சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த ஒரு வருடமாக எடுத்த சில புகைப்படங்கள்
1. மூன்று சிங்கங்கள்

2. தாத்தா தலையில காக்கா.

3. வெடிக்கக் காத்திப்பது கொடுமையானதுங்க.

4. இது ஒரு ப்ளூ மாலைப் பொழுது

5. சோளக்கடை சுந்தரம் இவர் தான்

6. அதிசயமாக காகங்கள் மட்டும் தனியாக..

7. அன்பான அப்பா

8. கடலில் குதுகலமாய் உறக்கம்

9. மாலை மயக்கம்

10. டாட்டா சூரியன்.

11. உறசாகத்தை உதிர்த்து செல்லும் மாணவிகள்.

12. சிப்பிக்குள் கரி.

13. குறிக்கோள்

14. ரம்மியப் பொழுது

15. அம்மாவும் அழகு பாப்பாவும்.

16. ஆராய்ச்சி

- விழியன்
வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..கேள்வி பட்டதுண்டா நீங்கள்??
1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது ஆனால் மீண்டும் புதிதாக வைக்கவில்லை)
2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)
3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)
4. அழகில்லாத பெண்கள்.
5. வீரமில்லாத ஆண்கள்
6. ராஜா இல்லாத கோட்டை
7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம். வேலூர் வெய்யிலுக்கு பிரசித்தி)
- விழியன்
அமுதப்பார்வை
தனித்துவிடப்பட்ட மாலைப்பொழுதில்
சந்தனம் தெளித்தாள் மகளவள்
துணியெடுத்து துடைத்தேன்
சத்தம்போடாமல் சுத்தமிட்டேன்
இல்லாள் அறை நுழைந்த சமயம்
“பார் நான் என்னெல்லாம் செய்கிறேன்”
பெருமிதத்தேன் என் செய்கைக்கு
பார்வையால் காட்டிய திசையில்
மலையளவு அழுக்குத் துணிகள்
–
விழியன்
கடுநட்பு – சிறுகதை
நீண்ட நாட்கள் தேடுதலில் நாட்கள் நீண்டு பிரகாசமாக திகதியொன்றில் மணப்பெண்ணை சந்திக்க நாள் குறித்தார்கள். எனக்கு மணப்பெண்ணா என நேரில் சந்தித்து முடிவெடுக்க குடும்பங்கள் கோவிலில் கூடினோம். பெண் பார்க்கும் படலம் உருத்தாலாக இருந்தது. வேண்டாமென சொல்லிவிட்டால் பெண்ணின் மனநிலை என்னாகும் என வருத்தம். அக்காள் சமாதானம் செய்து எடுத்தோம் கவிழ்த்தோம் என இருக்க முடியாது, பேசு,பார், பிடித்திருந்தால் முடிக்கலாம் என்றாள். தனியாக பேசுங்கள் என்றார்கள் ஆனால் மூவர் இருந்தோம். அவள் சேலையினை அரிதாக கட்டுவாள் என தெரிந்தது. பார்த்த மாத்திரத்தில் காதல் பற்றிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்கும் பிடித்திருந்தது. நாங்கள் இருவர் அல்லாமல் மூன்றாவதாக பூர்வா உடனிருந்தாள். பூர்வா அவளின் உற்ற தோழி. பள்ளி முதல் தொடர்ந்துவரும் நட்பு. சிலசமயம் மெய்சிலிர்த்துவிடும் இத்தகைய நட்பை பற்றி கேள்வியுரும் பொழுதுகளில், உறவாடும் கனங்களில். நான் பார்க்க சென்ற பெண் குறைவாகவே பேசினாள். என்னை பிடித்திருந்தது உணர முடிந்தது.
* * * * * * *
பூர்வா என்னைப் பற்றி அதிகம் விசாரித்தாள். வேலை, கல்லூரி, நண்பர்கள், அலுவலகம், ரசனை என கேள்விகேட்டுக்கொண்டே இருந்தாள். நாங்கள் இருவரும் தனியாக விடப்பட்டோம். நானும் பூர்வாவும். அவள் கோவில் பிராகரத்திற்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். திண்ணையொன்றில் அமர்ந்தோம். என் மனைவி (பின்னாளில் மணம் புரிந்து கொண்டோம்) பற்றி விவரித்தாள். அக்கறையுடன் அவளின் பழக்கவழக்கங்கள், அவளின் அறியாமை, அவளின் அன்பு, அவளின் கனவுகள், அவள் குடும்பம் என யாரிடமும் விசாரிக்க அவசியமின்றி அனைத்தையும் நடுநிலையுடன் மெதுவாக சொல்லிக்கொண்டே இருந்தாள். இடையே தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை,ஆனால் என் மனைவிக்கு அதிக நம்பிக்கை என்றாள். “கோவிலுக்கு வருவேன் ஆனால் நான் இப்படி வெளியில் நின்றுவிடுவேன்” என்றாள். என் மனைவி விபூதியை நீட்டினாள். நெற்றியில் இட்டுக்கொண்டேன். பூர்வாவின் நெற்றியில் அவளே பூசினாள். என்னைப் பார்த்து புன்னகைத்தாள். கடவுளிடம் இந்த வரன் முடிந்துவிடவேண்டுமென வேண்டி வந்ததாக தேன்நிலவிற்கு செல்லும் வழியில் கூறினாள். கடவுள் வரமளித்துவிட்டார் போலும்.
* * * * * * *
“மாலை நான்கு மணிக்கு பூங்காவிற்கு வந்துவிடுங்க..” என்று அலைபேசியில் அழைத்தாள் பூர்வா. என்னையும் என் மனைவியையும் சந்திக்க அவள் செய்த ஏற்பாடு தான் அது. “போனில் மணிக்கணக்கில் பேசினாலும் நேர்ல பாக்குற மாதிரி வராது. நேர்ல நல்ல பேசுங்க” என எங்களை மரமொன்றின் கீழ் அமர வைத்துவிட்டு, இதோ வந்துவிடுகின்றேன் என சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தாள். அவள் சொன்னது போல நேரில் பேசியபோது தான் அதிக நெருக்கமானதை உணர்ந்தோம்.பாப் கார்ன் வாங்கி கொடுத்தேன். வேண்டாம் நீங்களே சாப்பிடுங்க என்றாள்.
“எனக்கு உங்களை அண்ணான்னு கூப்பிட தோணல. அது என்ன தோழியின் கணவனை அண்ணா ன்னு தான் கூப்பிடனுமா? யார் வெச்ச சட்டம்.” – பூர்வா. சில சமயம் சார் என்றாள், சில சமயம் நீங்க வாங்க என்றாள்.
உறவை நிர்பந்தப்படுத்தி இப்படி தான் கூப்பிட வேண்டும் என்று யார் கட்டாயப்படுத்தினார்கள்? என் நண்பர்களும் என் மனைவியினை தங்கை என கூப்பிட வேண்டும் என்கின்ற எண்ணம் உடைந்தது. அவளும் அவர்களுக்கு தோழி தான். அந்த உறவை அவர்கள் எவ்வாறு எடுத்து செல்வது என அவர்கள் இருவரும் தீர்மானிக்கட்டும் என தீர்மானம் போட்டுக்கொண்டேன். ஆசையாசையாய் இருந்தது நட்பை நினைக்கும் பொழுதுகளில் எல்லாம். வாழ்நாள் முழுதும் நட்பின் கதகதப்பின் வாழ்வது சுகம் என நினைத்துக்கொள்வதுண்டு.
* * * * * * *
திருமணம் முடிந்து முதல் சண்டை அரங்கேறியது. இரண்டு நாட்கள் பேசிக்கொள்ளவில்லை. அவள் அம்மாவீட்டிற்கு சென்றுவிட்டாள். நாங்கள் குடியிருந்த ஊருக்கும் அவள் அம்மா வீட்டிற்கும் இரண்டு மணி நேர பயணம். அலுவலக போனில் இருந்து தகவல் “உங்களை பார்க்க ஒரு பெண் வந்திருக்காங்க.”. பூர்வா சிரித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்திருந்தாள். “என்ன சார் சண்டை ஆரம்பிச்சாச்சா? “ என்றாள். எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. வெளியே காபி சாப்பிட அழைத்து சென்றேன். “சண்டை வரும் சார், அதுக்க வருத்தப்படாதீங்க. அப்புறம் வரும் அன்னோன்னியம் இருக்கே அது சூப்பரா இருக்கும்..அவ தங்கமானவ. நீங்க அவளை விட தங்கமானவரு..இப்படி நீங்க இருக்குறது நல்லா இல்ல. அவங்க வீட்ல அவ சண்டைய பத்தி எதுவும் சொல்லல..சும்மா அம்மா நியாபகம் வந்தது அது தான் வந்தேன்னு சொல்லி இருக்கா..” என்னன எதுவும் பேசவிடவில்லை. “இப்ப கெளம்பி என் கூட வாங்க. வந்து அவங்க வீட்ல உட்காருங்க. அது போதும்” என்றாள்.
அலுவலகத்தில் பர்மிசன் சொல்லிவிட்டு மாமனார் வீட்டிற்கு இருவரும் கிளம்பினோம். பூவும் இனிப்பும் வழியில் வாங்கிக்கொண்டேன். வீட்டிற்குள் போனது தான் தாமதம், ஓடி வந்து கட்டியணைத்துக்கொண்டாள்.அவள் அம்மா, பூர்வா எல்லோரும் இருப்பதை கூட அவள் கண்டுகொள்ளவில்லை. பூர்வாவிற்கு பார்வையால் நன்றி சொன்னேன். அவள் கண்களில் ஏனோ ஈரம்.
* * * * * * *
கருவில் குழந்தை பிறந்ததற்கு எங்களை விட ஆனந்த அடைந்து நேராக வீட்டிற்கு வந்து “பத்திரமா பாத்துக்கோங்க சார் பத்திரமாக பாத்துக்கோங்க சார்” என சொல்லிவிட்டு சென்றாள்.
* * * * * * *
எங்கள் முதல் வருட திருமண தினத்திற்கு அழகிய ஆயில் பெயிண்டிங் அனுப்பி தன் வாழ்த்துக்களை தெரிவித்தாள் பூர்வா.
* * * * * * *
பள்ளி முடித்து கல்லூரி செல்லும் தருவாயில் மனைவியின் வீட்டில் ஏகத்திற்கு கஷ்டம். வறுமை தாண்டவமாடி இருக்கின்றது. படிக்க வைக்க நினைத்தும் முடியாத சூழல். பூர்வா அப்பா தான் உதவினார். என் மனைவி திருமண முன்னர் இந்த செய்திகளை சொன்னபோது நெகிழ்ந்து போனேன். “இதுபாரும்மா, நான் உன்னை படிக்கவெக்கறேன். நீ திருப்பி காசு தர வேணாம். ஆனா நீ பிற்காலத்தில உன் கல்வியால யாராச்சும் ஒருத்தரையாவது படிக்கவெக்கனும்..அவ்வளவு தான்..” என்றாராம். பூர்வா மீது மட்டுமல்ல அவள் தந்தை மீதும் அளவுகடந்த மரியாதை வந்திருந்தது. திருமணத்தின் போது என் பெற்றோர்கள், அவள் பெற்றோர்கள் காலில் தவிர யார் காலிலும் விழமாட்டேன் என சொல்லிவிட்டேன். திமிர் பிடிச்சவன் என்றார்களாம். பூர்வாவின் வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோது அவர்கள் காலில் விழுந்தோம்.
* * * * * * *
யார் மீது கோவம் கொள்வது என தெரியவில்லை. ஆனால் கட்டுக்கடங்காத கோவம். மனைவி அந்த செய்தி சொன்னதில் இருந்தே மனசு பாரமாக இருந்தது போன்ற உணர்வு. “பூர்வாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுங்க. அவசியம் போகனும். கடைசியா இப்ப தான் பாக்க முடியும்” என்றாள். வெளிநாடு செல்ல போகின்றாளா என விசாரித்ததில், அவள் எங்க ஊரில் தான் இருக்க போகின்றாள் என தெரியவந்தது. அவள் தன் மாமா மகனை விரும்பி திருமணம் செய்து கொள்ள போகின்றாள். குடும்ப சண்டைகள் தகர்ந்து திருமணம் நடக்கவுள்ளது. கல்லூரியில் படிக்கும்பொழுதே காதலித்து இருக்கின்றார்கள், அப்போதே சொல்லிவிட்டானாம் பூர்வானின் மாமன் மகன் “கல்யாணத்து அப்புறம் நீ யார் கூடவும் பேசக்கூடாது. நான் நம்ம குடும்பம் மட்டும் தான்..” ஏன்? ஏன் இப்படிப்பட்ட எண்ணம் எல்லாம்? தன் மனைவிக்கும் ஆசைகள்,கனவுகள், நட்பு இருக்கக்கூடாதா? பூர்வா ஏன் ஒத்துக்கிட்டா?
* * * * * * *
தூரத்தில் எங்களை பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு. மனைவி நிறைமாத கர்பிணி. கண்களால் நலம் விசாரித்தாள். மணமகன் நன்றாக தான் இருந்தான். ஆனால் ஆத்திரமாக இருந்தது.பூர்வாவின் அப்பா வாட்டமாக காணப்பட்டார். உடல்நிலை சரியில்லையாம்.அதனால் அவசரமாக திருமணம் போலும்.அது மணவிழா அல்ல, நட்பின் மரண விழா.தாலி கழுத்தில் ஏறியது. எல்லாம் முடிந்தது. அட்சதை தூவினர். பரிசுகளுடன் அனைவரும் வரிசையில் சென்றோம். மனைவியின் கைகளை இறுக பற்றினாள். “சொல்லி இருக்கேனே என் பிரண்டுங்க..” என்றாள் கணவனிடம். நகைத்தான். நகைத்தோம். “வாழ்த்துக்கள் பூர்வா.” என்றேன். வாய் திறக்காமல் நன்றி தெரிவித்தாள். சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து கிளம்புவதாக தெரிவித்தோம்.
“பாப்பா பொறந்தா எங்க அம்மாகிட்ட சொல்லிடுடீ. நான் அம்மா கிட்ட கேட்டுக்கறேன்..பாத்துக்கோங்க அண்ணா..” என்றாள்.
* * * * * * *
- விழியன்
இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
அம்மாவின் கைகளில்
விளையாடிக்கொண்டே இருந்தவள்
வீலென அலறினாள்
அம்மு அழகுவென கொஞ்சியும்
அழாதேவென கெஞ்சியும் அடங்கவில்லை
அம்மாவின் கைகளில் தாவி
அடக்கமாய் உணர்ந்து அடங்கினாள்
தாய்மை எனும் உன்னதத்தால்
உள்ளத்தில் உயர்கிறாள் உயிர்த்துணைவி
-விழியன்
பிதூரி
பாகிஸ்தான் சதியிருக்குமோவெனவும்
எண்ணம் தோன்றிற்று
சொல்லிக்கொடுத்து கேட்டுக்கொள்ளும்
வயதும் அவளுக்கில்லை
கடுஞ்சூழ்சிக்கு காரணம் யாரென ஆராய்ந்து
கடும் தலைவலியே மிச்சம்.
எப்படி என் மீது மட்டும்
சூச்சூ போகின்றாள்?
-விழியன்
(பிதூரி – சதி, சூழ்ச்சி)
இறுக்கமான நேரங்களில் சின்ன சிரிப்பு, ஒரு தொடுதல், பழைய நினனவுகள், கடந்த உறவுகள் ஏதேனும் ஒன்று மனதை தளர்த்திவிடும். அது தளர்த்தலோடு நில்லாமல் சில நேரங்களில் கண்களில் மழைவர செய்துவிடும். இன்று காலை ஒரு குறும்படம் பார்க்க நேர்தது. ஐந்த நிமிடங்களுக்கு குறைவாக ஓடியது, ஆனால் மனதை பிசைந்துவிட்டது.
அது என்ன?
ஒரு காம்பெளண்டின் மீது கேமரா நகர்ந்து வீட்டின் வாசல் வழியே பூங்காவிற்குள் நுழைகின்றது. வயதான அப்பாவும் மகனும் அமர்ந்திருக்கின்றார்கள். மகன் தினசரி வாசித்துக்கொண்டிருக்க அப்பா அமைதியாக இருக்கின்றார். மகனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பது போல இருக்கின்றது அவர் முகம். ஒரு சிட்டுக்குருவி செடிகளின் மீது அமர்கின்றது. மெதுவாக அப்பா “அது என்ன?” என கேட்கின்றார். “சிட்டுக்குருவி” என்கின்றான் சற்றே எரிச்சலுடன் மகன். இன்னும் சிறிது நேரம் கழித்து “அது என்ன?” என வினவுகின்றார். “அது தான் சொன்னேனே சிட்டுக்குருவி” என அலுத்து தினசரியில் மூழ்கின்றான். அப்பா எழுகின்றார். “எங்க போறீங்க?”. அமைதியா இரு என கைகாட்டிவிட்டு மெல்ல வீட்டினுள் செல்கின்றார். மகன் படித்துக்கொண்டே
இருக்கின்றான். தந்தை மீண்டும் பூங்காவிற்கு வருகின்றார் கையில் ஒரு டையரியுடன். பக்கம் ஒன்றை எடுத்து படிக்க கொடுக்கின்றார். அதில் இவ்வாறு எழுதி இருக்கின்றது. “என் இளைய மகனுக்கு மூன்று வயது நிரம்பி சில நாட்களாகின்றது. இன்று நாங்கள் இருவரும் பூங்காவிற்கு சென்றோம். எங்கள் எதிரே சிட்டுக்குருவி அமர்ந்தது. இது என்ன இது என்ன என 21 முறை கேட்டான். நானும் சிட்டுக்குருவி என சொல்லி ஒவ்வொரு முறையும் அவனை கட்டியணைத்தேன். அவனுடைய வெகுளித்தனம் என்னை எரிச்சறுற செய்யவில்லை…”. படித்து முடித்ததும் மகன் மெளனமாக இருக்கின்றான். தன் தந்தையை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தமிடுகின்றான். கேமரா அவர்கள் அமர்ந்திருக்கும் பெஞ்சிற்கு பின்னே சென்று மரத்தை காட்டி சிட்டுக்குருவி பறப்பதோடு முடிகின்றது.
இசை என்பது சிட்டுக்குருவியின் சத்தம் மட்டும் தான். கேமரா கையாடல் அற்புதம்.
இன்று தந்தையர் தினமாம். அப்பாவிடன் காட்டினேன், அவரின் பிறந்தநாள் வேறு. பூரித்தார். குழலி என்னிடம் 50 முறை கேட்டாலும் அதை முதல் முறை சொன்னது போல சொல்லும் பொறுமை வரவேண்டும், வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து தந்தைக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o
- விழியன்
சென்ற வருடம் குழந்தைகளை படம் பிடித்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…குழந்தைகளின் பெயர்கள் கிஷோர்,கவின்,கெளசிகா,மேத்யூ,ஜோசப்.
1. எங்க உலகம் ஆனந்தமானது..

2. அப்பப்ப துக்கமானதும் கூட

3. நான் சாப்பிட்டதை பார்த்துட்டூங்களா? எனக்கு வயிறு வலிக்குமே..

4. கிட்டப்பார்வை

5. பாவ பாவம்

6. பெண்சிரிப்பு

7. வெல்வேன்

8. அழகான கண்கள்

9. நான் பெரிய ஆளா வருவேன்பா..

10. இந்த சந்தில் இருந்து ஜெர்ரி வரும்பாருடா..

11. என்னை வெளியவிடுங்களேன்..

12.முத்தமிடவா தம்பி…!!

13. திருட்டுப்பயலே

- விழியன்
யாசகம்
ஏதேதோ சமிஞ்சைகள் செய்தேன்
முகத்தை அஷ்டகோணத்தினல் வைத்தேன்
பார்ப்பவர்கள் பைத்தியக்காரன் என்பார்கள்
ங்கேவென பார்வையினை பதிலாய் கொடுத்து
திளைத்தாள்
சற்றே அலுத்து
திரும்பும் தருணம் உதிர்த்தாள்
திருட்டு புன்னகையை தாமதமாய்
தாரம் கொடுத்த தங்கம் அவள்.
-விழியன்
திங்கள் இரவு. அந்த இரவு சற்று பயமாக தான் இருந்தது. வீட்டில்,வழக்கமாக எல்லா அறைகளிலும் யாரேனும் ஒருவரேனும் உறங்குவது வழக்கம். முந்திய நாள் நிகழ்வுகள் மனதில் தோன்றி சற்றே திகிலூட்டியது. ஞாயிறு காலை குழந்தையை பார்க்க ஊரிலிருந்து வேன் ஒன்றில் உறவினர்கள் வந்திருந்தனர். பிறந்த குழந்தையினை பார்க்க வந்தவர்களுக்கு பாட்டி உயிர் விடும் நிமிடங்களை காண நேரிட்டது. உடனே அனைவருக்கு தகவல் பறந்து அன்று மாலையே வேலூரில் கடைசி காரியங்களை முடித்தாகிவிட்டது.
அலுவலகத்தில் வேலை இருந்ததால் நான் மட்டும் திங்கள் மதியம் சென்னை திரும்பினேன். வீடு விரிச்சென இருந்தது. பாட்டி உயிர்விட்ட இடத்தை நோட்டம் விட்டு அலுவலகம் கிளம்பிவிட்டேன். இரவு வீடு திரும்பும் பொழுது எதிர்வீட்டு சிவா விவரங்களை கேட்டார். அப்படியே பேசிக்கொண்டிருந்த போது அவர் மனைவி மஹா அக்கா சொன்ன ஒரு விஷயம் மனதை ரொம்பவே கசக்கி பிழிந்துவிட்டது.
ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லை. புதிய வரவு வந்த சந்தோஷத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்த தங்கை, அத்தையான சந்தோஷத்தில் எதிர்வீட்டு அக்காவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். பாட்டி இருந்த அறையில் ஏதோ சத்தம் வரவே “என்ன பாட்டி என்ன வேணும்” என்று சன்னல் வழியே விசாரித்து இருக்கின்றார். பாட்டி “ஒன்னும் இல்லை, என் பையன் கூட பேசிட்டு இருக்கேன்” என்றாராம். வீட்டில் யாரும் இல்லை என்பது எதிர்வீட்டு அக்காவுக்கு தெரியும். ஹாலில் எட்டிப்பார்த்திருக்கின்றார் யாரும் இல்லை. அரை மணி நேரம் கழித்தே அப்பாவும் தங்கையும் வந்துள்ளார்கள். பாட்டிக்கு நினைவு படுத்திய பாடு கொஞ்சம் அலற வைத்தது. மகனிடம் பேசினார் என்றால் எந்த மகனிடம்? அப்பாவின் அண்ணன் இறந்து பலவருடம் ஆகிவிட்டது. ஒரு வேளை அவருடனா? எப்படி கழியப்போகின்றது இரவு என்றே உள் நுழைந்தேன்.
பாட்டி உயிர்விட்ட அறையில் எங்கிருந்தோ வெளிச்ச கீற்றுகள் வந்து கொண்டிருந்தன. மெளனம். தூரத்தில் சில நாய்களில் அலறல்.
மறுநாள் காலை அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன். விரலில் இருந்த மோதிரம் காணவில்லை. அது எங்கள் நிச்சயதார்த்த மோதிரம். தங்கமணி கண்டிப்பாக என்னை உண்டு இல்லை என செய்துவிடுவாள். ஏற்கனவே நேரமாகிவிட்டது. படுக்கையிலும் குளியல் அறையிலும் நோட்டம் விட்டுவிட்டு வேகமாக வண்டி எடுத்துவிட்டேன். வண்டியில் போகும் போது எங்கே விட்டிருப்பேன் என்ற யோசனைகள். பாட்டி ஆவியாக வந்து எடுத்துவிட்டார்களா? வருத்தமாக இருந்து. தங்கமே பிடிக்காத என்னிடம் பிடிக்கின்றதோ பிடிக்கலையோ எனக்காக இதை மட்டும் போட்டுக்கோங்க என்று வற்புறுத்தி போட வைத்திருந்தாள் தங்கமணி. விஷயம் கேட்டால் அம்பேல் தான். மாற்று மோதிரம் செய்துவிடலாம் என்று கூட யோசனை தோன்றியது.
அலுவலக வேலைகளில் மூழ்கியாகிவிட்டது. அப்போது ஓர் மடல். தங்க ஆபரணம் ஒன்று கிடைத்துள்ளது. அடையாளம் சொல்லி எடுத்துக்கொள்ளலாம். மின்னலென யோசனை. நம்ம மோதிரமா இருக்குமாவென ஒரு நப்பாசை. செக்யூரிட்டியிடம் சென்று நேற்று என்ன தங்க மோதிரம் கிடைத்ததா என கேட்டேன். ஆமாம் சார், இருங்க பெரிய செக்யூரிட்டியை கூப்பிடறேன் என கூப்பிட்டார். அவர் வந்து தலைமை அதிகாரியிடம் அழைத்து சென்றார். என்ன மோதிரம் எப்படி இருக்கும் எங்க விட்டீங்க என கேட்டார். நான் மோதிரம் தொலைந்தது மட்டும் தெரியும் எங்கே என்று தெரியாது என்றேன். அடையாளம் கேட்டார். அலைபேசியில் என் கைவிரலில் மோதிரமோடு இருந்த புகைப்படத்தை காட்டினேன் (அட எப்படி எல்லாம் உதவுது போட்டோ..
). ஆம் என் மோதிரம் அவர் கையில். இந்தாங்க சார் என்று கொடுத்தார். முந்தைய நாள் கழிவறையில் இருந்ததாக முனிசாமி என்றொரு துப்புரவு தொழிலாளி கொடுத்துள்ளார்.
நல்ல உள்ளம் மத்தியில் இருப்பது மகிழ்வாக இருந்தது.இருக்கின்றது.
-விழியன்