்தை காணக்கிடைக்காது. மின் விளக்குகளின் ஆதிக்கத்தால் கருமையான வானம் காணக் கிடைப்பது அரிது. வருங்கால சந்ததியினருக்கு இரவு இருட்டு என்பதை நாம் சொல்ல முடியுமா தெரியவில்லை.

மது அலைபேசியில் அழைத்து எங்களிடம் வந்துவிட்டான். புதிய மாருதி காரினை வாங்கி இருந்தான். கருப்பு நிற வாகனம். பின் இருக்கையில் இந்த சின்ன (!!!) உருவம் உட்கார சிரமப்பட்டு முன்னால் சென்றது. இது மது, ஹரி போன்ற சின்ன ஜீவன்களுக்கான வாகனம். வண்டியை ஓட்டியது ராஜேஷ். மதுவின் ஒன்றுவிட்ட அண்ணன். சந்தித்தவர்களின் மிகவும் சுவாரஸ்யமானவர். மூவட்டுப்புழாவில் இருந்து ஊரமனாவிற்கு சென்ற பயணம் விவரிக்க முடியாத அழகுடன் இருந்தது. சூரியன் வரலாமா வேண்டாமா என்ற எண்ணத்துடன் மெதுவாய் மேல் எழுந்தது. இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்ற காட்சி.மரங்களும்,ஆங்கங்கு தண்ணீர் நிலைகளும், சீரான நிலமில்லாமல் அழகாய் இருந்தது. தலைசிறந்த கேமராவான கண்களில் படம்பிடித்து என்னால் மட்டுமே அடிக்கடி போட்டுப்பார்க்கும் காட்சிகள் இதயத்தில் இங்கே பதிவானது.கண்களுக்கான பரிசு இவை. சூரிய ஒளி மெல்ல படந்தது. கவித்துவமான காட்சியாக மாறியது.மூவட்டுபுழா என்பது ஒரு நதி. மதுவின் வீட்டினை அடைந்தோம்.இனி மதுவினை பாபு என்றே அழைக்கிறேன். அப்படி தான் அவன் வீட்டில் அவனை அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கும் போது நான் அப்படி தானே அவனை அழைக்க வேண்டும்.

அவன் வீடு சின்னதாக அழகாக இருந்தது. ஒரே காம்பெளண்டில் ராஜேஷ் சேட்டாவும் குடி இருந்தார். ராஜேஷின் வீட்டு எதிரே சின்ன அறையினை நாங்கள் தங்க கொடுத்தனர். எங்கும் மண்வாசம். சுற்றிலும் மரங்கள்.வீட்டின் ஓர் மூளை ‘சிக்கு’ என்கின்ற நாய்குட்டி இருந்தது. அதற்கென்று சின்ன வீடு. புதியவர்கள் எங்களாப்பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது.சிக்கு பயங்கரமாக காட்சியளித்தது. நாங்கள் சென்ற தினம் பாபு திருச்சூரில் ஒரு பெண் பார்க்க செல்ல இருந்தான். என்னையும் ஹரியையும் அறையில் ஓய்வெடுக்க சொல்லி வெளியே கிளம்பிவிட்டான். நாங்கள் உள்ளுக்குள் தங்காமல் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய கிளம்பினோம். நம் ஊர்களில் இருப்பது போல தொடர்ந்து வீடுகள் இல்லை. தெருக்கள் என்று கூட இல்லை. இங்கொரு வீடு அங்கொரு வீடாக ஆங்காங்கே இருந்தது. அவன் வீட்டு எதிரில் நெற்பயிர்கள் இருந்தது. அதன் பின்னால் தென்னை மரங்களும், ரப்பர் மரங்களும் இருந்தது. சுமார் நூறு மீட்டர் தொலைவில் பாபு படித்த சின்ன பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு தான் அவன் ஏழாம் வகுப்பு வரை படித்தானாம்.வீட்டின் அருகிலேயே பள்ளி இருப்பது எத்தனை ஆனந்தமான விஷயம்.

பள்ளி பழமையாக இருந்தது. அமைதி. எந்த சத்தமும் இல்லை. வெகு அரிதாக ஓரிரு வண்டி சத்தம் கேட்கும். பள்ளி சமநிலையில் இல்லை. விளையாட்டு திடல் பள்ளியை விட தாழ்வான இடத்தில் இருந்தது. நீண்ட மரங்கள். அங்கு விளையாடுவது எத்தனை ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கு.ம்ம்..அங்கே குயில்கள் பாபுவின் இளமைக்கால வீர தீர செயல்களை ரம்மியமாக பாடிக்கொண்டிருந்தது. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பள்ளி அனுபவங்கள் வித்தியாசமாக அற்புதமாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த பள்ளியின் சூழ்நிலையே மிக ஈர்த்துவிட்டது.

வீட்டிற்கு சென்று குளித்துமுடித்து, துணிகளை துவைத்தோம். பத்து நிமிடம் உறங்கினோம். பாபுவின் அம்மா சாப்பிட அழைத்தார்கள். காலையில் அப்பமும் முட்டைக்கறியும். அக்மார்க் மலையாள உணவு.பாபுவின் 85 வயது பாட்டி எங்களிடம் பேசினார்கள். எங்களுக்கு மலையாளம் புரியாது, அவர்களுக்கு தமிழ் புரியாது. ஆனாலும் பேசினோம். அன்பிற்கு உண்டோ மொழி என்கின்ற தடை?அவன் அப்பா எங்களிடம் ஹிந்தியில் பேசினார். அவர் கிரேன் டிரைவராக பணி புரிந்தார். அவர் பெருமிதத்தோடு பேசினார். மூன்று மகன்கள். மூத்த மகன் பிஜு தில்லியில், அமெரிக்கன் எம்பசியில் ‘Program Manager’. அடுத்த மகன் பினு, எர்ணாகுளத்தில் கட்டிட துறையில் பணி புரிகின்றார். பினு தன் பெற்றோருடன் தங்கி இருந்தார். மூன்றாவது மகன் பாபு என்கின்ற மது என்கின்றது மதுசூதனன். மெல்ல மெல்ல உயர்ந்து, தற்போது நல்ல நிலையில் இருக்கின்றான். பெருமிதம் இருக்காதா என்ன. முதல் இரண்டு மகன்கள் திருமணமும் காதல் திருமணம். பழைய புகைப்படங்களை காண்பித்தார்கள். இரண்டாது அண்ணனுக்கு சின்ன குழந்தை பிறந்து இருந்தது.ஆதித்யா. நாங்கள் பேசினோம். அவன் பேசவில்லை.சிரித்தான்.

பைக்கில் பயணம்:

நானும் ஹரியும் ராஜேஷ் சேட்டாவின் பைக்கை எடுத்துக்கொண்டு கிராமங்களுக்கு உள்ளே சென்றோம். இந்த சின்ன பயணத்தத இருவரும் மிகவும் ரசித்தோம். கிராமத்து மக்கள் எங்களை வேற்றுகிரகவாசிகளைப்போல பார்த்தார்கள். நான் பின்னால் அமர்ந்து கொண்டு சிறுவர்களுக்கும் மலையாள பெண்குட்டிகளுக்கு கையசைத்தேன். அது சொல்ல முடியாத உற்சாகத்தை அளித்தது. முதல் முறை யாரும் திரும்ப கையசக்கவில்லை, மீண்டும் நான் கையசைத்த போதே அங்கிருந்து பதில் கிடைக்கும். கேரளத்து வீடுகளை பற்றி சொல்ல தேவையில்லை, ஒவ்வொன்றும் கலை நுனுக்கத்துடன் இருந்தது. அது கிராமமோ, நகரமோ எதுவாக இருந்தாலும். எல்லா வீடுகளின் முன்னாலும் மாருதி காரோ அல்லது ஜீப் ஒன்றோ நின்று கொண்டிருந்தது. கேள்விபட்டவரையில் ஒரு வீட்டில் ஒருவரேனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் நூறு மாணவர்களில் 90 மாணவர்கள் நர்ஸிங் பாடப்பிரிவில் சேர்கின்றார்கள். இந்த சேவைக்காக வெளிநாடுகளில் ஏராளமான வாய்ப்பு இருக்கின்றதாம்.

சென்ற பாதையிலேயே மீண்டும் திரும்ப வர சில குறிப்புகளை நினைவில் வைத்துக்கொண்டோம். வழியில் எங்கும் மலையாள வாசம் கொண்ட மனிதர்கள் தான். பின்ன கேரளாவில யார் இருப்பாங்க. ஹரி ஒரே நொடியில் ஒரு பெண்ணிடம் மனதை பரிகொடுத்தான். அவள் வீட்டின் மாடிக்கு வந்து தலையினை துவட்டிக்கொண்டிருந்தாள். அழகிற்கு உதாரணம் அவள் என்று சொல்லலாம். என் துரதஷ்டம் நான் அப்போது வேறு திசையில் பார்த்துக்கொண்டு வந்தேன். அவன் அவளை பற்றி விவரித்தவுடன் நானும்…அட போங்க.. வீட்டை அடைந்தோம். மணி 10.30. கொச்சினுக்கு செல்வதென முடிவு. அங்கே பாபு எங்களுடன் சேர்ந்துகொள்வான்.

தொலைந்துவிடுமோம் :

பாபுவின் தந்தை நாங்கள் எங்கே பேருந்தில் தொலைந்துவிடுவோமோ என கவலைக்கொண்டார். எப்படி தொலைவோம் என்று எங்களுக்கு புரியவில்லை. ஆனால் நாங்கள் தொலைந்துவிடுவோம் என மிகவும் வருத்தப்பட்டார். பேருந்து நிலையம் வரை எங்களோடு வந்தார். பேருந்துநிலையம் ஐம்பதடி தூரத்தில் இருந்தது. சாலையோரத்தில் ராமர் கோவில் இருந்தது. சாலைகள் நன்றாக இருந்தது. நம்மூர்களில் நகரங்களில் கூட இப்படி சாலைகளை காண்பது அரிது. அதுவும் கேரளாவில் மழை மிக அதிகம். சாலையின் இரு புறமும் எங்கும் செடிகளும் மரங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு செடியின் பெயரையும் நான் கேட்டுக்கொண்டே வந்தேன். அவரும் சலிக்காமல் சொல்லிக்கொண்டே வந்தார். பாதி பெயர்கள் தமிழ் போல இருந்தாலும் அவை தமிழ் பெயர்கள் இல்லை. ஹரி குறுக்கிட்டு அதன் ஆங்கில பெயரினை சொல்லுவான். நிஜத்தை சொல்லுவதென்றால் முக்கால்வாசி செடிகொடி பெயர்கள் எனக்கு தெரியவில்லை. எங்களையும் எங்கள் சேட்டைகளையும் பார்த்து ஊர் மக்கள் பாபு அப்பாவிடன் யார் இவர்கள் என விளித்தார்கள். “பாபு கூட்டாளியான..” என்பது போல ஏதோ சொன்னார். நாங்கள் ஹி என சிரித்தோம். சின்ன பேருந்து நிலையம். எதிரே ரப்பர் கடை இருந்தது. எப்படி தயாரிக்கின்றார்கள் என கேட்க அங்கிருந்த வயதான பெண்மனி படபடவென மலையாளத்தில் விவரித்தார். பேருந்து வந்தது. அது பேருந்து அல்ல, சிற்றுந்து (Mini Bus).

அந்த பேருந்தின் நினைவுகள் இன்னும் இருக்கின்றது. அதனை போலவே பாபுவின் திருமணத்திற்கு சென்ற போது கேரளாவில் பேருந்தில் பயணம் செய்தது மறக்க முடியாத பயணம். அதிகாலை ஆல்வாயில் இரயிலறங்கி நெடுந்தூரம் கிராமம் கிராமமாக சென்ற அந்த பயணம் மறக்கவே முடியாது. வண்டியை நிறுத்த மணியோசை கேட்கும். அது ஏதோ செய்துவிடும்.பாபுவின் தந்தை கொளச்சேரி வரையில் எங்களுடன் வந்தார். அவரும் எர்ணாகுளம் வரை வருகிறேன் நீங்கள் தொலைந்து போய்விடுவீர்கள் என்றார். அவரை சமாதானம் செய்து எப்படியோ எர்ணாகுளம் பேருந்தில் நாங்கள் இருவரும் கிளம்பினோம்.

கொச்சினில்…

பாபு எங்களை மாநில பேருந்து நிலையத்தில் நிற்க சொல்லியிருந்தான். கேரளாவை பற்றி பள்ளியில் படித்தவை, கேரளாவில் ஒரு கி.மீ சதுர பரப்பளவில் அதிக மக்கள் வாழ்கின்றார்கள் என்று. ஆனால் கிராமத்தில் அப்படி நிறைய மக்கள் இருப்பததாக தெரியவில்லை. பேருந்து நிலையம் கூட அவ்வளவு பெரியதாக இல்லை. அதிகபட்சமாக முப்பது முதல் நாற்பது பேருந்துகள் மட்டுமே நிற்கும். நானும் ஹரியும் பேருந்து நிலையத்தை அடைந்தோம். சுற்றி வந்தோம். இணைய இணைப்பை தேடி அலைந்தோம். வாழ்வில் முக்கியமான ஒரு மடலை எதிர்ப்பார்த்து இருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பாபு எங்களை அலைபேசியில் அழைத்து கல்லூர் விளையாட்டு மைதானத்திற்கு வரச்சொன்னான். 35 ரூபாய் கேட்பான் ஆட்டோவில் என்றான். சில ஆட்டோக்களை விசாரித்து 20 ரூபாய்க்கு உள்ளேறினோம். ஊரில் இருந்த சந்து பொந்துகள் எல்லாம் தெரிந்தது ஆட்டோகாரர்களுக்கு மட்டும் தான். ஒரு இடத்தில் நிறுத்தி இது தான் நீங்க சொன்ன இடம் என்றான். நான் சொன்னது விளையாட்டு மைதானம். இன்னும் பத்து ரூபாய் கேட்டு வண்டியை கிளப்பினான். உர் என்றானான் ஹரி. அந்த வருடம் மார்ச்சில் இந்தியா பாகிஸ்தான் போட்டி இங்கு தான் நடைபெறுவதாக இருந்தது. எர்ணாகுளம் கூடான நகரம். கூட்டை தாங்கும் தோள்கள் பெங்களூரில் இருந்ததால் வலுவிழந்து போயிருந்தது.

மதிய உணவினை முடிந்தோம். பின்னர் கொச்சின் மரைன் டிரவ்விற்கு சென்றோம். படகுகள் தயாராக இருந்தது. ஏற்கனவே எனது கல்லூரி காலத்தில் இங்கே ஆனந்தமாக கழித்திருந்ததால் எங்கே அந்த ஆனந்ததிற்கும் இன்றை அனுபவத்திற்கும் சண்டை வந்துவிடுமோவென போகாமல் இருந்துவிட்டேன். யாரும் போகவில்லை. கடலில் கரையில் இருக்கும் சுவரில் அமர்ந்தோம். கடலை பார்த்து அமர்வது எப்போதும் சுவாரஸ்யம் தான். சுனாமி பற்றி பேச்சு எழுந்தது. மனம் கதிகொண்டது. கொச்சின் அதிகம் சேதாரம் அடையவில்லை. இருந்தும் 25 பேரை பலிகொண்டது. கடலை பார்த்த போது தூரத்தில் ஒரு பாலம் தெரிந்தது. அந்த பாலத்திற்கு போகலாம் என்று கிளம்பி போகதி அரண்மனைக்கு சென்றோம். அங்கே மோட்டர் படகில் சவாரி செய்தோம். வண்டி வேகமாக செல்ல முடியவில்லை :(. ஊரணமனாவிற்கு திரும்பினோம். ராஜேஷிற்கு வீட்டில் ஏதோ முக்கிய வேலை இருந்தது.

மாலை அந்த சின்ன அறையில் ஐவரும் அமர்ந்தோம். நான், ஹரி, பாபு, பினு மற்றும் ராஜேஷ். சின்ன அரட்டை. இரவின் உணவிற்கு பிறகு பாபு பள்ளி இருக்கும் திசையில் நடந்தோம். வெளிச்சம் இல்லாத வீதிகள் அழகை கூட்டியது. ரசிக்கக்த்தக்க இரவு. வானம் அசத்திக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் கண்ணடித்துக்கொண்டிருந்தது.

மறுநாள்:-

என் தோழி லில்லியனின் நிச்சயதார்த்தற்கு அன்று செல்ல வேண்டும். காலை 7.30 மணிக்கு எழுந்தோம். முந்தைய இரண்டு இரவுகள் சரியான தூக்கம் இல்லை. கிளம்பி, உணவு முடித்தோம். எங்களுக்கு ஹீரோ ஹோண்டா வண்டியினை கொடுத்தனர், கோதமங்கலத்திற்கு செல்வதற்கு.ஊரமணாவில் இருந்து கோதமங்கலம் சுமார் 25 கி.மீ. எப்படி செல்ல வேண்டும் என்பதனை ராஜேஷ் சேட்டா கூறினார். மது வேறு ஒரு பெண்ணை பார்க்க சென்றான்( இவளை திருமணம் புரிந்து கொண்டு பெங்களூரில் ஆனந்தமாக வாழ்கின்றான்). நாங்கள் சென்றது தேசிய நெடுஞ்சாலையாம். ஆனால் வழி குறுகலாக தான் இருந்தது. அது செம்மையான பயணம். செழிப்பான பயணம். நிறைய வளைவுகள். ஒவ்வொரு சந்தியிலும் இது தான் சரியான வழியா என விசாரித்துக்கொண்டோம். ரஜினி போல ஏதோ ஊருக்கு சென்று உம்மா எல்லாம் எங்களால் வாங்க முடியாத காரணத்தால். எப்படியோ லில்லியன் வீட்டினை அடைந்தோம்.

அது வீடு என்னும் சொல் அதன் அழகினை குறைத்து மதிப்பிட்டு விடும். . அது கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர். இந்த வீட்டிற்கு ஒரு வருடம் முன்னர் கல்லூரி நண்பர்களுடன் வந்திருக்கின்றேன். லில்லியனின் தந்தை ஓய்வுபெற்ற  பேராசிரியர். அவர் இந்த வீட்டை பற்றி சொல்லும் போது” எந்த ஒரு இடமும் வெறுமையாக இருக்க கூடாது”. நிஜம். எல்லா இடமும் ஏதாவது கலைநுணுக்கத்துடன் அமைந்து இருக்கு. மீன் தொட்டியோ, அழகிய புராதான பொருளோ, மர வேலைப்பாடோ, புகைப்படமோ, சாரளத்திற்கு வெளியே பச்சை மரமோ ஏதாவது ஒன்று எங்கும் இருந்தது. நிச்சயம் அனைவரின் கனவாக இருக்கும் இந்த வீடு, அல்ல மாளிகை.ரசனையுள்ள மனிதர். இந்த வீட்டில் இருந்தாலே ஒரு அமைதி, சுகம். இந்த முறை நானும் ஹரியும் லில்லியனின் நிச்சயதாம்பூல விழாவிற்கு சென்றிருந்தோம். எங்கும் மக்கள். லில்லியன் தம்பி எங்களை வரவேற்றான். அவள் தந்தை எங்களுக்கு சூடான் தேநீர்அளித்து பயண களைப்பை போக்கினார்.

கல்லூரி நண்பன் நடராஜ், அருகே இருக்கும் விடுதியில் தங்கி இருப்பதாக சொன்னார். நிறைய நேரம் இருந்ததால் அங்கே சென்று ஓய்வெடுத்து மீண்டும் கிளம்பி வந்தோம். வழியில் அலுவலக நண்பர்களுக்கும் அறைவாசிகளுக்கு கேரளா ஸ்பெஷல் அயிட்டங்கள் (அட சிப்ஸ் தான்பா) வாங்கினோம். கூட்டம் அதிகரித்து இருந்தது. எங்கும் அழகான அலங்காரம். ஐஸ் கட்டியில் சிற்பங்கள் செய்திருந்தார்கள். ஒருவர் ஐஸ்கட்டியில் அற்புத பறவை ஒன்றினை செதுக்கினார். அதன் தலையில் சிகப்பு சாயத்தை ஊற்றினார், அது மெல்ல எல்லா இடங்களிலும் பரவி அழகாக தோற்றமளித்தது. ஆஹா. மேலும் மக்கள் வர துவங்கிவிட்டனர். மாப்பிள்ளை பெங்களூரில் பணி புரிகின்றார். நாங்கள் மதுவிடன் வாக்களித்தபடி 12க்கு அவன் வீட்டில் இருக்க விரைவாக, விழாவிற்கு முன்னரே கிளம்பிவிட்டோம், மணமக்களை வாழ்த்திவிட்டு.

மீண்டும் ஊரமனாவிற்கு பத்திரமாக திரும்பினோம். கேமராவில் அதன் அழகை படம்பிடித்திருந்தால் மறக்கமுடியா அனுபவமாக இருந்திருக்கு, ஆனால் ஒவ்வொரு முறையும் படச்சுருளை மறந்துவிடுவோம். கோதமங்களத்தில் வாங்கிடவேண்டும் என்று இருந்தோம், மறந்துவிட்டோம்.

ஆனந்த குளியல்…

நாங்கள் விரைவில் திரும்பியது ஒரு காரணத்திற்காக தான். மது எங்களை பக்கத்து ஆற்றுக்கு அழைத்து செல்வதாக சொன்னான். அங்கே நல்ல குளியல் போடலாம். மதுவீட்டில் இருந்து நான், ஹரி, மது, ராஜேஷ் காரில் சென்றோம். சிரிஷா எங்களோடு இணைந்து கொண்டார். சிரிஷா மதுவின் ஒன்றுவிட்ட தம்பியோ இரண்டுவிட்ட தம்பியோ. சொந்தமாக ஒரு கடையினை கொளச்சேரியில் வைத்துள்ளார். சிறிது நேரம், ஏன் கேரளாவில் மஞ்சள் காமாலை நோய் அதிகமாக இருக்கின்றது என ஆராய்ந்தோம். சமீபத்தில் சிரிஷாவிற்கும் அந்த சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. மதுவிற்கு பெங்களூரில் மஞ்சள் காமாலை வந்தது. அரை மணி நேரம் பயணம். கள்ளு கடைக்கு சென்றோம். கள்ளு, தயாரிக்கப்பட்ட உடன் அதிக விட்டமின் சி கொண்டது. இங்கே கள்ளு அருந்துவது ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். பெண்களும் சரளமாக அருந்துவது வியப்பே.

ஒரு வாய் கூட வைக்க முடியவில்லை. எங்கள் மேஜை மீது பறப்பன, ஊர்வன, கூவுவன என எல்லாம் இருந்தது. “கப்பா”வை வரவைத்தார்கள். கப்பா என்பது ஒரு வகை உணவு. நிறைய விட்டமின்களும் புரதங்களும் அடங்கிய உணவு. ஐந்து வகையான உயிரினங்கள் மேஜையின் மீது இருந்தது. சில துண்டுகள் ரொட்டியினை மட்டுமே என்னால் உண்ண முடிந்தது. உள்ளிருந்தது ஏதோ செய்ததால் வெளியே வந்துவிட்டேன். அவர்களின் ஆனந்த சிரிப்புகள் சத்தமும் கேட்டுக்கொண்டு இருந்தது. அங்கிருந்து மூவட்டுப்புழா ஆறுக்கு புறப்பட்டோம். வழியில் பாபு குட்டனும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.அவருக்காக மீண்டும் ஒரு கள்ளு கடையில் வண்டி நின்றது. நான் காரிலேயே இருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுது தூரம் வண்டியை செலுத்தினேன்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் ஆறு வந்தது. ஆடைகள் களைந்து குதுத்தோம்.ஆற்றின் நடுவில் மட்டும் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர்.ஆறு தெளிவாக இருந்தது. அந்த இடத்தின் அமைதியும் ரம்மியமும் இன்னும் நெஞ்சினில் நிற்கின்றது. ஆற்றின் அந்த கரையில் தென்னைமரமும், ரப்பர் தோட்டங்களும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இரண்டு மணி நேரம் குளித்திருப்போம். மகிழ்ச்சி ஆரவாரம் தான். கண்ணாடியினை கழற்றி விட்டதால் மேற்கொண்டு நடந்தது என்ன என்று என்னால் சொல்ல இயலாது. நான் பார்க்க முடியாத ஒன்றை உங்களிடம் எப்படி சொல்வது? நான் மிகவும் ரசித்த ஒன்று ஆற்றின் கரையில் தலையினை மூழ்கி வான் நோக்கி படுத்து இருந்த அந்த அரை மணி நேரம். சுவாசிக்க மூக்கு மட்டும் தண்ணீர் வெளியே இருந்தது. காதுகளில் ஆற்றின் சலசலப்பு. அந்த சத்தமும் நின்று போய், நான் மூச்சுவிடும் சத்தம் மட்டும் கேட்டது. அமைதி அமைதி. மனதிலும் அமைதி. 10 கி.மீட்டர் தூரத்தில் யாரோ அழைப்பது போல இருந்தது..கண்களை திறந்து வெளியே பார்த்தால் ராஜேஷ் நின்றுகொண்டிருந்தார். “ப்ளீஸ்…” அவருக்கே உரிய பாணியில்…வீட்டிற்கு அழைத்தார்.

வீட்டிற்கு சென்றோம். ஹரியில் உடல்நிலை சரியாக இல்லை. பைகளில் உடைகளை அடைத்தோம். அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். மற்றொரு உறவினன் பாபு குட்டன் உதித்தார்.எங்களை எர்ணாகுளம் வரை காரில் விட அவரும் வந்தார். அவரிடம் இரண்டு நாள் நடந்ததை விவரித்து வந்தேன். திடீரென ஹரி காரை நிறுத்த சொன்னான். கீழே இறங்கினான்.”உவாக் உவாக்” சத்தம். குவா குவா சத்தம் இல்லை. உள்ளிருந்தது வெளியே வந்து கொண்டிருந்தது. கள்ளு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் சோர்வாக காணப்பட்டான்.

எர்ணாகுளத்தை அடைந்தோம். காரை நிறுத்திவிட்டு பேருந்து அருகே சென்றோம். “உவாக் உவாக்” சத்தம். ஹரி அதிரடியில்.

பாபு குட்டனின் கடைசி வார்த்தைகள்..”இந்த கள்ளு சரியில்லை. அடுத்த முறை நன்னா இருக்கும்…”

- பயணங்கள் தொடரும்.

பெப்ரவரி 8, 2008

கேள்விகளின்றி - கவிதை

கோப்பு வகை: Kavithai, கவிதை — vizhiyan @ 5:11 நான்

கேள்விகளின்றி
பள்ளத்தாக்கின் அடிவாரத்தில்
செந்நிற இதயம் கண்டேன்..
அளவில்லா அன்பின் வாசமும்
மன்னிப்பின் மணமும்
நெடுந்தூரம் கமழ
மறுகேள்வியின்றி புரிந்தது
அது தாயின் இதயம்
-விழியன்

பெப்ரவரி 4, 2008

“நான் நடிகனான கதை” - புத்தக அறிமுகம்

கோப்பு வகை: Review, கட்டுரை, விமர்சனம் — குறிச்சொற்கள்:, — vizhiyan @ 6:13 நான்

“நான் நடிகனான கதை” - சார்லி சாப்ளின்
தமிழில் - சுரா
வெளியீடு - வ.உ.சி நூலகம்
விலை : ரூபாய் 70
பக்கங்கள் : 176


ஆளுமைகளை பற்றிய வாசிப்பே சுவாரஸ்யம் தான். அதுவும் நம்மை மயக்கிய, ஆச்சரியப்படுத்திய ஆளுமைகளை பற்றி தெரிந்து கொள்வது இன்னும் சுவாரஸ்யம். அதுவும் அந்த ஆளுமையே தான் வளர்ந்த விதத்தை விளக்கினால்.. அப்படிப்பட்ட ஒரு சுயசரிதை தான் “நான் நடிகனான கதை”. அந்த நபர் நம்மை எல்லாம் சிரிக்க வைத்த, இன்னும் பல ஆண்டுகளாகியும் இளம் சிறார் முதல் முதியவர் வரை பார்த்தவுடன் புன்சிரிப்பை வரவழைக்கும், கடந்த நூற்றாண்டின் மாபெரும் நடிகர், சார்லி சாப்ளின்.

அரசியல் ரீதியாக பல சர்ச்சைகள் இருந்தும், ஒரு நடிகனாக, ஒரு சிந்தனையாளனாக, வாழ்வின் அடித்தளத்தில் இருந்து உயர்ந்த இடத்திற்கு சென்று நம்பிக்கை நட்சத்திரமாக விளக்கியவர் சார்லி சாப்ளின் என்பதில் ஐயமே இல்லை எனலாம். சார்லி சாப்ளின் தன் கதையினை குழந்தை பருவம் முதல் துவங்குகின்றார்.

அவருக்கு நினைவு வரும் போது, அவருடைய தாயும் தந்தையும் பிரிந்துவிட்டு இருந்தார்கள். தனக்கும் ஒரு தந்தை இருக்கின்றார் என்பது பிற்காலங்களில் தெரியவருகின்றது. தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். அவருடைய தாய் பற்றி அவர் கூறும் போது தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பது புலனாகின்றது. அடுத்த வேளை உணவிற்கு கூட என்ன வழி என்று தெரியாமல் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்திருக்கின்றது. பசியின் வலியினை அந்த இளம் பருவத்திலேயே அதிகம் அனுபவித்து இருக்கின்றார்.

சார்லிக்கு உற்ற நண்பன், தோழன், துணைவன் அவருடைய அண்ணன் சிட்னி. சிட்னி, தன் தாயின் முதல் கணவருடைய மகன். சார்லி இரண்டாவது கணவரின் மகன்.வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிட்னி சார்லிக்கு துணையாக நிற்கின்றார். இருவரும் அனாதை விடுதியில் படும் வேதனைகள், தாயினை மனநல காப்பகத்தில் விட்டுவிட்டு தனியே இருக்கும் காலங்கள், பணத்திற்காக படும் அல்லல்கள், வேலை தேடி அலையும் நேரங்கள், எல்லா காலகட்டத்திலும் கூடவே இருக்கின்றார் சிட்னி. பிற்காலத்தில் இவரும் நல்ல நடிகராக விலங்கினார்.

சார்லி தன் தாய் மற்றும் சிட்னியுடன் வளர்கின்றார். பின்னர் வருமானம் ஏதும் இல்லாத நிலையில் அனாதை விடுதிக்கு மூவரும் செல்கின்றனர். தாயும் மகன்களும் பிரிந்துவிடுகின்றார்கள். சில காலம் கழித்து மீண்டும் ஒன்று சேர்கின்றார்கள். வரும் பணத்திற்கு ஏற்ப வீட்டினை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். பல்வேறு நபர்களையும் நண்பர்களையும் சந்திக்கின்றார்கள். தன் தந்தையுடன் மீண்டும் சேர்கின்றார்கள். இதனிடையில் தன் தாய் மனநலம் குன்றி மனநல காப்பகத்தில் அனுமதிக்கபடுகின்றார். தந்தை மிக்பெரிய நடிகர், அதே சமயம் பெரிய குடிகாரர். அவருடைய இரண்டாம் மனைவி லூசி வீட்டில் வளர்கின்றார்கள். சிட்னிக்கும் லூசிக்கும் சரவரவில்லை. தாய் குணமாகி திரும்புகின்றார். தையல் தொழில் செய்து வாழ்கை தொடர்கின்றது. இடையில் ஒருவருடம் சார்லி குழந்தைகள் நாடக குழுவில் சேர்கின்றார். தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர முடியவில்லை, அவருக்கும் படிப்பில் ஆர்வம் அதிகமில்லை. மீண்டும் தாய் மனநலம் காப்பகத்தில் சேர்கின்றார். அண்ணனும் வெளியூர் செல்கின்றார். தனிமை. வறுமை. போராட்டம். யாரும் இல்லாத சாலைகளில் பயணம். ஒரு வழியாக நாடக கம்பெனி ஒன்றில் இணைகின்றார். படிப்படியாக முன்னேறுகின்றார். அமெரிக்கா பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது புத்தகம் நிறைவு பெருகின்றது. அதன் பின்னால் நடந்தை கதை உலகமே அறியும்.

இந்த புத்தகம் மொழிபெயர்ப்பு புத்தகம் என்பது வாசிக்கும் போது தெரியாத அளவிற்கு மிக எதார்த்தமான வார்தைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். மேலை நாட்டின் சில பழக்க வழக்கங்கள் தான் சில சமயம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. என்ன செய்ய நாம் வளர்ந்துவிட்ட சூழல் அப்படி. சுயசரிதையில் ஒரு பகுதியில் ஒரு வீட்டில் மூன்று சிறுவர்கள் இருப்பார்கள். சார்லி, சிட்னி, மற்றும் நான்கு வயது சிறுவன். இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஆனால் சிட்னி தன் தாயின் முதல் கணவருடைய மகன், அந்த சிறுவன் தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன். என்ன இருப்பினும் அது அவர்கள் வாழ்கை முறை. எதை எடுத்துக்கொள்ள வேண்டும் அதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

சார்லி சாப்ளின் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு நடுவே மெல்லிய சோக இழை ஓடும். அனேகமாக எல்லா திரைப்படங்களிலும் இதனை காணலாம். சுயசரிதையில் அதற்கான அடித்தளத்தினை விளக்குகின்றார். மாபெரும் நடிகன் உருவான கதை உருக்கமாக, உணர்வு பூர்வமாக இருக்கின்றது. பட்ட காயங்களை எல்லாம் நினைத்து வந்தாமல் தொடந்து போராடு என்பதை உணர்த்துகின்றது. வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதே வெட்கம் என்பதை சொல்லாமல் சொல்கின்றது. எது வெற்றி, எதை நாம் அடைய வேண்டும் என்று நாம் தான் நிச்சயிக்க வேண்டும்.

- விழியன்

ஜனவரி 31, 2008

Vizhiyan Photography - 25 (VIT Alumni Meet - 2)

கோப்பு வகை: Photography, Photos, Snaps, கனா காலங்கள், புகைப்படம் — குறிச்சொற்கள்:, — vizhiyan @ 10:04 நான்

1. வி.ஐ.டி. நுழைவுவாயில்

2.வெட்டப்பட்ட கேக்

3. மீண்டும் ஒரு முறை படிக்கணும் போல இருக்கே !!

4. இந்த குளத்தில் யாரும் கல்லெறியவில்லை்

5. நாங்கெல்லாம் இந்த காலேஜுக்கு தூண் (யாருப்பா அது? )

6. வழிப்பாதை

7. அறிவை விரியச்செய்த நூலகம்..்

8. ்சச்ச்சசசத்தியமாக இது கல்லூரிக்குள் தான்…நம்புங்க..

9. இப்போ இணைந்த  தலைகள் (என்ன உலகத்தில ஒரே  தல  தானா ? )

10. இறகும் இலையும் சந்தித்தபோது…

11.ஆட்டம்கொண்டாட்டம்

12. ஹாஸ்டல் என்றதும் ஒரு பழைய கவிதையுடன்…
நிறைவேறாத கனவுகள்

ஒன்பது மணி குளியலறை சண்டை
பக்கெட் போராட்டம்
சோப்பு சண்டை
இரவு நேர கும்மாளங்கள்
கால நேரம் தெரியாமல் சீட்டாட்டங்கள்
நினைத்த நேர கிரிக்கெட்
காரணம் அறியா அடிதடி
புகைப்பதற்கான தனியறை
அரை இஞ்ச் அழுக்கேறிய ஜீன்ஸ்
ஞாயிறு காலை மெஸ்ஸின் தோசை
ஒரே கட்டிலில் மூவர் உறக்கம்
விடிய விடிய தேர்வின் தயாரிப்பு
தேர்வு முந்தைய நாள் கண்விழிப்பு
மின்சாரம் அணைந்ததும் எழும் சத்தம்
சன்னலை திறந்தால் உள்வரும் மலையழகு
மலைக்கோவில் தரிசனம்
மொழிவாரியாக நட்பு
காசு பார்க்காத மனம்
எல்லாம் கேள்விபட்டதோடு சரி
நிறைவேறாத என் ஹாஸ்டல் கனவுகள்

விழியன்

13. வானிலிருந்து வி.ஐ.டி

14. ஹய்யா நான் காலேஜ் முடிச்சிட்டேன்…அய்யோ !! நான் காலேஜ் முடிச்சிட்டேனா? :(

- மீண்டும் சந்திப்போம்
-விழியன்

ஜனவரி 30, 2008

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் - புத்தக அறிமுகம்

கோப்பு வகை: Review, விமர்சனம் — குறிச்சொற்கள்: — vizhiyan @ 12:25 பிற்பகல்

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் - புத்தக அறிமுகம்.
புத்தகத்தின் பெயர் : Tuesdays with Moorie (ஒரு வயோதிகர், ஒரு இளைஞர், வாழ்வின் மிகப்பெரிய பாடம்)
ஆசிரியர் : மிட்ச் ஆல்பம்
பக்கங்கள் : 192

“Tuesdays with Moorie” - ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகம் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக பேசப்படுகின்றது. சித்தார்த்தின் பதிவில் இந்த புத்தகத்தினை பற்றி படித்து ஈர்க்கப்பட்டு வாங்கிய ஒரே நாளில் முடித்துவிட்டேன்.

மோரியும், அவரின் முன்னாள் மாணவரான மிட்ச் ஆல்பமும் சந்தித்து பேசிக்கொள்ளும் விஷயங்களே இந்த புத்தகத்தின் கரு. மோரி தன்னுடைய எழுபத்தி எட்டாவது வயதி ALS என்னும் கொடிய நோய்க்கு ஆளாகின்றார். சிறுக சிறுக நோய்க்கு உணவாக்கப்பட்டு மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள காத்திருக்கிறார் மோரி. பதினாறு ஆண்டுகள் கழித்து தன் ஆசிரியரின் நிலையினை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காண நேரிட்டு, மோரியை நேரில் சந்திக்க வருகின்றார் மிட்ச். இன்னும் சில மாதங்களில் இறக்க போகும் மோரியும், மிட்சும் துவங்கும் கடைசி ப்ராஜெட் இந்த புத்தகம்.

மோரி சிறுவயதிலேயே தன் தாயினை பறிகொடுக்கின்றார். தாயின் மரணம் நீங்காத காயத்தினை உண்டு செய்கின்றது. தந்தை மறுமணம் புரிகின்றார். புதிய தாயின் அரவணைப்பில் அவர் வளர்கிறார். படித்துவிட்டு நேராக ஒரு மனநல காப்பகத்தில் ஆராய்ச்சி ஒன்று செய்ய துவங்குகிறார். பல்வேறு அனுபவங்கள். அங்கிருந்து கல்லூரிக்கு செல்கிறார். பல புத்தகங்கள் எழுதுகிறார். ஏராளமான மாணவர்களுக்கு உந்துதலாக இருக்கிறார். மனைவி மக்களோடு ஆனந்தமாக வாழ்கிறார். தன் வாழ்கையின் மூலம் வாழ்வின் பொருளினை உலகிற்கு சொல்ல விழைகிறார். ALS என்கின்ற நோய் தாக்கப்பட்டதும், மரணத்தை வா வா என்று அழைக்கிறார். தான் இயற்கையோடு கலக்க போவதில் ஆனந்தம் கொள்கிறார். அவர் நினைத்தது போலவே ஆனந்த மரணம் அடைகின்றார், யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல், அமைதியாக இறக்கிறார்.

மோரியும், மிட்சும் உரையாடும் பதினாங்கு தலைப்புகளே வாழ்க்கை பாடங்கள். ஒவ்வொரும் தலைப்பின் கீழும் வாழ்வின் ரகசியங்கள். வலிகளை அனுபவிப்பது, குடும்பம், பணம், வாழ்வில் எது முக்கியம், சக மனிதர்களிடத்தே பாசம், விட்டுக்கொடுத்தல், மெல்லிய உணர்வுகள் என்று நம்மை உள்ளே இழுத்துக்கொள்கின்றது இப்புத்தகம். இது நிச்சயம் கதையோ, நாவலோ அல்ல. இவர்கள் விவாதிப்பது ஏதோ நடைமுறை சாத்தியமற்ற விஷயங்கள் அல்ல.

திறந்த மனதோடு எந்த புத்தகத்தை வாசித்தாலும் நிறைய செய்திகளை உள்வாங்கி கொள்ளலாம். பின்னர் அவற்றினை அலசி ஆராய்ந்து, கேள்விகளை தொடுத்து, மடக்கி வெளியேற்றுவதென்றாலும் உள்ளேயே வைத்துக்கொள்வது என்பது அவரவரை சார்ந்தது. இந்த புத்தகத்தினை அப்படி வாசித்தால், ஏராளமான செய்திகள் உள் தங்கும் என்பது நிச்சயம். கடினமான எழுத்துக்கள் அல்லாமல் மிக சாதாரண வார்த்தைகளில் கோர்வையாக்கி தந்திருப்பது புத்தகத்தின் மற்றொரு அம்சம்.

ஏதோ அந்த மூன்று மாதமும் மோரி மிட்சுடன் நாமும் வாழ்ந்த ஒர் உணர்வு. தேவையில்லாத அலட்டிக்கொள்ளும் எ